என்ன செய்தார் சைதை துரைசாமி – 185
சர்வதேச சுற்றுச்சூழல் விதிப்படி ஒவ்வொரு நகரத்திலும் 33.3 சதவீதம் பசுமைப் போர்வை எனும் வனப்பகுதி இருக்கவேண்டும். அப்போது தான் நகர மக்களுக்கு சுகாதாரமான காற்றும் போதுமான அளவுக்கு நிலத்தடி நீரும் கிடைக்கும். மேயராக சைதை துரைசாமி பொறுப்புக்கு வந்த நேரத்தில், பெருநகர சென்னை மாநகரத்தில் 5.5 சதவீதம் மட்டுமே பசுமைப் போர்வை இருந்தன.
இதனை முதலில் இரண்டு மடங்கு பசுமைப் போர்வையாக மாற்றுவதற்கு அதாவது 11 சதவீதமாக உயர்த்துவதற்கு விரும்பினார். இதற்கான முதல் முயற்சியாக சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 33 ஏக்கர் பரப்புள்ள மாடம்பாக்கம் நர்சரியில் மரக்கன்றுகள், அழகுச் செடிகள், வண்ண மலர் செடிகள் மற்றும் மூலிகை இனத் தாவரங்கள் முழு அளவில் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதனை அறிவியல்பூர்வமாக செய்து முடிப்பதற்காக, தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டன.
மாநகராட்சி மற்றும் அரசு மட்டும் முயற்சி செய்து இந்த பசுமைப் போர்வையைக் கொண்டுவர முடியாது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஆர்வமும் வரவேண்டும். அதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆர்வம் இளைஞர்களுக்கு வரவேண்டும் என்றும் விரும்பினார். அதனால், மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு அழைப்பு வந்தவுடன் மேயர் சைதை துரைசாமி சந்தோஷமாக சம்மதம் தெரிவித்துவிடுவார். எத்தனை கடுமையான பணிச்சூழல் இருந்தாலும் இதனை தவிர்க்கவே மாட்டார். விழாவுக்கு ஒப்புக்கொண்ட பிறகு அவரது நிபந்தனையைத் தெரிவித்துவிடுவார்.
அதாவது, மரக்கன்று நடுவதற்கு 3 அடி ஆழம் 3 அடி அகலத்துக்கு குழி தோண்டப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து அதற்கான நீர் ஆதாரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்பை யார் எடுத்துக்கொள்வார்கள் என்பதை மட்டும் தெரிவிக்க வேண்டும் என்று சொல்வார். மேலும் செடி வெளிப்புறத்தில் நடப்படுகிறது என்றால் ஆடு, மாடு மற்றும் சிறுவர்களால் சிதைத்துவிட முடியாத அளவுக்கு கூண்டு அமைக்க வேண்டும் என்றும் கூறுவார்.
ஏன் மூன்று அடி ஆழம் வேண்டும் என்றால், இத்தனை ஆழமும் அகலமும் இருந்தால்தான் மரக்கன்று வேர்கள் நன்றாக ஆழத்தை நோக்கியும் பரந்துவிரிந்தும் செல்லும். வெறுமனே மரக் கன்றுகளை அரை அடி ஆழத்தில் நடும்போது, வேர்கள் பூமியில் அகலமாக மட்டுமே பரந்து நிற்கும். பெரிய காற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விடும். எனவே, இயற்கை சீற்றங்களைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு மரக்கன்றுகளை ஆழத்தில் நடவேண்டியது எத்தனை அவசியம் என்பதை பாடமாகவே நடத்துவார்.
ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு பகுதியில் மரம் நடுவிழாவில் கலந்துகொள்வதை வழக்கமாகவே வைத்திருந்தார் மேயர் சைதை துரைசாமி. சென்னை பூங்காக்கள் இப்போதும் பசுமையாகத் திகழ்வதற்கு முழு காரணம் மேயராக இருந்த சைதை துரைசாமி என்றால் மிகையில்லை.
- நாளை பார்க்கலாம்.