என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 78
டெங்குக்கு மருந்து இல்லை என்று ஆங்கில மருத்துவர்கள் கை விரித்தாலும் சித்த வைத்தியம் மீது நம்பிக்கை வைத்து, சித்த வைத்தியர்களிடம் மருந்து தேடினார் மேயர் சைதை துரைசாமி. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.
சித்த வைத்தியத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு மருந்துகள் இருக்கின்றன என்று மகிழ்ச்சியான தகவலை சித்த வைத்தியர்கள் தெரிவித்தார்கள். அதிக செலவு வைக்காத நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு ஆகிய இரண்டும் டெங்கு நோயை முழுமையாகக் குணப்படுத்தும் என்று உறுதியாகச் சொன்னார்கள்.
சைதை துரைசாமிக்கு சித்த மருந்துகள் மீது முழு நம்பிக்கை இருந்தாலும், பொதுமக்கள் ஆரோக்கியத்தில் தனது நம்பிக்கை மட்டும் போதாது என்று நினைத்தார். அதாவது, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச் சாறுக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே மக்கள் தாங்களாக முன்வந்து பயன்படுத்துவார்கள் என்பதும் மேயருக்குப் புரிந்தது.
ஆகவே, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு ஆகிய இரண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. டெங்கு நோய்க்கு எதிராக இவை எப்படி செயல்படுகின்றன என்று ஆய்வு செய்து கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேயர் சைதை துரைசாமியின் நம்பிக்கை வீண் போகவில்லை. கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் முழுமையாகப் பரிசோதனை செய்து, ‘டெங்கு நோய்க்கு எதிராக நிலவேம்பு மற்றும் பப்பாளி இரண்டுமே வீரியத்துடன் நன்கு செயல் புரிகிறது, இதனை மக்கள் பயன்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை’ என்று உறுதி அளித்தது.
இந்த தகவல் மேயர் சைதை துரைசாமிக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆங்கில மருத்துவத்தால் சிகிச்சை அளிக்க முடியாத டெங்கு காய்ச்சலை தமிழ் மருந்து மூலம் புதிய புரட்சியை உருவாக்க விரும்பினார். உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த விரும்பி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரைந்தார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.