• Home
  • ஞானகுரு
  • எந்த மனிதருக்கும் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது

எந்த மனிதருக்கும் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது

Image

பரிசோதித்துப் பாருங்கள்

‘’பகுத்தறிவு என்றும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றும் நீங்கள் பேசி வருகிறீர்கள். ஆனால், கோயில்களில் இப்போது கூட்டம் பெருகுகிறது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உண்டியலில் பணம் கொட்டுகிறது. அப்படியென்றால் பக்தி அதிகமாகிவிட்டது, கடவுள் நம்பிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று தானே அர்த்தம்’’ என்று ஞானகுருவிடம் கேள்வி கேட்டார் மகேந்திரன்.

‘’கடவுள் நம்பிக்கை இருப்பதாக கண் முன் நீங்கள் பார்ப்பது எல்லாம் உண்மை அல்ல. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இந்த உலகில் அதிகம்’’ என்றார் ஞானகுரு.

’’அதெப்படி…. அதற்கு வாய்ப்பே இல்லை’’ என்றார் மகேந்திரன்.

‘’எல்லா மதத்தினரும் கடவுள் என்று ஒருவரை ஏற்றுக்கொள்கிறார்கள். கடவுளை நம்புகிறார்கள். ஆனால், சிவனை வணங்குபவர் விஷ்ணுவை கண்டுகொள்வதில்லை. கிருஷ்ணரை கும்பிடுபவர் சிவனை ஏற்பதில்லை. இந்து மதத்தினர் அல்லாவையும் இயேசுவையும் கடவுள் என்று நம்புவதில்லை. இஸ்லாமியர்களிடம் கேட்டால் அல்லாவைத் தவிர எல்லாமே சாத்தான் என்று சொல்வார்கள். கிறிஸ்தவம், சீக்கியம் என்று உலகில் உள்ள அத்தனை மதங்களும் அவர்களுடைய கடவுளைத் தவிர மற்றவர்களை முழுமையாக மறுக்கிறார்கள்.

எல்லோரும் ஒரே கடவுளை வெவ்வேறு வழிகளில் வணங்குகிறார்கள் என்பது தானே உண்மை. ஆனால், தாங்கள் வணங்கும் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் மற்றவர் வணங்கும் கடவுளை நம்பவில்லை என்றால் என்ன அர்த்தம்..? அவர்களும் மற்ற கடவுள்களுக்கு மறுப்பாளர்கள். அதாவது, தங்கள் கடவுளை மட்டுமே நம்புகிறார்கள் என்றால் அவர்கள் நாத்திகம் பேசுபவர்களை விட மோசமான கடவுள் மறுப்பாளர்கள்..

இன்னொரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள். எதிர்பாராத வகையில் நோய், தோல்வி, துன்பம் கிடைக்கும் நேரங்களில் எத்தனை சிறந்த பக்தியாளர் என்றாலும், அவர் வணங்கும் கடவுளை ஒரு கணம் சந்தேகப்படுகிறார். கடவுள் உண்மையில் இருந்தால் இப்படியெல்லாம் தன்னைப் போன்ற பக்திமானுக்கு பிரச்னை நடக்க விடுவாரா என்று அவநம்பிக்கை கொள்கிறார். அவர் கொஞ்சநேரம் கடவுள் மீது அவநம்பிக்கை கொள்கிறார் என்றாலும், அவரும் நாத்திகரே. இந்த வகையில் பார்த்தால், இந்த உலகில் முழு ஆத்திகர் என்று ஒருவர் கூட இருக்க மாட்டார்.

கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லும் நபர் மருத்துவமனைக்குச் செல்லாமல், மருந்துகள் சாப்பிடாமல் இருப்பதில்லை. தங்களை சாமியார் என்றும் கடவுளுக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக்கொள்ளும் காஞ்சி பெரியவர், பங்காரு அடிகளார், புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களும் நோய் வந்து செத்துத் தான் போனார்கள்.

இன்றைய தினம் தங்களை கடவுள் அவதாரமாக சொல்லிக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, பாபா ராம்தேவ் போன்றவர்களும் மருத்துவர்களை நம்பும் அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை வைப்பதில்லை.

கடவுள் என் கண்ணுக்குத் தெரிந்தார் என்று யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். ஒருவர் கூட உங்களை நம்ப மாட்டார்கள். ஏனென்றால், கடவுள் இங்கே வர மாட்டார் என்பதும் யாருடைய கண்களுக்கும் அவர் தெரிய மாட்டார் என்பதும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

கடவுள் எல்லாம் வல்லவர், அவர் நினைத்தால் எதையும் செய்வார், எல்லோரையும் அவர் காப்பாற்றுவார் என்கிறார்கள். அந்த கடவுளுக்காக மிகப்பெரிய கோயில் கட்டுகிறார்கள். கடவுளுக்கு வைரமும் தங்கமும் போட்டு அலங்காரம் செய்கிறார்கள். ஆனால், கடைசியில் எல்லாவற்றையும் பத்திரமாக லாக்கரில் பூட்டி வைக்கிறார்கள்.

இந்த உலகத்தையே பாதுகாக்கும் கடவுள், தன்னுடைய கோயிலையும் தன்னுடைய நகைகளையும் பாதுகாப்பார் என்று எந்த மனிதரும் நம்ப மாட்டார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், ‘கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது, நாங்கள் மனிதரைத் தான் நம்பவில்லை. அதனால் தான் கோயிலுக்கு பூட்டு போடுகிறோம்’ என்கிறார்கள்.

அப்படியென்றால் கடவுளை விட பெரியவனா மனிதன்..? மனிதனுக்கு கடவுள் என்பது ஒரு குருட்டு நம்பிக்கை, ஒரு நல்ல பொழுதுபோக்கு, அவ்வளவுதான்…’’ என்று சிரித்தார் ஞானகுரு.

யோசிக்கத் தொடங்கினார் மகேந்திரன்.

Leave a Comment