பேச்சு அல்ல திறமை
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தந்து 27 கோடி மக்களை வறுமையிலிருந்தும் பசிக் கொடுமையிலிருந்தும் மீட்ட பொருளாதார புரட்சியாளர் என்ற ஒரே ஒரு திட்டம் போதும் மன்மோகன் சிங் புகழைச் சொல்வதற்கு. ஆதார், தகவல் அறியும் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்த சீர்திருத்தவாதி.
மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க.வினர் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினார்கள். அப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 126 டாலர் என்று மன்மோகன் சிங் ஆட்சியில் வாங்கப்பட்டது என்றாலும் பெட்ரோல் 71ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்குத் தான் போராடினார்கள்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் லிட்டர் 50 ரூபாய்க்குப் பெட்ரோல் கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது 110 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து 68 டாலருக்குத் தான் இந்தியா வாங்குகிறது. ஆனாலும், இதன் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பது தான் பா.ஜக.வின் அரசியல்.
அதிக விலைக்கு வாங்கி மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்தவர் மன்மோகன். 1990களில் இந்தியா பெரும் பொருளாதார வீழ்ச்சியோடு திவால் நிலைக்கு செல்ல முக்கியகாரணமாக அமைந்த சோசலிச பொருளாதார சிந்தனையை உடைத்து IMF உடன் இணைந்து இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்தி பெரும் மாற்றத்தை கொண்டு வந்த மாமனிதர். அன்று அந்த சோசலிச பாதையை மாற்றி அமைக்காமல் இருந்திருந்தால் இன்று எந்த பெரும் இந்திய நிறுவனங்களும் உருவாக வாய்ப்பே இருந்திருக்காது. அத்தோடு இன்றய இந்திய பொருளாதாரமே அதலபாதாளத்தில் இருந்திருக்கும். அந்த வகையில் சுதந்திர இந்தியாவின் மன்மோகன் வரலாற்றில் முக முக்கியமான மனிதர்.
10 ஆண்டுகளாக டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலம் இந்திய நாட்டின் நிலையான வளர்ச்சியையும், சமூக முன்னேற்றத்தையும், சாமானிய மக்களின் பொருளாதார ஏற்றத்தையும் கொண்டதாக இருந்தது. இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதிலும்; இந்தியாவைபொருளாதாரத்தில் வலிமைபெறச் செய்வதிலும் மிக கவனமாகவும் உறுதியாகவும் இருந்தார். குறிப்பாக, இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவதற்கு ஏதுவாக தாராளமய பொருளாதார நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர்.
2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற போது, எவரும் எதிர்பாராத வகையில் மன்மோகன் சிங் பிரதமர் ஆக்கப்பட்டார். இந்தியாவில் சீக்கிய- சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராகப் பொறுப்பேற்று அவர் நடத்திய ஆட்சியே அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பானதாக இருந்தது.
அவரது முதலாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் அவர் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தால் அவரது அரசுக்கு ஆதரவு அளித்துவந்த இடது சாரிகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டனர். ஆனாலும் அதற்குப் பிறகு 2009 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று இரண்டாவது முறையும் அவர் பிரதமரானார். உணவுப் பாதுகாப்புச் சட்டம்; கல்வி உரிமைச் சட்டம்; மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம்; தகவலறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட மக்களுக்கு உதவக்கூடிய பல சட்டங்கள் அவரது ஆட்சியின்போது தான் இயற்றப்பட்டன. அவற்றால் கோடிக் கணக்கான மக்கள் இப்போதும் பயனடைந்து வருகின்றனர்.
இந்தியாவின் பிரதமராக இருந்ததோடு இந் நாட்டின் பெருமைமிகுக் குடிமகனாகவும் அவர் என்றென்றும் போற்றப்படுவார்.