அம்மா, மகனுக்கு செல்போன் சண்டை

Image

ஞானகுரு கவுன்சிலிங்

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போன்று இப்போது எல்லா வீட்டிலும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான மோதலுக்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட் போன்களே இருக்கின்றன. எந்த நேரம் பார்த்தாலும் செல்போனும் கையுமா பிள்ளை இருப்பதாக என்று புகார் சொல்லாத பெற்றோர்களே இல்லை. ஒரு சில வீடுகளில் இது எல்லை மீறுகிறது.

அப்படித்தான் விக்கி என்ற விக்னேஷ்வரனை அவனது அம்மா மாதவி அழைத்துவந்தார். 9ம் வகுப்பு படிக்கிறான். நன்றாகப் படிக்கும் மாணவன். ஆனால், கையில் செல்போனை எடுத்தால் கீழே வைப்பதே இல்லை. நாளைந்து நண்பர்கள் இணைந்து பப்ஜி ஆட்டம் விளையாடத் தொடங்கினால், அதை முடிக்கும் வரையிலும் யார் என்ன பேசினாலும் காதில் வாங்கவே மாட்டான் என்றெல்லாம் அவனது அம்மா குறை கூறினார்.

அதன் பின்னரே முக்கியமான விஷயத்துக்கு வந்தார். ‘’போன மாசம் பப்ஜி கேம் ஆடிட்டு இருந்தான். சாப்பிட்டு விளையாடுன்னு சொன்னேன். அவன் காதுல வாங்கவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கோபத்தை அடக்க முடியாம அவன் செல்போனை பிடுங்கிட்டேன். உடனே ஆங்காரத்தில் கத்திக்கிட்டு வந்தவன் கையில இருந்த என் போனைப் புடுங்கிட்டு என்னையும் கீழே தள்ளிட்டான்.

அப்புறம் ஸாரி கேட்டான். அப்பாகிட்டே சொல்லாதம்மா, இனிமே நான் ஒழுங்கா இருக்கேன்னு சொன்னான். பத்து நாளு கொஞ்சம் அமைதியா இருந்தான். அப்புறம் திரும்பவும் அதே மாதிரி விளையாட ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னாலும் முறைக்கிறான். போனை பிடுங்குனா அடிச்சிடுவானோன்னு பயமா இருக்கு,.. ஒரே பிள்ளைன்னு ரொம்பவும் செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டேன். இவங்க அப்பா பிரைவேட் கம்பெனியில் வேலை. காலையில போனா ராத்திரி வந்து படுக்கிறார். அவர்கிட்டே சொன்னா அடிச்சுப்புடுவார், செல்போனை புடுங்கிட்டு அப்புறம் கொடுக்கவே மாட்டார். இவனை நினைச்சு ரொம்பக் கவலையா இருக்கு.. என் ஃப்ரெண்ட் உங்களைப் பத்தி சொன்னாங்க, அதான் கூட்டி வந்திருக்கேன்’’ என்றார்.

அம்மா சொல்வதை விக்கி கவனமாகக் கேட்டபடி அமர்ந்திருந்தான்.

‘’அம்மாவை கீழே தள்ளிவிடுற அளவுக்கு செல்போன் முக்கியமாயிடுச்சா தம்பி…’’

‘’கேம் ஃபினிஷ் பண்ற நேரத்துல வந்து அம்மா போனை புடுங்கிட்டாங்க… அந்த கோபத்துல தள்ளிவிட்டேன். என் ஃப்ரெண்ட் மாரிஸ், பழனி எல்லாம் ராத்திரி 2 மணி வரைக்கும் விளையாடுறாங்க. அவங்க வீட்ல எல்லாம் இதை சாதாரணமா எடுத்துக்கிடுறாங்க. அம்மா தான் ரொம்பவும் சீன் போடுறாங்க…’’ என்றான்.

மீசை முளைக்கும் அரும்பு பருவம். இப்போது என்ன பேசினாலும் அது மூளையில் பதியாது. பிடிவாதம் அதிகரிக்கும். கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர் மீது வெறுப்பும் கோபமும் அதிகரிக்கும். அதற்காக கண்டிக்காமல், தண்டிக்காமல் விடுவது மிகப்பெரும் சிக்கலாகிவிடும்.

