மாளவிகாவுக்கு வந்த சோதனை

Image

வேதனையிலும் வெற்றி பெற்ற குட்டிக் கதை

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, அதை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் சிரமப்படுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்ட பிறகும், ஆசைப்பட்ட லட்சியத்தை அடையாமல் செத்துப்போனவர்கள் அதைவிடவும் அதிகம்.

ஆனால் குறிப்பாக எந்த ஒரு லட்சியத்தையும் உருவாக்கிக்கொள்ளாமல், தற்செயலாக வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயத்தை சவாலாகவும் லட்சியமாகவும் எடுத்துக்கொண்டு ஜெயித்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். இவர்களைத்தான் வெற்றியாளர்கள், புத்திசாலிகள் என்று உலகம் கொண்டாடுகிறது.

மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதுதான் மாளவிகாவின் தீராத ஆசை. அதற்காக இரவும்பகலுமாக படித்தாள். கடினமாக தெரிந்த பாடங்களுக்கு எல்லாம் டியூஷன் போனாள். கஷ்டப்பட்டு படித்து பரிட்சை எழுதினாள். ஆனால் அவள் எடுத்த மதிப்பெண்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு போதுமானதாக இல்லை. பணம் கட்டி படிக்கவைக்கும் அளவுக்கு வீட்டில் வசதியும் இல்லை. மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என்றதும் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தாள் மாளவிகா. ஏராளமான மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயற்சித்தாள். நல்லவேளையாக மாத்திரை வீரியமற்றது என்பதால் காப்பாற்றப்பட்டாள். மருத்துவர்களின் கவுன்சிலிங்கிற்கு பிறகு… வேறு வழியில்லை என்பதால், தன்னுடைய மருத்துவ லட்சியத்தை தூக்கி எறிந்துவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தாள்.

இனிமேல் எந்த லட்சியமும் தேவையில்லை, நன்றாக படித்து நல்ல வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றினால் போதும் என்று மட்டும் எண்ணிக்கொண்டாள் மாளவிகா. அதன்படி முன்னைவிட கூடுதல் அக்கறையுடன் படித்துமுடித்து வேலைக்குப் போனாள். வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலே அந்த வேலையின் சூட்சுமம் மாளவிகாவுக்கு சுலபமாக பிடிபட்டுப்போனது. சந்தோஷமாகவும் கடினமாகவும் உழைத்து, அந்த நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்கினாள். அவள் வேலை செய்த நிறுவனத்திற்கு ஏகப்பட்ட ஆட்கள் தேவையாக இருந்தது. ஆனால் அவளது நிறுவன விதிமுறைகளுக்குட்பட்டு வேலையில் சேர்வதற்கு கிராமத்து மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்தாள். குறிப்பாக கல்லூரி வளாகத் தேர்வில் கிராமத்து மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக இருப்பதைப் பார்த்து வருத்தப்பட்டாள். அதனால் ஏதாவது வகையில் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

தெளிவான யோசனைக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த சில ஊழியர்களுடன் இணைந்து ஒரு கன்சல்டன்சி நிறுவனம் தொடங்கினாள் மாளவிகா. அந்த நிறுவனம் மூலமாக நகருக்கு வெளியே இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியும், நேர்முகத்தேர்வை வெற்றிகொள்ளும் வழிகளையும் சொல்லிக் கொடுத்தாள். ஒவ்வொரு வருடமும் மாளவிகாவின் நிறுவனத்தின் மதிப்பு கூடியது. அவளிடம் பயின்ற மாணவர்கள் வேலைக்குச் செல்லும் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒவ்வொரு மாணவனுக்கு வேலை கிடைக்கும்போதும், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் உயர்வதை கண்ணுக்கு எதிரே கண்டு சந்தோஷமானாள். மருத்துவரானால் மட்டும்தான் சேவை செய்யமுடியும் என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தது எத்தனை முட்டாள்தனம் என்பதை உணர்ந்து இப்போதும் சிரித்துக்கொள்வாள் மாளவிகா.

Leave a Comment