• Home
  • உறவுகள்
  • விவாகரத்துக்குக் காரணமாகும் அம்மாக்கள்…?

விவாகரத்துக்குக் காரணமாகும் அம்மாக்கள்…?

Image

அன்பு விலங்கு ஜாக்கிரதை

நல்ல அம்மாக்கள் உண்டு. நல்ல மாமியார் இல்லை என்று சொல்வார்கள். பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் மாமியார் என்பது சிக்கலான கதாபாத்திரம். அவர்கள் பிள்ளையை உயர்த்தி மருமகன, மருமகளை அசட்டையாகக் கையாள்வதாலே பல பிரச்னைகள் உண்டாகின்றன.

’நான் வளர்த்த மாதிரி யாருமே பிள்ளையை வளர்த்திருக்க மாட்டாங்க… என் பிள்ளைக்கு எது பிடிக்கும்னு எனக்குத் தான் தெரியும், அவனுக்கு எதுவுமே சொல்லித்தராம வளர்த்துட்டேன்’ என்றெல்லாம் டயலாக் பேசாத அம்மாக்களே கிடையாது. அந்த அம்மாக்கள் தான் இன்று விவாகரத்து பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகும் பிள்ளை மீது அக்கறை செலுத்துவதும் கவனித்துக்கொள்வதும் பாசம் என்று நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அம்மாவின் பின் சுற்றிக்கொண்டு இருந்தது போலவே வளர்ந்த பிறகும், திருமணத்திற்குப் பிறகும் சுற்றிவர விரும்புவதில்லை. அதனாலே திருமணம் முடிந்ததும் கொஞ்சம் விலகிப் போகிறார்கள்.

ஆனால், ‘என் பிள்ளையை பேசவே விடமாட்டேங்கிறா, பிரிக்கிறா… என்ன சொல்லித்தர்றாளோ தெரியலை, என்கிட்டே முகங்கொடுத்தே சரியா பேசுறதில்லை. அவ, என்னத்தை வைச்சாலும் அமைதியா சாப்பிட்டுப் போறான், எனக்கு இதையெல்லாம் பார்க்க சங்கடமா இருக்கு’ என்று எல்லா குற்றத்தையும் மருமகள் மீது திணிக்கிறார்கள். இதில் சண்டை வரும் நேரத்தில் தன் பக்கம் நின்று பிள்ளை பேசவேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

மகனைப் பெற்ற அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மைகள் இருக்கின்றன.

  • திருமணம் முடிந்துவிட்டதால் அம்மா மீது பிள்ளைக்குப் பாசம் குறைந்துவிடாது. அம்மா மீது பாசமாக இருப்பது போலவே மனைவி மீதும் பாசமாக இருக்க முடியும். ஒருவரால் எத்தனை நபர் மீதும் மாறாத பாசத்துடன் இருக்க முடியும் என்பதை நம்புங்கள். தன் மகனுடைய அன்பை பங்கு போட ஒரு பெண் வந்துவிட்டார் என்ற பொறாமை குணம் இருப்பவர் மட்டுமே, முன்பு போல் என்னிடம் மகன் பேசுவதில்லை என்று புலம்புகிறார்கள்.
  • புதிய மனைவியை கவனிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு என்பதால் அவருக்கு மனைவியே முன்னுரிமை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றவர், வளர்த்தவர் என்றாலும் திருமணத்திற்குப் பிறகு நீங்களே தள்ளி நிற்பது நல்லது. அப்படி நிற்கவில்லை என்றால் பிள்ளையே தள்ளி நிறுத்திவிடுவார்.
  • ஆண் திருமணத்திற்கு முன்பாகவும் பெற்றோர்களிடம் மிகவும் நெருங்கிப் பேசுவது, பழகுவது இருக்காது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தான் அப்படி மாறிவிட்டான் என்று அம்மாக்களே நினைத்துக்கொள்கிறார்கள். இதுவே, நிறைய பிரச்னைக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
  • தன்னை மதிப்பது போலவே தன் மனைவியையும் அம்மா மதிக்க வேண்டும் என்றுதான் ஆண் நினைக்கிறான். பிள்ளையைப் பெற்றவள் என்பதால் தன்னை மருமகள் மதிக்க வேண்டும் என்று அம்மாக்கள் நினைக்கிறார்கள். இந்த வித்தியாசத்தை அம்மாக்களே புரிந்துகொள்ள வேண்டும்.
  • முன்பு போலவே அலுவலகம், நட்பு, பணம் தொடர்பான எல்லா விஷயங்களையும் தன்னிடம் மகன் பேசவேண்டும் என்று அம்மாக்கள் நினைக்கிறார்கள். மனைவியிடம் பேசிவிட்டாலே போதும் என்பது தான் ஆணின் எண்ணம். இதை திட்டமிட்டு மறைப்பதாக நினைத்து அம்மாக்கள் வருந்துகிறார்கள்.
  • திருமணத்திற்கு முன்பு சம்பாதிக்கும் பணத்தை மகன் என்ன செய்கிறான் என்பது அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம். திருமணத்திற்குப் பிறகு இந்த விஷயம் மனைவிக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்பதே பிள்ளைகளின் விருப்பமாக இருக்கிறது. அம்மா, அப்பாவையும் பணம் விஷயத்தில் தள்ளியே வைப்பார்கள். ஆகவே, இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியது அம்மா தான்.
  • அம்மா, அப்பாவுக்கு சாப்பாட்டுக்கும் மருந்துக்கும் பணம் கொடுத்தால் போதும் என்பது மட்டுமே மகனின் எண்ணமாக இருக்கும். அம்மாக்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள். மனைவி, பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவது மட்டுமே தன்னுடைய கடமை என்பது மகனுக்குத் தெரியும். இதையும் அம்மாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • பிறரிடம் மனைவியை அறிமுகம் செய்வதற்கே மகன் விரும்புவார். வெளியிடங்களிலும் மனைவிக்கே முக்கியத்துவம் கொடுப்பார். இது தான் சரியான அணுகுமுறை என்பதை அம்மாவே புரிந்துகொள்ள வேண்டும். அம்மாவை மறந்துட்டான் என்று அழுது புலம்புவதில் அர்த்தமே இல்லை.

