வாய் விட்டு சிரிக்க பணம் தேவை இல்லீங்க

Image

எல்லா நாளும் எல்லா நேரமும் சிரிக்கலாம்.

கடைசியாக எப்போது சந்தோஷமாக இருந்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். சின்ன வயதில் மகிழ்ச்சியாக இருந்தேன், திருமணத்துக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்தேன், பணம் இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்தேன் என்று ஏதேதோ சொல்வார்களே அதிகம்.

இதோ இன்று காலையில் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தேன். இன்று சாப்பிட்ட இட்லியின் சுவை மகிழ்ச்சியைக் கொடுத்தது, என்னை கடந்துசென்ற பெண்ணின் அழகு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று தினமும் அவ்வப்போது சாதாரணமாகக் கிடைக்கும் அனுபவத்தை, மகிழ்ச்சியாக மாற்றத் தெரியாமல்தான் மனிதகுலம் வாழ்ந்துவருகிறது.


பணம் இல்லாமல் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும், நோயுடன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும், பரீட்சையை வைத்துக்கொண்டு எப்படி மகிழ்ச்சி அடையமுடியும் என்று காரணங்களைக் காட்டி மகிழ்ச்சியைத் தள்ளிப் போடுபவர்களும் உண்டு. உண்மையில் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு பணமோ, பொருளோ, நேரமோ, நபர்களோ எதுவுமே தேவையில்லை. மகிழ்ச்சியை அனுபவிக்கும் எளிய மனதுதான் தேவை.

மனதில் உள்ளதா மகிழ்ச்சி

 ‘தினசரி வாழ்க்கையில் நாம் நல்ல மனநிலையில் இருப்பதும், அத்துடன் எந்த அளவு மன நிறைவுடன் இருக்கிறோம் என்ற இவ்விரு நிலைகளின் ஒரு கலவையே மகிழ்ச்சி’ என்கின்றன அறிவியல் ஆய்வுகள். ஆனால் பொதுவாக, மனிதர்களிடம், மகிழ்ச்சி எதுவெனக் கேட்டால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அர்த்தத்தைச் சொல்வார்கள். ஆனால் பலரோ, ‘எங்கப்பா மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது’ என சலித்துக் கொள்வார்கள்.
அந்தஸ்து, ஆஸ்தி, வாரிசு  என அனைத்தும் இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பவர்கள்தான்  அதிகம். அதற்கு கவலைதான் முக்கியக் காரணமாக இருக்கிறது. கவலைப்படுவதன்மூலம் நம்முடைய சரீரத்தில் ஒரு முழம் கூட்டவோ, குறைக்கவோ முடியுமா என்று கேட்கிறது பைபிள். உண்மைதானே? மனம் ஒரு கண்ணாடி; கவலை அதில் படியும் அழுக்கு; சிரிப்பு, அந்த அழுக்கைப் போக்கும் திரவம். ஆதலால், கவலை என்ற கரையானை உள்ளே விட்டுவிட்டால் அரித்துக்கொண்டுதான் இருக்கும். அதை அகற்றினால்தான் நிம்மதியாக இருக்க முடியும்.
அதற்கு வழி தெரியாமல் காசு செலவழித்து, காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் செல்பவர்கள் பலர். இன்னும் சிலர், மகிழ்ச்சியை அறிவியல் முறையில் கொண்டுவர லாஃபிங் தெரபி முதல் யோகா வரை மருத்துவமனைகளில் காத்துக் கிடக்கின்றனர். மக்களைச் சிரிக்கவைப்பதற்காக இதில் வசூல் வேட்டையே நடக்கிறது என்றால் இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்களே உணர்ந்துகொள்ள முடியும். இதற்கு கவலைதான் முக்கியக் காரணி என்றால், அதை இன்றையச் சூழ்நிலைகளும், வாழ்க்கை முறைகளும் ஏற்படுத்துகின்றன என்பதுதான் மிகக் கொடுமையான விஷயம்.

இருப்பதே மகிழ்ச்சி

 எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதைவிட எது இருக்கிறதோ, அதை நினைத்து சந்தோஷப்பட்டால் மகிழ்ச்சி நிறையவே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியம், சமூக ஆதரவு மற்றும் பெருந்தன்மை ஆகிய காரணிகளைக் கொண்டு மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியல் சர்வே எடுக்கப்படுகிறது. இதில், கடந்த ஆண்டு ஐ.நா. வெளியிட்ட பட்டியலில், சர்வதேச அளவில் மகிழ்ச்சி நிறைந்த நாடுகளில் பின்லாந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு 133-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 140-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

மகிழ்ச்சியான நாடு

எதிர்மறையான எண்ணங்களும், உதவி செய்யும் மனப்பான்மை குறைந்ததும், இந்தியா இந்தப் பட்டியலில் பின்தங்கியதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள்கூட, இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை என்பது கூடுதலான விஷயம். அமெரிக்கா 19-வது இடத்தையும், யுனைடெட் கிங்டம் 15-வது இடத்தையும், ரஷ்யா 68-வது இடத்தையும், சீனா 93-வது இடத்தையும், ஜப்பான் 58-வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான்  67-வது இடத்தில் உள்ளது.
நம் வாழ்வில், மோசமான கட்டங்களும் அனுபவங்களும் அவ்வப்போது வருவது வழக்கம். அப்போதெல்லாம் அதைக் குறித்துவைத்துவிட்டு, மனதில் இருந்து அதை விலக்கிவைக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்காக, பிடித்தமான புத்தகம் வாசித்தல் அல்லது பிடித்தமான செயல்களைச் செய்தால் உடனடி மகிழ்ச்சி  கிடைக்கும் என்கின்றனர்.  ‘தினசரி நம் வாழ்வில் எவ்வளவு மனநிறைவுடன் இருக்கிறோம், நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறோம் என்று நம்மால் உணரமுடிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியையும் உணரமுடியும்’ என்கிறார், பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அக்கேசியா பாரக்ஸ்.
மேலும் அவர்,  ‘மகிழ்ச்சி நிலைக்க நிறைவான மனம், எந்தவித மாறுதலாலும் பாதிப்படையாத மனம் என இந்த இருவகையான எண்ணங்களும் இணைந்தே இருக்க வேண்டும். வாழ்க்கை நிலை மாறலாம்; உணர்வுகளும் மாறிக்கொண்டே போகலாம். ஆனால், இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலையும், எதற்கும் அசைந்து கொடுக்காத மனநிலையும் மகிழ்ச்சியைத் தக்கவைக்கும்’ என்கிறார்.


வாழ்க்கையின் வளர்ச்சியைக் கூட்டுவதே மகிழ்ச்சி என்று சொன்னால், அது மிகையாகாது. முகமலர்ச்சியுடன் இருந்தால் எந்தக் காரியத்தையும் எளிதில் சாதித்துவிடலாம் ‘மலர்ந்த முகம் சாதாரண உணவையே விருந்தாக்கிவிடும்’ என்பதை மனதில்கொண்டு செயல்பட்டால், அனைவருக்கும் அனைத்து நாட்களும் மகிழ்ச்சியான நாட்களே!.

Leave a Comment