‘’விக்கி, அம்மாவின் கவலைக்கு நீயே ஒரு தீர்வு சொல் பார்க்கலாம்…’’ என்று பொறுப்பை அவன் தலையில் சுமத்தினேன்.

‘’இப்ப தினமும் 1 மணி நேரம் செல்போன் தர்றாங்க… கேம் ஆரம்பிச்சா முடிய ரெண்டு மணி நேரத்துக்குப் போகுது. என் ஃப்ரெண்ட்ஸ் யாரும் சேரலைன்னா நானே சரியா ஒரு மணி நேரத்துல குடுத்துடுறேன். மத்த பசங்க வீட்ல போய் பார்க்கச்சொல்லுங்க. முழு நேரமும் போன் குடுக்குறாங்க…..’’

‘’நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை முதலில் அவனிடம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்று மாதவியிடம் கேட்டேன்.

‘’ஒரு மணி நேரத்துல செல்போனை குடுக்குறேன்னு அவன் சொல்றது பொய். ஒரு நாள் கூட அப்படி குடுத்ததே இல்லை. எப்படியும் ரெண்டு மணி நேரமாவது இழுத்துடுவான். புடுங்குனா கோபத்துல பிடிவாதமா இருக்கான். இதனால படிப்பு கெட்டுப் போயிடும்னு பயமா இருக்கு. கையில் செல்போன் இருக்கிறப்ப, யார் என்ன பேசினாலும் காதுல வாங்க மாட்றான், வீட்டுக்கு யார் வந்தாலும் பேசவே மாட்டான். கையில போன் இருக்கும்போது அவன் வேற மனுஷனா இருக்கான். இப்பவே இப்படின்னா, இன்னும் வளர்ந்துட்டா எப்படி மாறுவானோன்னு பயமா இருக்குது… நல்லா படிக்கலைன்னா இவனும் அவங்க அப்பா மாதிரி அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்…’’

‘’அன்னைக்கு கோபத்துல தள்ளிவிட்டேன். அதையே பெருசா பேசுறாங்க…’’ என்று வாய்க்குள் முனங்கினான்.

’’நீங்க எவ்வளவு நேரம் செல்போன் பயன்படுத்துறீங்க..?’’

‘’நான் வேலைக்குப் போகலை சார். வீட்டுல தான் இருக்கேன். காலையிலே வேலை முடிஞ்சுடும். ராத்திரி கொஞ்சநேரம் டி.வி. பார்ப்பேன். செல்போன்ல நான் கேண்டிகிராஸ் விளையாடுவேன், பொழுதுபோகலைன்னா சொந்தக்காரங்ககிட்டே பேசிக்கிட்டு இருப்பேன்…’’

‘’எவ்வளவு நேரம் தினமும் செல்போன் யூஸ் பண்றீங்க…’’

‘’நாலைஞ்சு மணி நேரம் இருக்கும்…’’

‘’பொய் சார்… எப்பப் பார்த்தாலும் செல்போன்ல யார்கிட்டேயாவது பேசிக்கிட்டுத்தான் இருப்பாங்க… இல்லைன்னா கேண்டிகிரஸ் விளையாடுவாங்க, வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் பாப்பாங்க’’

‘’உங்க அப்பா எவ்வளவு நேரம் போன் பார்ப்பார்…’’

‘’அவர் வேலையை விட்டு வர்றதுக்கு ராத்திரி 9 மணி ஆயிடும். அதுக்குப் பிறகு டி.வி. பார்ப்பார். கொஞ்சநேரம் போன் பார்த்துட்டுத் தூங்கிடுவார்…’’

அம்மா அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் மகனும் தைரியமாகப் பயன்படுத்துகிறார். இப்போதைக்கு பப்ஜி விளையாடும் விக்கி அடுத்தடுத்து வேறு தவறான விஷயங்களுக்குள் நுழைவதற்குள் மீட்க வேண்டும். அதைவிட செல்போன் இல்லாமல் இருக்க முடியும் என்பதை உணரச் செய்வதே முக்கியம் என்பது புரிந்தது.

‘’உங்களுக்கு விரதம் இருப்பதில் நம்பிக்கை இருக்கிறதா..?’’

‘’சஷ்டி விரதம் இருப்பேன்’’ என்றார்.

‘’அது போல் நீங்கள் இருவரும் செல்போன் விரதம் கடைபிடிக்க வேண்டும்…’’ என்றேன்.

