பாரம்பரிய விளையாட்டு – அம்புலி
‘நெலா பாரு கண்ணு… நெலாவ பாத்துக்கிட்டே சாப்பிடலாமா’ எனச் சொல்லி, தாம் கொண்டுவந்திருக்கும் குழைந்த சோற்றை இன்றும் சில தாய்க்குலத்தினர், தன் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு எடுத்து ஊட்டுவதைப் பார்த்திருப்போம். அந்தக் குழந்தை வாயை இறுக்க மூடிக்கொண்டு வேறு பக்கம் திருப்பிக்கொண்டாலும், விடாமல் தாய்க்குலத்தினர், ‘இந்தா பாரு! நீ சாப்பிடலைன்னா, அந்த நெலாவுக்குக் கொடுத்துருவேன். நெலா! ஓடிவா! வந்து இத வாங்கிக்க’ என்று நிலவை நோக்கியவாறு அவர்கள் சொல்வார்கள்.
மேலும், ‘அச்சச்சோ… ஆசை ஆசை… அந்த நெலாவுக்கு! இது எம் பாப்பாவுக்கு’ என்று கூறியவாறு நீட்டிய கையைக் குழந்தையின் வாய்க்கருகில் கொண்டுசென்று ஊட்டுவார்கள். அதைக் கேட்டு ஒருவழியாக குழந்தையும் சாப்பிட ஆரம்பிக்கும். குழந்தைகளைச் சாப்பிடவைப்பதற்காக, நிலாவை ஒரு கருவியாக நம் முன்னோர்கள் பயன்படுத்தினாலும், உண்மையில் அது அறிவியலுடன் சம்பந்தப்பட்டது என்கின்றனர், ஆய்வாளர்கள்.
ஆம், குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள்கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள்கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவுக் குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது. இது, முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது. நிலவைக் காட்டி சோறு ஊட்டும்போது, குழந்தை மேல்நோக்கிப் பார்க்கையில், தொண்டை மற்றும் உணவுக் குழல் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது. மேலும், தொண்டைக் குழலில் கீழ்நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. இதனால், நிலாவைக் காட்டி சோறு ஊட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்கிறார்கள், அவர்கள்.
இதுதவிர இந்த நிலா, குழந்தைகள் மற்றும் பெண்கள் எனச் சங்க இலக்கியங்கள் தொட்டு இன்றுவரை பல கவிஞர்களுடைய கற்பனைகளிலும் இடம்பெற்று வருகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே நிலாவுக்கும் குழந்தைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றே சொல்லலாம். குழந்தைகள் நிலா வெளிச்சத்தில் விளையாடுவதும், சாப்பிடுவதும் அவர்களுக்கு ஓர் எல்லையில்லா ஆனந்தத்தைத் தருகிறது. அதுபோல், ‘நிலா நிலா ஓடிவா…’ என்கிற பள்ளிப் பருவ பாடலும் இறுதிவரை அவர்களின் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. மேலும், நிலாவைப் போன்று அவர்களை துள்ளிக் குதித்து ஓடி விளையாட வைக்கிறது. ஆம், இப்படி குழந்தைகளுடன் ஒன்றியிருக்கும் நிலாவுக்கு அம்புலி என்கிற பெயரும் உண்டு.
கலித்தொகையில் அம்புலி காட்டல் குறித்த பதிவு இடம்பெறுகிறது.அதுபோல் பழமொழி நானூறு பாடல்களிலும் அம்புலி குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. அகநானூறு செய்யுளில்கூட, ‘நிலாவே… நீ நேரில் வந்தால் உனக்கு பால் தருகிறேன்’ என்று தலைவி ஒருத்தி பாடுவதாக, ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. அதுபோல் கம்பராமாயணம் யுத்தகாண்டத்தில் ராவணன் தன் மகனுக்கு அம்புலி குறித்து சொல்வதுபோல் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.
இது ஒருபுறமிருக்க… மறுபுறம், அம்புலி விளையாட்டு என்ற பெயரில் நம் முன்னோர்கள், குழந்தைகளை தன் காலில் வைத்து விளையாடியுள்ளனர். இந்த விளையாட்டும், நம் பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுவாக, அன்றைய காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் இந்த விளையாட்டு அதிகமாக விளையாடப்பட்டது. ஆனால், தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில், குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தைச் செலவழிக்காத சூழ்நிலையில், இதுபோன்ற விளையாட்டுகள் எல்லாம் நம்மைவிட்டு மறைந்துபோய்விட்டது என்றே சொல்லலாம்.
இந்த விளையாட்டு, பெரும்பாலும் அழும் குழந்தைகளைச் சிரிக்க வைப்பதற்காக விளையாடப்படுகிறது. அதாவது, அழும் குழந்தையை காலில் கிடத்தி விளையாட்டு காட்டுவதுதான் அம்புலி என்று நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுவர். பிள்ளைத்தமிழ் இலக்கிய உறுப்பான அம்புலி குழந்தையின் 15-ம் மாதத்திற்கு உரியது. இப்பருவத்தில் குழந்தையோடு விளையாட வரும்படி நிலாவை அழைப்பது மரபு. பெரியவர் பாடலைப் பாட குழந்தையும் பின்பற்றிக் கூறுவதாக விளையாட்டு தொடரும்.
அம்புலி அம்புலி எங்க போன?
ஆவாரங்காட்டுக்கு
ஏன் போன?
குச்சி ஒடிக்க…
ஏன் குச்சி?
குழி நோண்ட…
ஏன் குழி?
பணம் பொதைக்க…
ஏன் பணம்?
மாடு வாங்க…
ஏன் மாடு?
சாணி போட…
ஏன் சாணி?
ஊடு மொழுவ…
ஏன் ஊடு?
பிள்ளைகள் வளர…
ஏன் பிள்ளைகள்?
ஆத்து மணலுல அஞ்சி வெளையாட…
கோரப்பாயில கொஞ்சி வெளையாட!
இப்படி, பெரியவர்கள் குழந்தையை காலில் கிடத்தி, பாட்டுப் பாடி அவர்களை மகிழ்விப்பர். அதனால், இது குழந்தைகளின் பாரம்பரிய விளையாட்டாக இருக்கிறது. இவ்விளையாட்டின் மூலம் குழந்தைகள் கேட்கும் திறனும், பேசும் திறனும் அதிகரிக்கிறது. நமது கிராமப்புற பண்பாடு பழக்கவழக்கங்களையும் குழந்தைகள் அறிந்துகொள்ள உதவுகிறது.