குழந்தை வளர்ப்புக் கலை
ஒரு குழந்தைக்குத் தாயாக, தந்தையாக இருப்பது ஒரு பேரானந்தம், பேரனுபவம். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அதைச் சரியாகக் கற்றுக்கொடுப்பதற்குத்தான் பாடங்களும் இல்லை, பள்ளிகளும் இல்லை.
ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் மற்றவர்களின் அனுபவத்தையும், பட்டறிவையும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது. இது ஒவ்வொரு நபருக்கும் உரித்தான ஒரு தனி வாழ்க்கைப் பாடம். சரியான திசையை அறிந்து, அன்பை அடிப்படையாகக் கொண்டு குழந்தை வளர்க்கும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். சில சமயம் நாம் தவறுகள் செய்துவிட நேரிடலாம். ஆனால் அதுவும் ஒரு வாழ்வில் பாடம் கற்றுக்கொண்டு பயணம் செய்ய வேண்டும்.
தனி உயிராய், முழு சுயத்தோடு இருப்பதால் தளிர்கள் வளர்கையில் நமக்கு ஆனந்தத்தோடு கூடவே ஆச்சரியங்களும் சோதனைகளும், வேதனைகளும் உண்டாவதும் இயற்கையே. நல்ல பெற்றோர்களாய் இருப்பதெப்படி, வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொள்வதற்கு முன்னரே, பிள்ளைகள் வளர்ந்துவிடுவார்கள்.
குழந்தைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்டுத்தான் வளரும் என்பதில்லை. ஒவ்வொரு உயிருக்கும் வளரும் தன்மையும், யோசிக்கும் தன்மையும் உண்டு. அதனால், தம் எல்லைகள் என்ன, விருப்பு வெறுப்பு, திறமை, பயம், மகிழ்ச்சி, சோர்வு என்று, தம் சுயத்தை ஆய்ந்து கொண்டு அந்த உயிர்களும் தம் பயணத்தைத் தொடரும்.
குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பு தேவை, அதேநேரம் செல்லமும் தேவை. இரண்டுமே அளவாக இருக்க வேண்டும். எது சரியான அளவு, எந்த நேரம் கண்டிப்பு வேண்டும் என்று எல்லா பிள்ளைகளுக்கும் பொதுவாய்க் கூறிவிட முடியாது.
ஆனால், ஒரு விஷயத்தில் தெளிவு வேண்டும். அதாவது, அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப்படும் குழந்தை ஒழுக்கமாக நடந்து கொள்ளலாம். ஆனால், அதனால் பிஞ்சும் மனதில் தோன்றும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. இது காலம் முழுவதும் தழும்பாக மாறி நிற்கும். அதனால், குழந்தையின் இயற்கையான துறுதுறுப்பும், உற்சாகமும் குலைந்து விடக்கூடும். அப்பா என்றாலே, பல குழந்தைக்கு அவரது கோபம் மட்டுமே நினைவுக்கு வருவது கொடுமைதானே!
கட்டாயத்திற்கும் அதீத கண்டிப்பான வளர்ப்பிற்கும் மறுகோடியில் இருப்பது அளவு கடந்த செல்லம். இரண்டும் தவறு. எந்தக் காரணத்திற்காகவும் குழந்தையை மிரட்டவோ அடிக்கவோ கூடாது என்பதை சிலர் அப்படியே கடைபிடிப்பது உண்டு. அதற்காக குழந்தைகள் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். இதுவும் தவறுதான்.
ஆம், குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகள் சொல்லித் தரப்பட வேண்டும். தெரிய வேண்டும். அப்படிச் சொல்லித் தந்த பிறகும், அவர்கள் அந்த எல்லைகளைப் பரிசோதிக்கும் வண்ணம் நடந்து கொள்வது இயல்புதான். எனினும் அப்போதும் உறுதியாக இருப்பதுதான் முக்கியம். அதாவது, எலக்ட்ரிக்கல் பொருட்களில் விளையாடுவதற்கு அனுமதி இல்லை என்றால், அதனை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். அப்படி நடந்துகொண்டால்தான் குழந்தைக்கு குழப்பம் வராது.
அதீத கண்டிப்பு, மிகையான செல்லம் என்று இரண்டு எல்லைகளையும் விட்டுவிட்டு இடையில் அளவான செல்லமும் கண்டிப்புமாக இருக்க வேண்டும். இதில் இரண்டு வழிமுறைகள். ஒன்று, பெரும்பாலான விஷயங்களில் கண்டிப்பும், சிறு சிறு இடங்களில் மட்டும் செல்லமுமாய் இருப்பது. இரண்டாவது, தொட்டதற்கெல்லாம் சட்டம் என்றில்லாமல், ஒரு சில விஷயங்களில் மட்டும் சரியான, ஆனால் உறுதியான எல்லைக் கோடு வகுத்து விட்டு, அதன் பிறகு எல்லாவற்றிலும் இயல்பாகவும், சற்றுக் குறும்புகளையும் அனுமதித்தும் வளர்க்கலாம். இந்த இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வது அவரவருடைய விருப்பம். இரு பெற்றோரில் ஒருவர் ஒன்றையும் மற்றவர் இன்னொன்றையும் கூடத் தெரிவு செய்யலாம்.
இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி. அன்பைப் பொழிந்து வளர்க்கவேண்டியது அவசியம். கண்டிப்போ, செல்லமோ எதுவாக இருந்தாலும் அடிப்படையில் பெற்றோர் நம் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வளரும் குழந்தைகள் இனியவர்களாக வளர்கிறார்கள். தம் மீது வைக்கப் படும் அன்பை உலகத்தின் மீது பிரதிபலிப்பவர்களாய் அமைகிறார்கள்.
அம்மா அன்பு செலுத்துபவராகவும், அப்பா கண்டிப்பு காட்டுபவராகவும் இருப்பது நல்லது என்று நிறைய பெற்றோர்கள் நினைப்பதுண்டு. அது சரியான அணுகுமுறை இல்லை. ஆம், அம்மா, அப்பா இருவரும் அன்பு காட்டுவார்கள், சேட்டை செய்தால், தவறு செய்தால் கண்டிப்பார்கள் என்ற எண்ணம் குழந்தையிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் இருவரிடமும் அன்பும், பாசமும் இருக்கும்.
குழந்தை வளர்ப்பு பெற்றோர்களின் சுய வளர்ச்சியிலும் ஒரு முக்கிய அங்கம் என்பதை உணர்ந்து கொண்டால், எல்லாம் சுகமே!