எம்.ஜி.ஆரின் தனித்துவமான கட்சி விதி ரகசியம்

Image

சைதை துரைசாமி பெருமிதம்

இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 108வது பிறந்த நாளையொட்டி, உணர்வுபூர்வமான கட்டுரையொன்று தினத்தந்தி நாளிதழில் எழுதியிருக்கிறார் முன்னாள் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி.

அந்த கட்டுரையில், ‘’சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்து வழிகாட்டிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், தன்னால் செய்யக்கூடியதை மட்டுமே பேசினார். பேசியதை எல்லாம் செய்துகாட்டினார். திரையுலகில் தனக்கென ஒரு தனிப்பாதை உருவாக்கி புரட்சிநடிகராக, புரட்சித்தலைவராக மாறினார். அரசியலில் தனித்துவ சாதனைகள் படைத்து மனிதரில் புனிதராக வரலாறு படைத்தார். 

‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ என்று எம்.ஜி.ஆர். 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘மலைக்கள்ளன்’ படத்தில் பாடிய பாடல் வரிகள் இன்றைக்கும் பொருத்தமானவை. 

“கரிகாலன் குறிவைத்தால் தவற மாட்டான். தவறுமானால் குறிவைக்க மாட்டான்’’ என்று மர்மயோகி படத்தில் பேசிய பஞ்ச் டயலாக்கை, தனது சினிமா, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் நிஜமாக்க நடத்திக் காட்டியவர்.   

நாடோடி மன்னன் படத்தில், ‘’நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கின்றவன். பெரிய இடத்தில் உள்ளே புகுந்திருப்பதால் என் உருவம் மாறி இருக்கிறது. என் உள்ளம் மாறவில்லை’’ என்றும், ‘’நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்’’ என்று பேசியதை எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து செயல்படுத்திக் காட்டியவர் புரட்சித்தலைவர்.

அந்த படத்தில் ’’வேலை கொடு, சோறு போடு’’ என்று மக்கள் போராடுவார்கள். அந்த போராட்டத்துக்கு விடை போன்று நிஜமாகவே சத்துணவு போட்டார், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகளுக்கு சத்துணவு டீச்சர், ஆயா வேலைகளில் முன்னுரிமை வழங்கினார்.

திருக்குறள், நாலடியார், திருகடுகம், ஆத்திச்சூடி போன்ற நீதிநூல்களை எல்லாம் திரைப்பட பாடலாக, வசனமாக மாற்றி மக்களுக்கு வழிகாட்டிய படிக்காத வாத்தியார் எம்.ஜி.ஆர். சினிமாவிலும், கட்சியிலும் ஆட்சியிலும் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மாற்றங்கள், திட்டங்கள் எல்லாமே புதுமையானவை, புரட்சிகரமானவை. வேறு யாராலும் சிந்திக்கவும் முடியாத அளவுக்குத் தொலைநோக்குப் பார்வை கொண்டவை.

இதற்கு உதாரணமாக அ.தி.மு.க. உருவாக்கப்பட்ட நேரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த ஒரு வித்தியாசமான கட்சி விதியை மட்டும் இன்றைய தினத்தில் சுட்டிக்காட்டுகிறேன். ஏனென்றால், இது இந்திய அரசியலில் யாரும் சொல்லாத விதி. அமெரிக்க அதிபர் தேர்வு போன்று கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் புதிய சிந்தனை.

அண்ணா தி.மு.க.வுக்கு பேரறிஞர் அண்ணாவின் பாதையில் அனைத்து சட்டதிட்டங்களையும் உருவாக்கினார். ஆனால், 43வது விதி மட்டும் வித்தியாசமாக இருந்தது. ‘கழக சட்டதிட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஆனால், இந்த சட்டதிட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழகப் பொதுச்செயலாளரை கழக அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ உரியதல்ல’ என்பதே அந்த புதிய விதி.

நான் அப்போது புரட்சித்தலைவரின் பாதுகாப்பில் இருந்தேன். அவரை தினமும் சந்தித்து பேசும் சந்தர்ப்பமும் வாய்ப்பும் இருந்தது. ஆகவே புரட்சித்தலைவரிடம், “அண்ணே… நம்ம கட்சிக்கு எல்லா விதிகளும் பேரறிஞர் அண்ணா வழியில் இருக்கிறது. ஆனால், பொதுச் செயலாளர் தேர்வுக்கு மட்டும் ஒரு புதிய விதி உருவாக்கப்பட்டதற்கு காரணம் தெரிந்துகொள்ளலாமா?’ என்று கேட்டேன்.

உடனே பாராட்டும் வகையில் என் முதுகில் தட்டிக்கொடுத்த புரட்சித்தலைவர், ‘’வெரிகுட். யாரும் என்னிடம் இந்த விதி குறித்து கேட்கவில்லை. நீ மட்டும் தான் கேட்டிருக்கிறாய்… நான் இப்படியொரு விதி உருவாக்குவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது’’ என்றவர் அந்த விதி உருவாக்கப்பட்ட நோக்கம் குறித்து முழுமையாக விவரித்தார். அவர் விளக்கிய பிறகே அதன் பின்னே இருந்த சூட்சுமத்தை உணர்ந்தேன். என்னுடைய தலைவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர், எப்படிப்பட்ட தீர்க்கதரிசி, எப்படிப்பட்ட அரசியல் ஞானி என்று வியந்து வியந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

புரட்சித்தலைவர் அன்று என்னிடம் கூறிய காரணத்தை இப்போது சொல்வது பொருத்தமாக இருக்காது, ஆனால், நேரம் வரும்போது நிச்சயம் மக்களுக்குச் சொல்வேன்.

எம்.ஜி.ஆர். என்பது மூன்றெழுத்து மந்திரம். தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் அந்த மந்திரத்தைச் சொன்னால் மட்டும் போதும். சாதி, மதம், பணம் போன்ற எந்த பின்புலமும் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற புதிய வரலாறு எம்.ஜி.ஆரால் உருவானது. அதனாலே மக்கள் மீது அன்பும் சேவை மனப்பான்மையும் கொண்ட சாதாரண நபர்களுக்கும் அரசியல் அடையாளம் கிடைத்தது. 

புரட்சித்தலைவர் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பியே தமிழக மக்கள் ஆட்சிப் பொறுப்பை தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைக் கொடுத்தார்கள். இலங்கை தமிழர்களும் வீடுகளில் எம்.ஜி.ஆர். படம் மாட்டி பெருமைப்படுகிறார்கள். பொன்மனச்செல்வர், அண்ணாவின் இதயக்கனி, மக்கள் திலகம், மகுடம் தரிக்காத மன்னர், கலியுக வள்ளல் என்றெல்லாம் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறார்கள்.

தெய்வப்பிறவியாக, அவதாரபுருஷராக காலத்தை வென்று இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை மனிதநேய நாளாகக் கொண்டாடுவோம்…’’ என்று கூறியிருக்கிறார்.

Leave a Comment