நூற்றாண்டு விழா மரியாதை
சினிமா, அரசியல், சமுதாயம், குடும்ப வாழ்வு என அனைத்து துறைகளிலும் புரட்சித்தலைவர் சூரியனைப் போன்று ஜொலித்துக்கொண்டே இருந்தார் என்றால், அவருக்கு ஆதார சக்தியாகத் திகழ்ந்தவர் ஜானகி அம்மையார். வள்ளுவன் – வாசுகி போன்று ஒற்றுமைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் எம்.ஜி.ஆர். – ஜானகி தம்பதி. அவரது நூறாவது ஆண்டு பிறந்த நாளாகிய இன்று அவரைப் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும் இங்கே தரப்படுகிறது.
13வது வயதில் சினிமாவில் நுழைந்த ஜானகி அம்மையார் 1947ம் ஆண்டு வெளியான, ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி’ படம் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். புரட்சித்தலைவர் சினிமாவில் துணை நடிகராக நுழைந்த காலகட்டத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்ற வி.என்.ஜானகி முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டிய மொழிகளிலும் புலமை பெற்றவர். பரதம், குச்சிப்புடி, மோகினியாட்டம் மற்றுமின்றி சிலம்பம், கத்திச்சண்டையும் பயின்றவர். சொந்தக் குரலில் பாடல்களும் பாடியிருக்கிறார்.
1948ம் ஆண்டு ‘ராஜமுக்தி’ படத்தில் துணை நடிகராக புரட்சித்தலைவரை சந்தித்தார். முதல் சந்திப்பிலே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்த மோகினி படத்தில் இணைந்தார்கள் காதல் ஜோடியாக மாறினார்கள். 1950ம் ஆண்டு புரட்சித்தலைவருக்குத் திருப்புமுனையாக அமைந்த மருதநாட்டு இளவரசி படத்தின் நாயகி ஜானகி அம்மையார் தான். அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து இருவரும் வெளிப்படையாக காதல் தம்பதியராக வலம் வந்தார்கள். 1950களில் ஜானகியம்மையாரின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது தான், இன்றைய அ.தி.மு.க.வின் தலைமைக்கழகமாகத் திகழும் எம்.ஜி.ஆர். மாளிகை.
ஆனாலும் எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைவுக்குப் பிறகே அதாவது 1962ம் ஆண்டு தான் எம்.ஜி.ஆருக்கும் ஜானகிக்கும் திருமணம் நடைபெற்றது. திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே சினிமாவிலிருந்து வெளியேறி புரட்சித்தலைவரின் வெற்றிக்காக தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
சாமானியர்களின் பசி போக்குவதற்காக வடலூரில் வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பு போலவே, புரட்சித்தலைவர் வீட்டிலும் எப்போதும் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும். வீடு தேடி வரும் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும். உதவி என்று கேட்போருக்கு உடனடியாகப் பணம் கிடைக்கும். அதனால் எம்.ஜி.ஆரைக் கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம், வள்ளல் என்றெல்லாம் பாராட்டி, வாழ்த்துவார்கள்.
பிறருக்கு உதவுவதற்கு புரட்சித்தலைவர் கேட்கும் நேரத்தில் எல்லாம் தாராளமாக சிரித்த முகத்துடன் பணம் எடுத்துக் கொடுப்பவர் ஜானகியம்மையார் தான். எல்லோருக்கும் என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து பரிமாறுபவரும் அம்மா தான். அதேநேரம், எல்லா புகழும் புரட்சித்தலைவருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர் தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்தியதே இல்லை.
புரட்சித்தலைவர் சுடப்பட்ட நேரத்தில் பக்கத்திலேயே இருந்து கண்ணை இமை போன்று பாதுகாத்தார். 1984-ல் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது ஒட்டுமொத்த தமிழகமும் புரட்சித்தலைவருக்காக பிரார்த்தனை செய்தது. அந்த இக்கட்டான நேரங்களில் புரட்சித்தலைவரின் நிழல் போன்று உடனிருந்து தாயாகவும் தாதியாகவும் இருந்து காப்பாற்றினார். அதனால், எமனிடமிருந்து எம்.ஜி.ஆரை மீட்டு வந்த நவீன சாவித்திரி ஜானகியம்மாள் என்று எம்.ஜி.ஆர். பக்தர்கள் அவரை புகழ்வதுண்டு.
எம்.ஜி.ஆர். மரணத்தில் ஜானகியம்மாள் நொறுங்கிப் போனார். ஆனாலும் கட்சியின் நலனை முன்னிட்டு முக்கியத் தலைவர்கள் இணைந்து ஜானகியம்மாளை முதல்வராக அமரவைப்பது என்று 1987ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிவு எடுத்தார்கள். அப்போது அவர், ‘’நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நிழலாக, தொண்டு செய்யும் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்தது தவிர, வேறு எதுவும் எனக்குத் தெரியாது. எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’’ என்றே சொன்னார்.
ஆனாலும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கட்டாயப்படுத்தியே அவரை பதவியில் அமர்த்தினார்கள். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர், தமிழ்நாட்டின் 11வது முதல்வர், இந்தியாவின் 5வது பெண் முதல்வர் என்றெல்லாம் பெருமைகள் கிடைத்தன. ஆனால், குறுகிய காலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டது.
1989ம் ஆண்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிளவுபட்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்த காரணத்தால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க. மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்றால் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்று பல தலைவர்கள் முன்வந்தார்கள். அதற்கு ஆர்.எம்.வீரப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், இதற்கு ஜானகியம்மாள் தயாராக இருந்தார்.
புரட்சித்தலைவர் உருவாக்கிய கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கட்சி நிதி, அறக்கட்டளை நிதி போன்ற அத்தனை சொத்துக்களயும் புரட்சித்தலைவியிடம் ஒப்படைத்துவிட்டு அரசியல் துறவறம் மேற்கொண்டார். அன்று அவர் செய்த தியாகத்தினாலே கட்சி ஒன்றானது. இரட்டை இலை கிடைத்தது. ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவும் முடிந்தது.
ஜானகியம்மையாரின் தியாகத்தின் மீது தான் அ.தி.மு.க. எனும் கட்சி இன்றும் வலிமையாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.