இப்போது எங்கே இருக்கிறார்?
இளம் ரத்தம் சூடானது என்பார்கள். அப்படித்தான் இளைஞன் ஒருவன் வேகவேகமாக வந்து ஞானகுருவிடம் பேசினான்.
‘’நான் கடவுளை பார்த்தேயாக வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லுங்கள்…” என்று கேட்டான்.
புன்னகைத்த ஞானகுரு, ‘’கடவுளை கண்டுபிடிப்பது சுலபம்தான். உனக்கு வழிகாட்டுவதற்கு ஒரு நாட்டுப்புறக் கதை சொல்கிறேன். அதன்பிறகு நீயே அவரை கண்டுபிடித்துவிடலாம்” என்றார்.
‘’சீக்கிரம் சொல்லுங்கள்’’ என்று அவசரப்பட்டான்.
‘’கடவுள் இந்த உலகில் செடி, கொடிகளையும் பறவை, விலங்குகளையும் படைத்து முடித்தார். அதுவரை அவரை எந்த உயிரினமும் தொந்தரவு செய்யவில்லை. அதனதன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தன.
அதன்பிறகு மனிதனைப் படைத்தார். அதன்பிறகுதான் அவருக்கு தினமும் ஏகப்பட்ட கட்டளைகள், வேண்டுகோள்கள், மிரட்டல்கள் வந்தன. ஏனென்றால் அப்போது எல்லோராலும் கடவுளைக் காண முடிந்தது.
’எனக்கு பாதுகாப்பான வீடு வேண்டும், எனக்கு இப்போது மழை வேண்டும், இரவிலும் வெளிச்சம் வேண்டும், எனக்கு மனைவி வேண்டும், எனக்கு நல்ல உணவு வேண்டும், ஆரோக்கியம் வேண்டும், எனது சகோதரன் மதிப்பதில்லை, அவனை கொல்வதற்கு சக்தி வேண்டும்’ என்று ஆளுக்கு ஒரு கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.
தினமும் முரண்பட்ட கோரிக்கைகள் வருவதை பார்த்த கடவுளுக்கு பயங்கர டென்ஷன். ஏன் இந்த மனிதர்களை படைத்தேன் என்று நொந்துகொண்டார். மனிதர்கள் பார்வையில் படாமல் எங்கேனும் ஒளிந்துகொள்ள ஆசைப்பட்டார்.
ஆகாயத்தில் அல்லது இமயமலை உச்சியில் போய் உட்கார்ந்துகொள்ள நினைத்தார். ஆனால், அவரது ஞானதிருஷ்டியில் எதிர்காலத்தில் மனிதன் அங்கெல்லாம் வருவது தெரிந்துபோனது. அதனால், மிகவும் யோசித்தவருக்கு பளீச்சென ஓர் உண்மை புலப்பட்டது. அந்த இடத்தில் ஒளிந்துகொண்டால், ஒரு மனிதனும் தேடி வரமாட்டான் என்பது புரிந்துவிட்டது. அதனால், அங்கே போய் ஒளிந்துகொண்டார்…’’
‘’அது எந்த இடம்” ஆர்வமாகக் கேட்டான் இளைஞன்.
‘’நீ கொஞ்சம் யோசித்தால் அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியும்…” என்றார் ஞானகுரு. அவசர புத்தியில் இருந்த இளைஞனுக்கு சிந்தனையே போகவில்லை.
‘’நீங்களே சொல்லிவிடுங்கள்” என்றான்.
‘’மனிதர்களின் மனதுக்குள் சென்று மறைந்துகொண்டார். ஏனென்றால், மனிதன் மனதைத்தான் கண்டுகொள்வதே இல்லை. நீ அங்கே தேடிப் பார். நிச்சயம் கடவுள் இருப்பார்” என்றார் ஞானகுரு.
‘’மனதுக்குள் எப்படி கடவுளைத் தேடுவது..?’’
‘’நீ யார், எதற்காக இந்த பூமிக்கு வந்திருக்கிறாய் என்பதை அறிந்துகொள்ள முதலில் முயற்சி செய். அந்த முயற்சி உன்னை கடவுளிடம் கொண்டுபோய் சேர்த்துவிடும்”
‘’அப்படியென்றால் நீங்கள் கடவுளை பார்த்துவிட்டீர்களா..?’’
’’பார்த்தேன் என்றாலும் இல்லையென்றாலும் மீண்டும் கேள்விகள் கேட்பாய். கேள்விகளை நிறுத்து… உன்னையே நீ அறிந்துகொள்’’ என்று முடித்தார் ஞானகுரு.