உடலுக்குத் தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மை உண்டு. அதாவது இயற்கையுடன் இணைந்து உடல் செல்களைப் புதுப்பித்துக் கொள்கிறது. குடிக்கும் போதும் குளிக்கும் போதும் தண்ணீர் மருந்தாகவும் செயலாற்றுகிறது. காடுகள், கடற்கரை, மலைப்பகுதியில் செல்லும்போது காற்று மருந்தாக இதமளிக்கிறது. அதே போன்று மண்ணும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் மனிதர்கள் தினமும் கை நிறைய மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும், கிராமப்புற மனிதர்கள் மருந்துகள் இல்லாமல் அல்லது மிகவும் குறைவான மருந்துகளுடன் வாழ்வதையும் கண் முன்னே பார்க்க முடிகிறது. இதற்கு அவர்களுடைய வாழ்க்கை முறை மட்டுமல்ல, மண்ணும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதே மண் மருத்துவம்.
ஆரோக்கியத் தன்மை பொதிந்து கிடக்கும் மண்ணில் வெறும் காலுடன் நடப்பதே மண் மருத்துவம். அதற்காக நகரத்தில் வெறும் காலுடன் நடப்பது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம். நகர்ப்புறங்களில் என்றால் கடற்கரை, பூங்கா, மைதானம் போன்ற இயற்கை சூழ் இடங்களைத் தேடி தேர்வு செய்ய வேண்டும். சிமிண்ட் தளம், மொட்டை மாடி, தார் ரோடு, மார்பிள் போன்றவற்றின் மீது நடப்பதன் மூலம், மண்ணின் இயற்கைத் தன்மையை உடல் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.
புல் தரையில் நடக்கலாம். காலில் செருப்பு, சாக்ஸ் அணியாமல் வெறும் காலுடன் நில்லுங்கள். நடங்கள். ஓடுங்கள். அதிக பலன் தேவை என்று விரும்பினால் காலை நீட்டி மண்ணில் அமருங்கள் அல்லது படுங்கள். மண் குளியல் என்பது தோல் நோய்களுக்கு மட்டும் அல்ல. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காகவே செய்கிறார்கள். மண் தரையில் நடப்பதும் ஒரு குட்டி மண் குளியல் போன்றது தான்.
மண்ணுக்கும் உடம்புக்குமான தொடர்பு குறைந்தது அரை மணி நேரமாவது நீடிக்க வேண்டும். அப்போது தான் மண்ணின் தன்மையை உடல் உணரவும் சத்துக்களை எடுத்துக்கொள்ளவும் முடியும். எனவே, கடற்கரைக்குச் சென்றால் அரை மணி நேரம் அலைகளுக்கு அருகே அமர்ந்து வேடிக்கை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மண் மனிதரை தழுவத் தொடங்கும். மண்ணில் அமர்ந்த பத்தாவது நிமிடத்திலே உங்கள் சுவாசம் சீரடைவதை உணர முடியும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் தளர்வதையும் மனம் லேசாக மாறுவதையும் அனுபவிக்க முடியும்.
அதனால் தான், மன அழுத்தம், மனத்தளர்வு ஏற்பட்ட நபர்களை ஏதேனும் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றுவரச் சொல்கிறார்கள். அங்குள்ள காற்றும் மண்ணும் உடலின் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதால் மனம் லேசாக மாறிவிடும். அதனால் தேவையற்ற அச்சம், பயம் விலகுவது மட்டுமின்றி அறிவாற்றல் மேம்படுகிறது. தொடர்ந்து மண்ணில் நடைப்பழக்கம் மேற்கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையும் ஆரோக்கிய சிந்தனையும் ஏற்படுவதால் எரிச்சல், கோபம் ஆகியவைகளில் இருந்து விடுதலை பெறவும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியும்.
மண்ணின் சக்தி மனிதருக்குள் நுழைவதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் சுறுசுறுப்பு உண்டாகிறது. இதனால் குறிப்பிட்ட விஷயத்தில் அதிக கவனம் செலுத்த முடியும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அதோடு இதயத்தின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் உண்டாகும். ரத்தவோட்டத்தில் நீர்மத் தன்மை அதிகரிப்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. மண்ணில் நடை பழகும் நபர்கள் விரைவில் நல்ல தூக்கத்தில் விழுகிறார்கள். ஆழ்ந்த தூக்கம் என்பது உடலில் மறைந்திருக்கும் நோய்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டது.
இயற்கையுடன் உடல் நேரடியாக இணைவதன் காரணமாக நேர்மறை ஆற்றல் உடலுக்குக் கிடைக்கிறது. மண்ணில் இருக்கும் உயிர் சத்துக்கள், சூரிய ஒளியின் தன்மை, காற்றின் தன்மையும் உடலுடன் இணைகிறது. இப்படி இயற்கையுடன் ஆழ்ந்த நட்புணர்வு உண்டாவதால் மனம் மலர்கிறது. உடல் புத்துணர்வு அடைகிறது.
அதிக வெயில் அல்லது அதிக குளிர் நேரத்தில் மண்ணில் நடை பழக வேண்டாம். இதமான காலை அல்லது மாலை நேரத்தைத் தேர்வு செய்யுங்கள். மண்ணுக்கும் உடம்புக்கும் தொடர்பு உருவாக்குங்கள். இயற்கை உங்களை கட்டித் தழுவுவதை உணர்ந்து மகிழ்ச்சி அடையுங்கள். இந்த மகிழ்ச்சியே உங்களுக்கு ஆரோக்கியம் கொண்டு வரும்.
அதேநேரம், காலில் புண் அல்லது நீரிழிவு நோயினால் அதிக பாதிப்பு அடைந்தவர்கள் வெறும் காலுடன் ஒருபோதும் நடை போடக்கூடாது. இது அதிகபட்ச எதிர்மறை விளைவுகள் உண்டாக்கிவிடும்.