ஒரு பெண் கர்ப்பம் அடையும்போது எக்கச்சக்க கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் எவையெல்லாம் உண்மை என்று அறிந்துகொள்ளுங்கள்.
வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை
கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் பெரிய வயிறு என்றால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்.. வயிற்றின் அளவுக்கும் ஆண், பெண் என்ற பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை. பெண்ணின் உடலின் தன்மை, வயது, எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து போன்ற பல்வேறு காரணங்கள்தான் வயிற்றின் அளவை தீர்மானிக்கின்றன.
பெண்ணின் வயிற்றில் இருக்கும் கொழுப்பின் அளவைப்பொறுத்தும் வயிறு சிறிதாக அல்லது பெரிதாக தோற்றமளிக்கலாம். பொதுவாக இரண்டாவது பிரசவத்தின்போது பெண்களின் தசைகள் வலுவிழந்து காணப்படும் என்பதால் வயிறு சிறியதாகவே தென்படும். அதனால் பெண்ணின் வயிறுக்கும் ஆண், பெண் பாலினத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுதான் மருத்துவரீதியான உண்மை.
கர்ப்பிணிகளுக்கு வெந்நீர் ஆபத்து?
கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்காமல் பச்சைத் தண்ணீரில் குளிப்பதுதான் நரம்புக்கு நல்லது என்று சொல்லப்படுவதுண்டு. வெந்நீரில் குளித்தால் வயிற்றில் குழந்தைக்கு பாதிப்பு வரும் என்பார்கள். கர்ப்பிணிகள் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்கக்கூடாது என்பது உண்மைதான். குறிப்பாக 98 டிகிரிக்கு மேல் சூடான தண்ணீரில் குளிப்பது கர்ப்பிணிகளின் உடலுக்கு தீமை விளைவிக்கலாம்.
ஆனால் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை வெதுவெதுப்பான குளியல் போக்கிசவிடும். மிதமான வெந்நீரில்வெதுவெதுப்பான நீரில் குளிக்கும்போது கர்ப்பிணிகளுக்கு நல்ல நிம்மதியான சந்தோஷமான மனநிலை கிடைப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணியின் உடலில் அம்னியோடிக் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மையும் வெந்நீர் குளியலுக்கு உண்டு.
அதனால் பச்சைத் தண்ணீரில் குளிப்பதைவிட, வெதுவெதுப்பான நீரில் குளிப்பதுதான் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதுபோல் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குளிக்கவேண்டும் என்று கூறப்படுவதும் ஏற்கக்கூடியது அல்ல.. கர்ப்பிணிகள் தினமும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் நீச்சலடித்து குளிப்பதும் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான்.
கர்ப்பிணிகள் இருவருக்கு சாப்பிடவேண்டும்
கர்ப்பம் என்று உறுதியானதுமே வீட்டில் உள்ள பெரியவர்களின் அன்புத்தொல்லை ஆரம்பமாகிவிடும். இப்போது வயிற்றுக்குள் ஓர் உயிர் வளர்கிறது, அதனால் இனி இரண்டு உயிர்களுக்கு சேர்த்து சாப்பிடவேண்டும் என்று இரண்டு மடங்கு சாப்பாடு விழுங்கச்சொல்வார்கள். உண்மையில் இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டுமா என்பதை பார்க்கலாம்.
உடலுக்குள் இன்னொரு உயிர் வளர்வது உண்மை என்றாலும், அதற்காக இப்போது சாப்பிடுவது போல் இரண்டு மடங்கு சாப்பிடவேண்டும் என்பதில் உண்மை கிடையாது. இரண்டு மடங்கு உணவு எடுத்துக்கொள்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பிணிக்கும் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும் என்பதுதான் உண்மை.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் வழக்கத்தைவிட 20% அதிக உணவு எடுத்துக்கொள்வது போதுமானது. ஆனால் அனைத்து சத்துக்களும் நிரம்பிய சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து தாய்க்கு கூடுதல் கலோரிகள் தேவைப்படும் என்பதால், இப்போது சாப்பிடும் உணவுகளில் காய்கறி, புரோட்டீன் போன்றவை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தின் கடைசி மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும்போது, தாய்க்கு அதிக பசி எடுக்கலாம். அப்போது கூடுதலாக சாப்பிடலாமே தவிர, குழந்தைக்கு தேவைப்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகம் சாப்பிடுவது தேவை இல்லை.