‘’அதென்ன செல்போன் விரதம்..?’’ என்று இருவரும் கேட்டார்கள்.

‘’விக்கிக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் செல்போன் பயன்பாடு. எத்தனை மணி நேரம் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற நாட்களில் செல்போன் தொடவே கூடாது. நீங்கள் விக்கி பள்ளியில் இருந்து வந்தபிறகு உங்கள் செல்போனை பயன்படுத்தக் கூடாது. போன் வந்தால் மட்டும் சுருக்கமாகப் பேச வேண்டும்……’’ என்றேன்.

‘’வாரத்தில் ஒரு நாளா… அதெல்லாம் முடியாது சார்…’’ என்று விக்கி சட்டென கோபமானான்.

அவன் கோபத்தைப் பார்த்த மாதவி, ‘’நான் இருக்கிறேன் சார்……’’ என்றார்.

‘’அம்மா இருந்தா இருக்கட்டும், நான் இருக்க மாட்டேன்’’ என்றான்.

‘’சரி, உங்கள் சொல் கேளாத பிள்ளையை வீட்டில் வைத்துக்கொள்ள அவசியம் இல்லை. விக்னேஷ்வரனை ஹாஸ்டலில் சேர்த்துவிடுங்கள். அவன் செல்போனை தொட முடியாமல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..’’

‘’எங்க ஸ்கூல்ல ஹாஸ்டல் எல்லாம் கிடையாது’’ என்றான் ஜாலியாக.

‘’சென்னையில் விக்னேஷ்வரன் படிக்க வேண்டாம். நாமக்கல் அல்லது சேலத்தில் சேர்த்துவிடுங்கள். காலை 5 மணிக்கு எழுப்பி படிக்க வைத்து இரவு 10 மணிக்கு தூங்கச் சொல்வார்கள். மூன்று வருடங்களில் உங்கள் பையன் நிறைய மதிப்பெண் வாங்கியும் விடுவான், ஒழுக்கமாகவும் வளர்க்கப்படுவான்..’’

விக்னேஷ்வரன் பயப்படுவான் என்று நினைத்தால், அவனது அம்மா தான் பயந்தார்.

‘’ஒத்தப் பிள்ளை, அவனை அங்கே அனுப்பிட்டு இங்க நான் என்ன செய்றது?’’

‘’உங்கள் மகன் நல்லவனாக வளரவேண்டும் என்று நினைத்தால் இந்த கண்டிப்பு அவசியம். வீட்டில் உங்களால் அவனை ஒரு அளவுக்கு மீறி கண்டிக்க முடியாது. அதனால்,  அடுத்த வாரம் உங்கள் கணவரை அழைத்து வாருங்கள். நான் பேசிப் புரிய வைக்கிறேன். இந்த முரட்டுத்தனத்தை இப்போது கட்டுப்படுத்தவில்லை என்றால் பின்னர் சிக்கலாகிவிடும்…’’ என்று மிகவும் கண்டிப்புடன் சொன்னேன்.

சீரியஸாகவே ஹாஸ்டலில் சேர்த்துவிடுவார்கள் என்ற பயம் இப்போது தான் விக்கிக்கு வந்தது. ‘’சார், ஒரு நாள் விரதம் வேண்டாம், வேணும்னா ஒரு நாள் விட்டு ஒரு நாள் போன் வைச்சுக்கிறேன்’’ என்றான்.

’’அது சரிப்படாது விக்கி. ஒரு நாள் என்றால் ஒரு நாள் மட்டும் தான்…’’ என்றேன் உறுதியாக.

கைகளைப் பிசைந்துகொண்டவன், ‘’சரி, ரெண்டு நாளாவது குடுக்கச் சொல்லுங்க’’ என்றான்.

இரண்டு நாள் என்று முதலில் சொல்லியிருந்தால் இப்போது நான்கு நாட்களாக மாறியிருக்கும். இரண்டு நாட்கள் என்பது ஓரளவு ஏற்கத்தக்கது. அதோடு செல்போன் பயன்படுத்தாத நாட்களில் தான் எதையும் இழக்கவில்லை என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியும் என்பதால் சம்மதம் சொன்னேன்.

’’எந்த இரண்டு நாட்கள் செல்போன் வேண்டும் என்பதை அந்தந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை முடிவு செய்யுங்கள்…’’ என்று சொல்லிவிட்டு விக்னேஷ்வரனை வெளியே அனுப்பிவிட்டு மாதவியிடம் பேசினேன்.

