அம்மா உணவகத்திற்கு ஒரு சீரியஸ் கோரிக்கை

Image
  • என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 37

ஜெயலலிதா தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்திற்கு மேயர் சைதை துரைசாமி, ‘அம்மா உணவகம்’ என்று பெயர் சூட்டியதும் அதன் பெயரும் புகழும் மென்மேலும் பரவத் தொடங்கியது. சென்னையின் ஒவ்வொரு வார்டிலும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் நெருக்குதல் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இந்த நேரத்தில் ஒரு வித்தியாசமான கோரிக்கை ஒன்று சைதை துரைசாமிக்கு வந்தது. சென்னையின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் தன்னுடைய உறவினரை சிகிச்சைக்கு அனுமதித்திருந்த ஒரு முதியவர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

‘அரசு மருத்துவமனையில் என் உறவினரை சேர்த்திருக்கிறேன். அவருக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம், அவரை பார்த்துக்கொள்ளும் எங்களைப் போன்ற உறவினர்கள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். இதற்காக வெளியே போய் அலைவது மட்டுமின்றி நிறைய பணமும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, எங்கள் ஏழ்மை நிலைமையைப் புரிந்துகொண்டு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் ஒன்று தொடங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் வாழ்க்கைச் சூழல் எப்படிப்பட்டது என்பது சைதை துரைசாமிக்கு நன்றாகவே தெரியும். பெரும்பாலும் ஏழைகளே அங்கு சிகிச்சை பெறுகிறார்கள். எனவே சிகிச்சை பெறும் நோயாளிகள், அவரது பாதுகாவலர்கள் மட்டுமின்றி நலம் விசாரிக்க வரும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அம்மா உணவகம் உண்மையில் பயன் தருவதாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டார்.

அதேநேரம், சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் அம்மா உணவகம் தொடங்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டு பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன. எனவே கூடுதலாக அம்மா உணவகம் திறப்பதற்கு எப்படி முதல்வரிடம் அனுமதி வாங்குவது என்று மிகுந்த யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்கப் போனார் சைதை துரைசாமி. அங்கு என்ன நடந்தது தெரியுமா?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment