பூங்காவில் தவழ்ந்த மெல்லிசை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 176

பூங்காவில் இசை ஒலிக்க வேண்டும் அதோடு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை திருக்குறள் ஒலிபரப்பு செய்து, அடுத்து அதன் அர்த்தத்தை விளக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி தன்னுடைய திட்டத்தை விவரித்ததும். நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தயங்கினார்கள். அதோடு, அங்கு வருபவர்கள் பேசுவதற்கும், சிந்தனை செய்வதற்கும் தடையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.

திருக்குறள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று ஒலிபரப்பு செய்யவேண்டும் என்றால், அங்கு முதலில் கடிகாரம் இருக்க வேண்டும். கடிகாரம் எந்த பூங்காவிலும் இல்லை என்று கூறினார்கள். பூங்காவிற்கு நிறைய பேர் நடைப்பயிற்சி செய்வதற்கு வருகிறார்கள். அதோடு பல்வேறு பணிகளுக்கு இடையில் ஓய்வு எடுக்க வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கடிகாரம் அவசியம் என்று கருதினார் மேயர் சைதை துரைசாமி.

உடனடியாக இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு தனியார் மற்றும் சேவை நிறுவனங்களின் உதவியை நாடினார். இதையடுத்து கிராடாய் நிறுவனத்தார் சென்னையில் இருந்த 40 பூங்காக்களில் எஃகு தூண்கள் மீது கடிகாரம் அமைக்கவும், அதனை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். 

பூங்காவில் அமர்ந்து பேசுபவர்களுக்கும் சிந்தனை செய்பவர்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் மெல்லிய இசை ஒலிப்பதற்கு ஏற்பாடு செய்தார். இதற்கு சைதை துரைசாமி தேர்வு செய்த இசையும், அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று நிர்ணயித்த ஒலி அளவும் அத்தனை பேருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது. அதனை கேட்டு அத்தனை பேரும் ரசித்தார்கள்.

அதேபோல், ஒவ்வொரு மணி நேரத்திலும், இப்போது என்ன மணி என்பதைச் சொல்லிவிட்டு ஒரு திருக்குறள் ஒலிபரப்பானது. அதன் பிறகு அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை அதே திருக்குறள் ஒலிபரப்பானது. இது மக்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது. என்னென்ன திருக்குறள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது என்பதைக் கேட்பதற்காகவே நிறைய பேர் பூங்காவுக்கு வருகை தந்தனர்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment