சுமையை தூக்கிப் போடுங்கள்
பூக்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை சந்திக்க ஒரு பழக்கூடையுடன் வந்தார் கல்லூரி பேராசிரியர் ஒருவர். புன்னகையை பரிமாறிய ஞானகுருவிடம், ‘சுவாமி என் மனதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, தியானம் செய்தாலும் தெளிவு தென்படுவதில்லை’ என்று நேரடியாக கேள்விக்கு வந்தார்.
’’குழப்பத்துடன் அமர்ந்தால் குழப்பத்துடன்தான் எழுவாய். உன் மனதை உன்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நீ ஒரே நாளில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கிறாய். மல்டிபிள் பெர்சனாலிட்டியாக காட்சி தருகிறாய். அதனால், உண்மையைக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படுகிறது’’
‘’நான் அப்படி இருப்பதில்லையே..?’’
‘’சிம்பிள், என் முன்னே ஒரு மாணவனாக நிற்கிறாய், உன்னுடைய மாணவர்கள் முன்பு, எல்லாம் தெரிந்த பேராசிரியராக பேசுகிறாய். உன்னுடைய மேல் அதிகாரிகளிடம் அடக்கமானவன் பவ்யமாகிறாய். உன் மனைவியிடம் அன்பு செலுத்துபவனாகவும், உன் குழந்தைகளிடம் பெரும் பாசம் கொண்டவனாகவும் காட்சி தருகிறாய். ஒவ்வொரு நபருக்கு ஏற்ப, நேரத்துக்குத் தகுந்த முடிவுகள் எடுக்கிறாய். இவர்களில் உண்மையான நீ யார்..? யாரிடமெல்லாம் உண்மையாக இருக்கிறாய், யாரிடமெல்லாம் நடிக்கிறாய் அல்லது சமயோசித புத்தியுடன் இருக்கிறாய் என்றெல்லாம் உனக்கே புரிவதில்லை… நீ அணிந்திருப்பது முகமூடியா அல்லது உண்மை முகமா என்பதே புரியாத அளவுக்கு முகமூடியை கவசமாக மாற்றிவிட்டாய்.. ’’
’’ஆனால், இது எல்லாமே நான்தானே…’’
‘’உண்மைதான். உன் மனைவியை பாராட்டும் அதே நேரம் பாராட்டினால்தான் காரியம் சாதிக்க முடிகிறது என்று உன்னை நீயே பாராட்டிக் கொள்கிறாய். அதிகாரிகளுக்கு முன்பு நீ பவ்யமாக இருந்தாலும், உண்மையில் நீ அவர்களை மதிப்பதில்லை. உன்னை நீ நல்லவனாக, வல்லவனாக காட்டிக்கொள்ள எத்தனையோ முயற்சிகள் செய்கிறாய். உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாகத்தான் நீ மட்டுமல்ல, அத்தனை மனிதர்களும் வாழ்கிறார்கள். அதுதான் மனதை குழப்புகிறது. அதனால் இத்தனை வேடம் அணிந்துகொண்டு மனதை புரிந்துகொள்ள நினைக்காதே. எல்லா முகமூடிகளும் நீயே தான். இப்படி இருந்தால் தான் சமாளிக்க முடியும் என்று முகமூடி அண்ந்துகொண்டு தப்பிக்கப் பார்க்காதே. முகமூடி எனும் கவசம் இல்லாமலும் இந்த உலகத்தைப் பார்க்க முடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் நீங்களாகவே இருந்து பாருங்கள். அதன் பிறகு முகமூடி தேவைப்படாது…’’ என்றார் ஞானகுரு.
பதில் பேச இயலாமல் நின்றார் பேராசிரியர்.