- மருத்துவர் புகழேந்தி
இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து திட்டங்களை மேற்கொண்டாலும்,நடைமுறையில் அது சாத்தியமில்லை என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக காசநோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. 2015ல் இந்தியாவில் இலட்சத்தில் 237 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது,2020ல் 197 பேர்/இலட்சம் எனக் குறைந்தாலும்,மேற்படி குறையாமல்,கடந்த 2-3 ஆண்டுகளாக,கட்டுப்பாட்டுத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும்,அதே நிலையில் தேங்கி இருக்கும் சூழல் நிலவுவதால்,2025க்குள் காசநோயை ஒழிப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை.

உலகில் உள்ள காசநோயாளிகளில் 4ல் ஒருவர் இந்தியர்.(இந்தியாவில் மொத்த பாதிப்பு 25 இலட்சம். உலக அளவில் பாதிப்பு-1.05 கோடி பேர்.) இந்தியாவில் ஆண்டுக்கு காசநோயால் 4,80,000 பேர் மடிகின்றனர். நாள் ஒன்றுக்கு1,400 பேர் மடிகின்றனர்.
காசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகள்,வறுமை போன்றவற்றை நீக்க திட்டங்கள் இருந்தாலும்,நோயை கண்டறிவதிலேயே பிரச்சனை நீடிக்கிறது. ஆண்டுக்கு 10 இலட்சம் பேருக்கு காசநோய் இருந்தும்,அது இந்தியாவில் கண்டறியப்படாமல்(Missing TB) உள்ளது.
பெரும்பாலான காசநோயாளிகளின் காசநோய் பாதிப்பு கண்டறியப்படாமல் இருப்பதுடன்,முறையாக கண்டறிந்து உறுதிசெய்யப்படாமல் போவதும்,முழு சிகிச்சை கிடைக்காமல் போவதும் இந்தியாவிலுள்ள முக்கிய பிரச்சனைகள்.
ஆரம்பத்திலேயே காசநோயை கண்டறிதல்(கையில் எடுத்துச் செல்லும் X கதிர் இயந்திரங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திநோயை சிறப்பாக கண்டறிதல்) ,முழுமையான சிகிச்சை அளித்தல், முழு சிகிச்சையை தொடர்ந்து பெற ஆதரவளிக்கும் திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசு முயன்றாலும்,காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் செயல்பாடுகளில் தொய்வும்,சிக்கலும் இருக்கத்தான் செய்கின்றன எனஅரசு அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.
சுருக்கமாக, ஆண்டிற்கு 10 இலட்சம் காசநோயாளிகள் கண்டறியப்டாத இந்திய சூழலில், காசநோய் பாதிப்பு/இறப்புகளை குறைக்க இன்னமும் கூடுதல் முயற்சிகளை அரசு கையாண்டால் மட்டுமே ஓரளவிற்காவது காசநோய் ஒழிப்பு சாத்தியம். காசநோய் கட்டுப்பாட்டிற்கு புதுத் திட்டங்கள் தேவை என்கிறார் மருத்துவர் புகழேந்தி.