உருளைக்கிழங்கு தத்துவம்

Image

எந்த பாதையும் கடினம் அல்ல

அந்தக் கிராமம் முழுக்க உருளை விவசாயம்தான். உருளைக் கிழங்குகளை அறுவடை செய்ததும் அவற்றின் அளவு, எடைக்கேற்ப வகை பிரித்து, மூட்டைகளில் கட்டி, லாரி ஏற்றி மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். அந்தத் தரம் பிரித்தலுக்கே கிட்டதட்ட ஒருநாள் செலவாகும். ஆனால், ஒரே ஒரு விவசாயி மட்டும் உருளைகளை மெனக்கெட்டு தரம் பிரித்துக்கொண்டு இருக்காமல் மொத்தமாக லாரியில் அள்ளிப்போட்டு மார்க்கெட்டுக்குக் கொண்டுசெல்வார். மற்றவர்களுக்கு ஒருநாள் முன்னதாகவே சரக்குகளைக் காலி செய்துவிட்டு ஹாயாக காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்துஇருப்பார்.

‘நீங்கள் மட்டும் ஏன் உருளைகளைத் தரம் பிரிப்பது இல்லை?’ என்று அவரிடம் மற்ற விவசாயிகள் கேட்டார்கள். ‘நீங்கள் ஒருநாள் செலவழித்து உருளைகளை தரம் பிரித்து லாரியில் ஏற்றிக்கொண்டு வழுவழு சாலையில் மார்க்கெட்டுக்குச் செல்கிறீர்கள். நான் மொத்தமாக உருளைகளை லாரியில் அள்ளிப்போட்டு கரடுமுரடான மேடு பள்ளம் நிறைந்த பாதையில் லாரியை ஓட்டிச் செல்வேன். அந்த எட்டு மைல் காட்டுப் பாதையில் லாரி அலுங்கிக் குலுங்கிச் செல்லும்போது, பொடிஉருளைகள் தானாகவே அடியாழத்துக்கு இறங்கிவிடும். நடுவாந்திரமான உருளைகள் நடுவில் சிக்கி நின்றுகொள்ளும். கனமான பெரிய உருளைகள் ஜம்மென்று மேலே தங்கிவிடும். மார்க்கெட்டுக்குச் சென்றதும் அப்படியே அலேக் ஆக அள்ளிக் கொட்ட வேண்டியதுதான் பாக்கி!’_ என்றாராம்.

இந்த விதி உருளைக்கிழங்குகளுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் பொருந்தும். இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டு சமாளித்து எழுந்து நிற்பவர்களைத்தான் உலகம் வெற்றியாளர்கள் என்கிறது. சின்னச் சிக்கல்களைக்கூட எதிர்கொள்ளப் பயந்து பின்வாங்கிவிடுபவர்கள் பொடி உருளைகளாகத் தேங்கித் தங்கி விடுவார்கள். நீங்கள் செல்லும் பாதை கடினமாக இருக்கலாம், உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையாமல் போகலாம். காயங்களை மட்டுமே எதிர்கொண்டு இருக்கலாம்.  ஆனால், அவை எவையும் நிரந்தரமானவை அல்ல. ஒவ்வொரு நாளையும் கழிப்பதே சவாலாக இருந்தால், எந்தச் சவாலும் ஒருநாளுக்கு மேல் உங்களிடம் தாக்குப்பிடிக்காது.

உங்கள் பாதை கடினமாக இருக்கிறதே என்று தயங்கி மயங்காதீர்கள். அந்தப் பாதைதான் உங்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க வார்த்தெடுக்கும்

Leave a Comment