முதுமை ஊஞ்சலாடுகிறது.

Image

பிரபலங்களின் அனுபவங்கள்

இந்த பூமிக்குப் பாரமாக இன்னும் இருக்கேன், இந்த வயசுக்குப் பிறகு வாழ்ந்து என்ன செய்யப் போறோம், இன்னமும் உசுரை ஆண்டவன் எடுத்துக்க மாட்டேங்கிறான் – இவையெல்லாம் முதியவர்கள் வாயிலிருந்து பொதுவாக வரும் வார்த்தைகள்.

முதுமை என்றாலே சோகம் என்பது உண்மை இல்லை. உடல் நலக் குறைபாடு, தனிமை, வேலையின்மை, வெற்மை போன்றவை இளைய வயதினருக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இவை எல்லாமே முதுமையால் வருவதாக எண்ணுவது சரியில்லை.

உண்மை என்னவென்றால் முதுமை என்பது அனுபவத்தின் சுரங்கம். பிறர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை இல்லாத காலகட்டம், விரும்பியவனவற்றை எல்லாம் செய்வதற்குக் கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்பு. எனவே, இந்த காலகட்டத்தையும் ஒரு புதிய வாய்ப்பாக பார்ப்பவர்கள் முதுமையை அனுபவித்து வாழ்கிறார்கள். முதுமை என்பது ஒரு கண்ணாடி போன்றது. அதாவது, அதில் என்ன பார்க்கிறீர்களோ, அதுவே தென்படும். ஆனந்தத்தைப் பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும். சோகத்தைப் பார்த்தால் துயரம் கிடைக்கும்.

பிரபல எழுத்தாளர்களின் முதுமை அனுபவம் சிறப்பாகவே இருந்திருக்கிறது. பிரபல எழுத்தாளர்கள் முதுமை குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.  

  1. எழுத்தாளர் சுந்தர ராமசாமி

பதின்பருவத்துப் பிள்ளைகள் நம்மை முதியவர்களாக்குவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாமே தவறாகத் தோன்ற ஆரம்பிக்கும்போது முதுமை வந்துவிட்டது என்று அர்த்தம்
கழிப்பறைக் கதவை காலால் உதைத்து திறப்பது, குளித்து துவட்டிய ஈரத்துண்டை உடைமாற்றிய இடத்திலேயே மிதிபட விட்டுவிடுவது, சட்டையை கழற்றி புத்தகப்பையுடன் சேர்த்தே வீசுவது, சாப்பிட்ட தட்டை அங்கேயே உலரவிட்டுச் செல்வது, படுக்கையை தட்டாமல் நாள்கணக்கில் அதிலேயே தூங்குவது, சாத்தியமான உச்ச ஒலியில் சங்கீதம் கேட்பது என்பதெல்லாம் நாமே செய்தவைதான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
ஓர் எளிய அறிகுறி, பாண்டை ஒருகால் உள்ளேயும் மறுகால் வெளியேயும் இருக்கும்படி கழற்றி கழற்றிய இடத்திலேயே விட்டுவிட்டு பாய்ந்தால் நீங்கள் பதின்பருவம். இருகால்களும் வெளியே இருக்க கழற்றி கட்டிலிலோ மேஜையிலோ போட்டால் இளமை. கழற்றி கச்சிதமாக மடித்து வைத்தால் முதுமை.

ஆண்களுக்கு எத்தனையோ சுயசோதனைகள் இருக்கின்றன. கல்யாணங்களில் காகிதக் கவரில் நூறு ரூபாய்த்தாளை செருகி மொய் வைப்பதில், குடையை கையில் வைத்திருப்பதில் கூச்சமில்லாதிருத்தல் போன்றவை நடுவயதுக்கான அடையாளங்கள். வீட்டுக்குள் நுழையும்போது கனைத்துக்கொண்டோ செருப்பைத் தேய்த்துக்கொண்டோ செல்கிறீர்கள் என்றால் முதுமையின் அடையாளம்

