நல்லாத்தான் சொன்னாங்க!

Image

அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை

அந்தக்கால நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை மூட நம்பிக்கைகள் போன்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும்.

* கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றுடன் தூங்கக் கூடாது (கர்ப்பிணிப் பெண்களைக் கிராமத்து மக்கள் ஈருயிர்க்காரி (இரண்டு உயிர் உள்ளவள். தாய்க்கு ஒரு உயிர், தாயின் வயிற்றில் வளரும் சேய்க்கு ஒரு உயிர்; ஆக ஈருயிர்) என்று சொல்வார்கள். தாய் பட்டினி கிடந்தால் தாய்க்கு வயிற்றுப்புண் (அல்சர்) போன்ற குடல் நோய் வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச் சத்துக் கிடைக்காமல் குழந்தை ‘சோணிக்’ குழந்தையாகப் பிறக்கும்.)

* வீட்டில் நூலாம் படை அதிகமானால், தரித்திரம் வரும் (சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த நாட்டார் நம்பிக்கை வலியுறுத்துகின்றது.)

* படுத்துக் கொண்டு சாப்பிடவும் கூடாது; நீர் அருந்தவும் கூடாது (படுத்துக் கொண்டு சாப்பிட்டால், உணவுக்குழாயில் நாம் சாப்பிடும் உணவு அடைத்துக் கொள்ளும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.)

* சுடுகாட்டுப் பிணம் எரியும் புகையைச் சுவாசிக்கக் கூடாது. (அப்புகையில் அதிகப்படியான கார்பன் உள்ளது. எனவே அப்புகையைச் சுவாசிக்காமல் இருப்பது நல்லது. சுடுகாட்டுப் புகையைச் சுவாசிப்பதால் மனதில் ஏதேனும் கிலேசம் (பயம்) தோன்றவும் உளவியல் பூர்வமான வாய்ப்பு உள்ளது.)

* பகல் நேரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து உறங்கக் கூடாது (வயதுக்கு வந்த கன்னிப் பெண்கள் பகல் நேரத்தில் மட்ட மல்லாக்கப் படுத்து உறங்குவதால், அவளை அறியாமல் அவள் உடுத்தி இருந்த மாராப்பு சேலை விலகிவிட வாய்ப்பு உள்ளது. பகலில், வெட்ட வெளியில் மாராப்புச் சேலை, விலகிய நிலையில் கவர்ச்சியைக் காட்டியபடி படுத்து உறங்கும் கன்னிப் பெண்களை, அவ்வழியே செல்லும் ஆண் பார்க்க நேர்ந்தால் அவனுக்கு பால் உணர்வு ஏற்பட்டு, விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது)

* விளக்கு தானாகவே கருகி அணைந்து விடக் கூடாது. (விளக்கில் எண்ணை இருக்கும் வரை, எண்ணை எரியும். எண்ணை தீர்ந்து விட்டால் விளக்கின் திரியே எரிய ஆரம்பித்துவிடும். திரியும் எரியும் மட்டும் எரிந்து பின் விளக்கு தானே அணைந்துவிடும். விளக்கை ஏற்றும் முன் தேவையான அளவு எண்ணை விளக்கில் இருக்கிறதா..? என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற கருத்தையே இந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது)

* வெறும் உரலை ஆட்டக் கூடாது. (வெறும் உரலை ஆட்டினால், உரல்குழி ஆழமாகும் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும் அதிகமான சத்தம் ஏற்படும்)

* இடது கையால் கால் விரல்களைப் பிடித்தபடி சாப்பிடக் கூடாது (கால் நரம்புகளும், இடது கை நரம்புகளும் விரைப்பாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.)

* உள்ளங்கையில் சோறுபடாமல் சாப்பிடுவது உறவுகளுக்கு நல்லது. (உள்ளங்கையில் உள்ள அழுக்கு சாப்பாட்டுடன் வயிற்றினுள் செல்லாமல் இருக்கும். குறைவாகச் சாதத்தை அள்ளி மெதுவாக ரசித்துச் சாப்பிட்டால், உள்ளங்கையில் சாதம் படாது)

* மணப்பெண்ணுக்கு மாத விலக்கு ஏற்படும் நாளில் திருமணம் செய்யக் கூடாது. (இத்தனை நாள் உடல் உறவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை, திருமணம் ஆன அன்று இரவும் உடல்சுகத்திற்கு ஏமாந்து விட கூடாது என்பதால் இந்த நம்பிக்கையைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்)

* சிவப்பு எறும்பு சாரி, சாரியாக (சாரை, சாரையாக) வீட்டிற்குள் வரக் கூடாது (அதிகமாக வீட்டினுள் குப்பை கூழங்கள் கிடந்தால்தான் சிவப்பு எறும்பு சாரை, சாரையாக வீட்டினுள் செல்லும், சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது!)

* சாப்பிடும்போது வாழை இலையின் நடுநரம்பிற்கு மேற்பகுதியில் சமைத்த காய், கூட்டு முதலியவைகளைப் பரிமாறுவது நல்லது. (வாழை இலையின் நரம்பிற்கு மேற்பகுதி மெல்லியதாக இருக்கும், அதில் சோற்றைக் குழம்புடன் சேர்த்துப் பிசையும் போது தளிரான அந்த இலைப்பகுதி கிழிந்து விடும் எனவே அதில் கூட்டைப் பரிமாற வேண்டும். வாழை இலையின் நரம்பிற்கு கீழே உள்ள பகுதி சற்று முரடாக இருக்கும். அதில் சோற்றைப் பரிமாற வேண்டும்)

Leave a Comment