இஸ்லாமியர்கள் போர்க்கொடி
இஸ்லாம் மதத்துக்குரிய சொத்துக்களை பராமரிப்பதற்கு 1954-ம் ஆண்டு வக்பு சட்டம்இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நியமிக்கப்பட்டு, நிர்வகித்து வருகின்றன. இந்த சட்டத்தில்சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுநர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ்உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கைவைத்திருந்தனர். இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை செய்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு சொத்துகளுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டத் திருத்த மசோதாவில், வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பதை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தெளிவாக கூறுகிறது. அதனால், அரசமைப்புச் சட்டத்தில் எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையின மக்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 1954 இல் பிரதமர் பண்டித நேருவின் முயற்சியால் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்தை பறிக்கிற வகையில் அச்சட்டத்தை திருத்துவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது.
இத்திருத்தத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தில் உள்ள முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்கிய சொத்துக்களான வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் இச்சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு தலையிட முற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இருந்த வக்பு சட்டத்தில் உள்ள உறுப்பு 40 இன்படி எது வக்பு சொத்து என்பதை வக்பு வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். இத்திருத்தங்களின் மூலம் வக்பு வாரியத்தின் சொத்துக்களை தனது சொத்து என்று முடிவெடுக்கிற அதிகாரத்தை பறிக்க முயல்கிறது. மேலும், வக்பு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் பெண்களையும், இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களையும் அதில் உறுப்பினர்களாக நியமிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இது அப்பட்டமாக மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாகும்.
இந்த சொத்து குறித்து ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து முடிவு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. ஆனால், ஏற்கனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தின்படி இதை முடிவு செய்வது வக்பு தீர்ப்பாயம் தான். இந்தியா முழுவதும் வக்பு வாரியத்திற்கு 8.7 லட்சம் எண்ணிக்கையிலான சொத்துகளில் 9.4 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனுடைய மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இதன்படி வக்பு சொத்துகள் இந்தியாவில் மூன்றாவது பெரிய உரிமையாளர் என்ற நிலையில் இருக்கிறது.
இத்தகைய சொத்துகளை நிர்வகிக்கிற உரிமையை வக்பு வாரியத்திலிருந்து அபகரித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக பறிக்கிற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சியை முஸ்லிம் அமைப்புகளும், இந்தியா கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. இஸ்லாமிய சமுதாயத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதுகுறித்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தையோ அல்லது வக்பு அமைப்புகளையோ, அதைச் சார்ந்த தலைவர்களையோ கலந்து பேசாமல் தன்னிச்சையாக எதேச்சதிகாரமான முறையில் சிறுபான்மையின சமுதாயத்திற்கு எதிராக வக்பு சட்ட திருத்தத்தின் மூலம் கடுமையான அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது.
வக்பு வாரியத்தின் சொத்துகளை முடக்குகிற முயற்சி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இச்சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இஸ்லாம் அமைப்புகள் ஒன்றுகூடி ஆலோசனை செய்துவருகிறார்கள். விரைவில் போராட்ட அறிவிப்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.