  • எழுத்தாளர் சுஜாதா

நூற்70 வயதைத் தொட்டபோதும் படைப்பாற்றலில் முதுமை சுஜாதாவை தொடவே இல்லை. முதுமை என்ன செய்யும் என்பதை ரொம்ப ஜாலியாக ஒரு கட்டுரையில் சொன்னார். மெரினா கடற்கரையில் பெஞ்சில் உட்கார்ந்த ஒரு தாத்தா, (சுஜாதாவே அப்ப 70 வயசு தாத்தாதான்) ’யு ஆர் எ ரைட்டர். எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க பார்க்கலாம்’ என்றார். அவரைக் கட்டைவிரலால் மூக்கைத் தொடச்சொல்லி, மற்ற விரல்களை றெக்கை மாதிரி அசைக்க வைத்து, கைகளை ஏரோப்ளேன் மாதிரி விரிச்சு லேசா குதிக்கச் சொல்லிய பிறகு, ’இந்த மே 12 வந்தா வயசு 82’ என்றார் சுஜாதா. அந்தத் தாத்தாவுக்குத் தாத்தா ஆச்சர்யப்பட்டுப்போனார். ’என்ன ட்ரிக்கு இது’ என்றார் வியந்து. ’ஒரு ட்ரிக்குமில்ல சார். நேத்திக்குதான் இதே பெஞ்சில வந்து உட்கார்ந்து உங்க வயசு பர்த்டே எல்லாம் சொன்னீங்க. இப்ப மறந்துட்டீங்க.’ இதுதான் முதுமையின் சிக்கல்.

  • எழுத்தாளர் சிவசங்கரி

எழுத்தாளர் சிவசங்கரியின் முதுமை அனுபவம் குறித்து பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதியிருக்கும் பதிவு இது. என் சமகால எழுத்தாளர்களோடு அவ்வப்பொழுது நான் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.

அப்படி நான் அண்மையில் பேசிய ஒரு பெண் எழுத்தாளர் என்னை விட சீனியர்.நான் எழுத வந்த காலகட்டத்தில் அவர் தொடர்கதைகள் வராத வார இதழ்களே இல்லையென்று சொல்லலாம். அவருடைய வயது முதுமையைத் தொட்டுவிட்டாலும் குரலில் அதே இளமையும் கம்பீரமும் இருந்தது.

“எப்படி இருக்கீங்கம்மா?”

நான் கேட்ட இந்த சிறிய கேள்விக்கு அவர் சொன்ன நீண்ட பதிலில் நாம் எல்லோரும் கற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் ராஜேஷ் குமார். என்னோட வயசுக்கு ஏற்ற மாதிரி சின்ன சின்ன உடல் உபாதைகள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காம நாட்களை சந்தோஷமா கழிச்சுட்டிருக்கேன். இந்த முதுமையை சிலர் வேண்டாத விருந்தாளியாய் நினைச்சு, “எனக்கு வயசாயிடுச்சு இனிமே நான் என்ன பண்ண போறேன்னு எதிர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு நாளையும் பயந்து பயந்து வாழ்ந்துட்டு இருப்பாங்க.

எனக்கு அந்த பயமே கிடையாது. பயம்ங்கிறது நம்ம மனசுக்குள்ள இருக்கிற ஓட்டடை மாதிரி. அதையெல்லாம் தைரியமா நேர்மறை எண்ணங்களோடு துடைச்சு சுத்தப்படுத்தனும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நாம் எதுக்கும் எமோஷனல் ஆகக்கூடாது. பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.

மத்தவங்க வளர்ச்சியைப் பார்த்து நாம் பொறாமைப்படாமே அவங்களைப் பாராட்டணும். அப்படி பாராட்டும் போது அவங்க அடைகிற சந்தோஷத்தை பார்த்து நாம் சந்தோஷப்படணும். அந்த சந்தோஷம் தான் நம்ம உடம்பை ஆரோக்கியமாக வெச்சிருக்கும்.

மனசு சந்தோஷமா இருக்கும் போது, நமக்கு எந்த நோய் வந்தாலும் அது சீக்கிரமே குணமாயிடும். எனக்கு ரெண்டு தடவை ஹார்ட் அட்டாக் வந்தது. நான் பயப்படலை. அதுக்கு தீர்வான பைபாஸ் சர்ஜரியைப் பண்ணிகிட்டேன். இப்போ நல்லா இருக்கேன். ஹார்ட்ல எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

போன மாசம் மூட்டு வலி வந்து ரொம்பவும் கஷ்டப்பட்டேன். அப்பவும் சலிச்சுக்கலை. எத்தனை வருஷமா என்னை தாங்கி பிடித்து எத்தனையோ இடங்களுக்கு கூட்டிட்டு போன என்னுடைய கால்களுக்கு நன்றிதான் சொன்னேன். மூட்டுக்கும் முழங்காலுக்கும் போதுமான ஓய்வு கொடுத்துல இப்ப நிம்மதியா இருக்கேன்” என்றார்.

முதுமை என்பது அச்சம் தருவதல்ல, அனுபவிக்க வேண்டியது என்பதையே இவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

Leave a Comment