என்ன செய்தார் சைதை துரைசாமி – 355
எந்த ஒரு வெளிநாட்டு பயணம் என்றாலும், அங்குள்ள முக்கிய சுற்றுலாஸ்தலங்களை எல்லாம் பார்த்து ரசித்துவிடும் ஆர்வம் தோன்றுவது இயல்பு. ஆனால், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்ட மேயர் சைதை துரைசாமியின் ஆசையும் தேடுதலும் வித்தியாசமாக இருந்தது.
சிங்கப்பூர் ஆறுகள் எப்படி சுத்தமாக மாற்றப்பட்டது என்பதை அறிந்துகொண்டதுடன் நில்லாமல், நகரத்தை எப்படி சுத்தமாக பராமரிக்கிறார்கள் என்பதை முழுமையாக அறிந்துகொள்ளவே ஆர்வம் காட்டினார். குறிப்பாக குப்பை மேலாண்மை மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற விஷயங்களை சிங்கப்பூர் எப்படி கையாள்கிறது என்பதை நேரில் அறிந்துகொண்டார்.
ஒரு மணி நேரத்தைக்கூட வீணாக்காமல் சகல விஷயங்களையும் ஆய்வு செய்தார். அந்த வகையில் குப்பையை பயனுள்ள பணப்பொருளாக மாற்றுதல், நவீன முறையில் குப்பை அகற்றுதல், பல்லடுக்கு வாகன நிறுத்தம், நவீன சாலைகள், மழைநீர் வடிகால்வாய்கள், நடைபாதைகள், மத்திய தடுப்புச் சுவர்கள், பூங்காக்கள் பராமரிப்பு, கொசு ஒழிப்பு பணி போன்றவை குறித்து நேரில் பார்த்தும், கேட்டும் அறிந்துகொண்டார்.
மேலும், பொது சுகாதாரம், கல்வி பற்றி நேரில் அறிந்துகொள்வதற்கு மேயர் சைதை துரைசாமிக்கு ஆசை இருந்தது. ஆனால், அதற்கு நேரம் கிடைக்கவில்லை. ஆகவே, பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குக் கிடைக்கும் கல்வி குறித்தும் பொதுமக்களுக்கு அரசு செய்துகொடுக்கும் அனைத்து வசதிகள் குறித்தும் விரிவான குறிப்புகள் தேவை என்று சிங்கப்பூர் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்தார்.
சென்னை சீரமைப்புக்கு மேயர் சைதை துரைசாமி எடுத்துக்கொள்ளும் ஆர்வம் மற்றும் அக்கறையைப் பார்த்த சிங்கப்பூர் அதிகாரிகள் பிரமித்துப் போனார்கள். எனவே, மேயர் சைதை துரைசாமிக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் தருவதற்கு உறுதி அளித்தனர். அதன் பிறகே நிம்மதியாக சிங்கப்பூரில் இருந்து விடை பெற்றார் சைதை துரைசாமி.
கூவம் சீரமைப்பு குறித்து நிறைய கேள்விக்குறிகளுடன் சிங்கப்பூர் கிளம்பிய மேயர் சைதை துரைசாமி, முழு நம்பிக்கையுடன் தமிழகம் திரும்பினார்.
- நாளை பார்க்கலாம்.