திருமணமான வீடுகளில் அம்மாக்களால் பிரச்னை வருவது போன்று அப்பாக்களால் அத்தனை பிரச்னைகள் வருவதில்லை. ஏனென்றால், ஆண்கள் உணவு தவிர வேறு எந்த விஷயத்துக்கும் அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை. பிள்ளையின் வாழ்க்கையில் நுழைந்து பார்க்கவும் விரும்புவதில்லை. எனவே, அம்மாக்கள் எல்லோரும் அப்பாக்களாக மாறினால் மட்டுமே மகனுடைய திருமண வாழ்க்கை சுகமாகக் கழியும்.

மருமகளைப் பற்றி அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும் இருக்கின்றன. இதனை மறப்பதே சண்டைக்கும் பிரச்னைக்கும் காரணமாகிறது.

  • மகன் மீது தன்னை விட மருமகளுக்கே அதிக உரிமை உள்ளது என்பதை அம்மாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • மருமகள் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதால் அவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லிக்கொடுப்பதற்கு அவசியம் இல்லை.
  • தங்கள் வீட்டு உணவு, தங்கள் குடும்ப பழக்கம் போன்றவைகளை மருமகள் மீது திணிக்கக்கூடாது.
  • மகன் மற்றும் மருமகள் சம்பளத்தில் அவர்களுக்கே முழு உரிமையும் உண்டு. அதை கணக்குக் கேட்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.
  • பேரக் குழந்தைகள் மீதும் மருமகளுக்கே முழு உரிமை உள்ளது. எனவே, பிள்ளையை அவர் இஷ்டப்படி வளர்ப்பதைக் கேள்வி கேட்கக் கூடாது.
  • எங்க மாமியார் என்று பழைய கதைகளைப் பேசாதீர்கள். காலம் மாறிவிட்டது. நீங்கள் உங்கள் மாமியாருக்கு அடிமையாக இருந்தது போன்று இன்றைய பெண்கள் இருக்க மாட்டார்கள், இருக்கவும் கூடாது.

எனவே, திருமணம் முடிந்ததும் தனிக்குடித்தனம் வைத்துவிடுவது மிகவும் நல்லது. கூட்டுக் குடித்தனம் என்றால் அவர்கள் வாழ்க்கையை நுழைந்து பார்க்காமல் வேடிக்கை மட்டும் பாருங்கள். அவர்களாக சந்தேகம் கேட்டால் மட்டும் பேசுங்கள். தவறு செய்தாலும் பரவாயில்லை, அவர்களே தவறை உணர்ந்து திருத்திக் கொள்வார்கள்.

மருமகளுடன் சண்டை போடுவதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கு முயல்கிறீர்களே தவிர, மகனுக்கு நீங்கள் நன்மை செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உண்மைகள் புரியாமல் மகன் நன்மைக்காகவே சண்டை போடுவதாகச் சொல்கிறார்கள். அதை மகனையும் நம்ப வைக்கிறார்கள். ஒருசில ஆண்கள் அம்மாவின் எமோஷனல் பிளாக்மெயிலில் சிக்கிக்கொள்கிறார்கள். அம்மாவுக்கும் மனைவிக்குமான முக்கியத்துத்தை புரிந்துகொள்ளாத ஆணுடன் வாழ முடியாது என்றே பெண் நினைக்கிறாள். அதனாலே சண்டை பெரிதாகி விவாகரத்து வரை செல்கிறது.

அன்பு என்ற பெயரில் பிள்ளைகளுக்கு விலங்கு மாட்டாதீர்கள். மகன் ஆனந்தமாக பறக்கட்டும்.

Leave a Comment