முதல் குழந்தை தாமதமாகப் பிறக்கும்
முதன்முதலாக கர்ப்பம் சுமக்கும் பெண்களை பார்க்கும் பலரும், தலை பிரசவம் நிச்சயம் தாமதாமாகத்தான் நிகழும் என்று சொல்வது உண்டு. இதைக்கேட்டு கர்ப்பிணி பெண் பயப்படவே செய்வாள். பொதுவாகவே பிரசவங்களில் 35%, மருத்துவர்கள் குறிப்பிடும் நாட்களுக்கு முன்னதாகவே நடக்கிறது. 5% பிரசவம் மட்டும் சரியான நாட்களில் நடக்கிறது.
கிட்டத்தட்ட 60% பிரசவம் மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குப் பிறகே நடக்கிறது. மாதவிலக்கு சுழற்சியை பெரும்பாலான பெண்கள் துல்லியமாக கணக்கிட்டு சொல்வதில்லை என்பதுதான் இதற்கு காரணம். மிகச்சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு பிரசவம் சரியான நாட்களில் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. 28 நாட்களைத் தாண்டிய மாதவிலக்கு உள்ள பெண்களுக்கு தாமதமாகவும், 28 நாட்களுக்கு உட்பட்டு மாதவிலக்கு வரும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரும் பிரசவம் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.
மேலும் கர்ப்பகாலத்தில் கருவின் வளர்ச்சி, கர்ப்பிணியின் மனநிலை, கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொள்ளும் சத்துணவு போன்றவையும் பிரசவத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. அதனால் தலைபிரசவத்தில் மட்டும்தான் பிரசவம் தாமதமாகத்தான் நிகழும் என்பது முழு உண்மை கிடையாது.
பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடும்
ஒரு பெண்ணின் கரு கலைந்துபோவதற்கு ஏராளமான காரணிகள் உண்டு. ஆனால் கர்ப்பம் தரித்த பெண்கள் பப்பாளியை பார்ப்பதுகூட கருவை கலைத்துவிடும் என்று இப்போதும் பலர் எச்சரிக்கை செய்வதுண்டு. பப்பாளி மட்டுமின்றி அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் அபார்ஷன் ஏற்படுவதற்கு வழி வகுத்துவிடும் என்று பலரும் எச்சரிக்கை செய்வதுண்டு.
பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஊறும் விளைவிப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் பப்பாளி சாப்பிடுவது பெண்களின் கருப்பையில் சில எதிர்விளைவுகள் உண்டாக்குவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள், பிரசவம் முடியும் வரையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடாமல் ஒதுக்குவதே நல்லது.
என்றாவது ஒரு நாள் சிறிய அளவு பப்பாளி சாப்பிடுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பப்பாளியை வேகவைத்து அல்லது சாறு எடுத்துக் குடித்தால் குழந்தைக்கு நல்லது என்று சொல்வதிலும் உண்மை இல்லை. அதனால் இந்தப் பழங்களை கர்ப்பிணிகள் முழுமையாக ஒதுக்குவதே நல்லது. .
நெஞ்செரிச்சல் இருந்தால் நிறைய தலைமுடி
கர்ப்பிணிக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நிறைய முடி இருப்பதாக அர்த்தம் என்று சொல்வார்கள். இந்தக் கூற்றில் துளியளவும் உண்மை கிடையாது. ஏனென்றால் நெஞ்செரிச்சல் உள்ள பெண்களுக்கு தலையில் முடியே இல்லாமல் குழந்தை பிறப்பதுண்டு.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவது சகஜமான ஒரு பிரச்னை. ஆனால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முழுக்க முழுக்க ஜீரண கோளாறுதான் காரணமாக இருக்கிறது. எப்போதாவது ஒரு முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கவலைகொள்ளத் தேவையில்லை. அடிக்கடி நெஞ்செரிச்சல் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம். சரியான உணவு முறை, சரியான உறக்கம், நல்ல ஓய்வு போன்றவை இருந்தால் கர்ப்பிணிகளுக்கு நெஞ்செரிச்சல் அதிகம் ஏற்படுவதில்லை. அதனால் நெஞ்செரிச்சல் வந்தால், குழந்தைக்கு தலைமுடி அதிகம் இருப்பதற்கான அறிகுறி என்று அலட்சியம் செய்யக்கூடாது.