‘’குழந்தைகள் இப்போது மிகவும் சுதந்திரமாக வளர்கிறார்கள். அதேநேரம், உங்களைப் பார்த்தே வளர்கிறார்க்ள். நீங்கள் கத்தினால் அவர்களும் கத்துவார்கள். நீங்கள் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள். விக்கியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று அவன் முன்பு ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களைக் கண்டு அவனே அஞ்ச வேண்டும். நீங்கள் அவனுக்குப் பயப்படுவது தெரிந்துவிட்டால், இன்னும் அதிகமாக கோபப்படுவான். முரட்டுத்தனமாக மாறியே விடுவான்.

அவனுக்காக நீங்களும் செல்போனை தியாகம் செய்ய வேண்டும். அவன் பள்ளியில் இருந்து வருவதற்குள் பேசுவதை எல்லாம் பேசிவிடுங்கள். அவன் இருக்கும் நேரத்தில் யார் போன் செய்தாலும், ‘என் பையன் படிக்கிறான், காலையில் பேசுங்கள்’ என்று அவன் முன்னே பேசுங்கள்.

அடம் பிடித்தால் ஒரு போதும் கண்டுகொள்ளவே வேண்டாம். சாப்பாடு கிடையாது என்று உறுதியுடன் சொல்லுங்கள். கோபத்தை சாப்பாடு மீது காட்டாதே என்று கெஞ்சவே செய்யாதீர்கள். உண்மையாகவே ஒரு முறை சேலம் அல்லது நாமக்கல் போய் ஒரு பள்ளியில் விசாரித்துவிட்டு வாருங்கள். அப்போது தான் ஹாஸ்டலில் சேர்த்துவிடுவார்கள் என்ற பயம் அவனுக்கு எப்போதும் இருக்கும். 

அவனுடைய செல்போன் விரதத்தை அவன் நண்பர்களிடமும், உங்கள் சொந்தக்காரர்களிடமும் பெருமையுடன் சொல்லி வையுங்கள். மத்த நாளில் அவன் செல்போன் கேட்கவே மாட்டான் என்று அவனை பாராட்டுங்கள். இந்த பாராட்டு மட்டுமே அவனுக்கு மருந்து. அவனுடைய நன்மைக்காகவே இதனை செய்கிறோம் என்றும் சொல்லுங்கள். கல்லூரியில் சேர்ந்த பிறகு உன்னுடைய கையில் செல்போன் கொடுத்துவிடுவோம் என்றும் நம்பிக்கை கொடுங்கள்.

இந்த விரதத்தை ஒருபோதும் உடைக்காதீர்கள். பரீட்சை காரணமாக செல்போன் எடுக்கவில்லை என்றால், அந்த நாளை அடுத்த வாரத்துக்குச் சேர்த்துக் கொடுக்காதீர்கள். மது போதையில் இருக்கும் அத்தனை ஆபத்துகளும் செல்போனிலும் இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் வந்திருப்பதால் அவனை நிச்சயம் மீட்டுவிட முடியும். இந்த செல்போன் போதையிலிருந்து அவனை மீட்பதற்கு நீங்கள் முழு மனதுடன் துணையாக இருக்க வேண்டும்’’ என்று சொல்லி அனுப்பினேன்

அடுத்த மாதம் மாதவி மட்டும் வந்தார். ’’அவ்வப்போது கெஞ்சுவான். ஆனாலும் நான் செல்போன் தருவதே இல்லை. முதல் ஒரு வாரம் ரொம்பவும் அப்செட்டாக இருந்தான். அவன் நண்பர்களிடம் விரதத்தை சொல்லிவிட்டதால், அவர்கள் அந்த ரெண்டு நாளில் மட்டும் அவனை விளையாடக் கூப்பிடுகிறார்கள். மற்ற நாட்களில் சிரித்துப் பேசுகிறான்…’’ என்று சந்தோஷமாகச் சொன்னார்.

‘’என்ன காரணம் என்றாலும் நாமக்கல் பள்ளி என்ற அஸ்திரத்தையும் செல்போன் விரதத்தையும் உடைத்துவிடாதீர்கள்…’’’ என்று சொல்லி அனுப்பினேன். அதன் பிறகு மாதவி வரவேயில்லை.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு கவுன்சிலிங்

Leave a Comment