என்ன செய்தார் சைதை துரைசாமி – 189
மேயர் சைதை துரைசாமி இயற்கை ஆர்வலர் என்பதால் அனைத்து வகையான மரம், செடி, கொடிகள் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார். அதனாலே மக்களுக்கு செம்மரத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆசைப்பட்டார். செம்மரம் எனப்படும் ரெட் சான்டல் மிகவும் கெட்டித்தன்மையும் நீடித்த உழைப்பும் தரக்கூடியது என்பதால் கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும், இசைக் கருவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது.
இதுதவிர, முக்கியமான ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதற்கும் செம்மரம் பயன்படுகிறது என்பதால், செம்மரத்திற்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக தேவை நிலவுகிறது. இது ஒரு நல்ல பணப் பயிராக கருதப்படுகிறது. ஆனால், மக்களுக்கு இந்த மரத்தின் மகிமையும் மதிப்பும் தெரியவில்லை.
அதனாலே சைதை துரைசாமி அவரது மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் செம்மரக் கன்றுகளைத்தான் நன்றிக்கு அடையாளமாக வழங்கினார். அன்றைய தினம் மட்டும் 1 லட்சம் செம்மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. நிறைய பணம் தரும் செம்மரத்தை வளர்த்து மக்கள் பணப் பயன் பெறவேண்டும் என்று நினைத்தார் சைதை துரைசாமி. அதனாலே செம்மரக் கன்றுகளை அவரது குடும்ப விழாவில் வழங்கினார்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பயன்படும் வைப்பு நிதி போன்று ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் செம்மரம் பயன்தரக் கூடியது என்ற புதிய சிந்தனையை மக்களிடம் கொண்டுசென்றார் மேயர் சைதை துரைசாமி. அவரது கனவை நனவாக்கும் வகையில் சென்னையில் மட்டும் 6.5 லட்சம் செம்மரம் வளர்ப்பதற்குத் திட்டமிடப்பட்டது. சென்னையை பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானம் என்றாலும், அதனால் மக்களுக்கு ஆரோக்கியம், கொசு ஒழிப்பு, பணப்பயன் போன்ற பல்வேறு பயன்களும் கிடைக்கும் வரையில் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்