கர்ப்பிணி மல்லாந்து படுப்பது ஆபத்து
கர்ப்பிணி மல்லாக்கப் படுத்துத்தூங்கினால் வயிற்றில் வளரும் குழந்தை மூச்சுவிட திணறும் என்று சொல்வார்கள். மல்லாக்க படுத்துத் தூங்குவதற்கும் குழந்தை மூச்சு விடுவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதுதான் உண்மை. கர்ப்பிணி எப்படி படுத்துத் தூங்கினாலும் குழந்தையால் வசதியாக மூச்சுவிட முடியும். ஆனால் மல்லாந்து படுத்து தூங்குவதைவிட ஒரு பக்கம் திரும்பிப் படுப்பதுதான் நல்லது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
குறிப்பாக இடது கைப்பக்கம் திரும்பிப் படுத்தால் கருப்பை மற்றும் தொப்புள் கொடிக்கு ரத்தவோட்டம் அதிகரிக்கும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். அதனால் கர்பிணிகள் ஆரம்பம் முதலே ஒருபக்கம் சாய்ந்து படுத்துப் பழகுவது நல்லது. மல்லாந்து படுக்கும்போது திடீரென எழுவது பெரும் சிரமமாக இருக்கும். அதனால் முடிந்தவரை ஒரு பக்கம் படுப்பதே நல்லது.
கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது நல்லது
இன்றைய காலத்திலும் தமிழ் சினிமாவில் எந்தப் பெண் கர்ப்பம் அடைவதாக இருந்தாலும், அந்தப் பெண் மாங்காய் சாப்பிடுவதைத்தான் குறியீடாக காட்டுகிறார்கள். அதனால் பெண் கர்ப்பம் தரித்ததும் தேடிக் கண்டுபிடித்து மாங்காய் வாங்கித்தருவதை கணவன்மார்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கர்ப்பிணி என்றாலே மாங்காய் சாப்பிடவேண்டும் என்று சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது.
பொதுவாகவே உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும்போது, பற்றாக்குறையாக இருக்கும் சத்து எதில் கிடைக்கும் என்று தேடிப்பிடித்து எடுத்துக்கொள்வது உடம்பின் தன்மை. அந்த வகையில் கர்ப்பிணிக்கு உடலில் தாது உப்புக்கள் குறிப்பாக சோடியம் தட்டுப்பாடு ஏற்படும்போது மாங்காய் மீது ஆர்வமும் ஆசையும் உண்டாகிறது. ஆரோக்கியமான பெண்ணாக இருந்தாலும் கர்ப்பம் அடையும்போது, 20 சதவிகித ரத்தவோட்டம் அதிகரிப்பதால் கனிமம், தனிமம் மற்றும் தாது உப்புகளின் தேவை அதிகரிக்கிறது.
தேவைப்படும் சத்துக்களை பல்வேறு உணவுகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் மாங்காய் சாப்பிட்டால்தான் கர்ப்பிணி என்று அர்த்தம் அல்ல. அதேபோல் கர்ப்பிணிக்கு ஐஸ்க்ரீம் மீது ஆசை அதிகமாக இருக்கும் என்பதும் உடல் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட விஷயம்தான்.
காரமான உணவால் பிரசவ வலி வரும்
கர்ப்பம் அடைந்த கணத்தில் இருந்து ஒவ்வொரு பெண்ணும் எப்போது பிரசவம் நிகழும், எப்போது குழந்தையை கையில் வாங்கிக் கொஞ்சுவோம் என்ற எண்ணத்தில்தான் இருப்பாள். மருத்துவர் குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்காமல் தாமதமாகும் பட்சத்தில், சிலர் காரமான உணவு சாப்பிடச் சொல்லி பரிந்துரைப்பதுண்டு. காரமான உணவுகளை சாதாரண காலத்திலேயே உட்கொள்ளக்கூடாது எனும்போது கர்ப்ப காலத்தில் நிச்சயம் பயன்படுத்தக்கூடாது.
காரமான உணவு சாப்பிட்டால் பிரசவ வலி உடனடியாக ஏற்படும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. ஆனால் காரமான உணவு சாப்பிடும் பெண்களுக்கு டயோரியா ஏற்படுவதற்கும் வயிற்று வலி உண்டாகவும் வாய்ப்பு உண்டு. இந்த பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது, குழந்தையை காப்பாற்றுவதற்காக மருத்துவர் பிரசவம் நடத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வது நிகழலாம். அதனால் எந்தக் காரணம்கொண்டும் கர்ப்பிணிக்கு காரமான உணவு கொடுப்பது நல்ல ஆலோசனை கிடையாது. ஒருசில கர்ப்பிணிகளுக்கு காரமான உணவு எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடலாம்.