என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 83
டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயமும், ரத்தத்தில் பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலைச்சாறும் நிச்சயம் பயன்படும் என்பதை சைதை துரைசாமி அறிந்து வைத்திருந்த காரணத்தாலே, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவற்றை நம்பிக்கையுடன் கொண்டுவந்தார்.
அப்படியென்றால் சைதை துரைசாமிக்கு சித்த வைத்தியம் தெரியுமா?
இல்லை. இதற்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரே காரணம் என்கிறார். இது குறித்து சைதை துரைசாமி, ‘’புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் அனைத்து நல்ல பண்புகளும் நிரம்பியிருந்தன. ஆனால், உணவுக் கட்டுப்பாட்டில் மட்டும் அவர் உறுதியாக இல்லை. விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு ஒவ்வாத உணவுகளை, கால, நேர முறையற்று எடுத்துக்கொண்டார். இதனால் அவரது உடல் நலன் குன்றியது. புரட்சித்தலைவரின் மரணமே என்னை ஆரோக்கியத் தேடலுக்கு வித்திட்டது.
கந்தசாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் என்ற நூல் எனது ஆரோக்கியத்திற்கான பயணத்திற்கு புதிய வழியைக் காட்டியது. அதன் மூலம் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற முன்னோர் வழிகாட்டுதலின் உண்மையைக் கண்டறிந்தேன், மண்ணின் மரபு சார்ந்த சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா நேச்சுராபதி போன்ற மருத்துவ முறைகளை கடைபிடிக்கிறேன்.
காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி, அஜீரணம் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் என்னென்ன மூலிகைகள் எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்று பல்வேறு சித்த வைத்தியர்களிடம் கேட்டு, அறிந்து அவற்றையே பயன்படுத்துகிறேன். இப்படித்தான் நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு குறித்து அறிந்துகொண்டேன். அவற்றையே டெங்கு நோய்க்குப் பயன்படும் வகையில் மக்களுக்கும் அறிமுகம் செய்தேன்’’ என்கிறார்.
இயற்கை வைத்தியத்தில் நிலவேம்பு ஒரு முக்கியமான மூலிகை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பண்டைய காலம் முதலே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நிலவேம்பு ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி பிரைடிக் மற்றும் எக்ஸ்பெக்டோரண்டி மூலிகை, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், மலமிளக்கி தன்மை, ரத்த சர்க்கரையை குறைத்தல், செரிமானத்தை மேம்படுத்துதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளும் இதில் உள்ளன.
- நாளை பார்க்கலாம்.