கனவிலும் அன்பு செய்யுங்கள்..!

Image

மகிழ்ச்சி கிடைக்கும்


கடவுள் மனிதருக்குத் தந்த பெரும் பொக்கிஷம் கனவு. புறத்தில் அடைய முடியாத சிக்கல்களுக்கு அகத்தில் ஏற்படும் ஆழ்மனத் தீர்வே கனவாக வெளிப்படுகிறது என்று சொல்வார்கள். இதற்குத் தீர்க்கதரிசனம் என்றும் பெயருண்டு. ஆனால், நம்மில் சிலர் அதைத் தவறாகப் புரிந்துகொள்கிறோம். தூக்கத்தில் வரும் கனவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அது கனவல்ல.

 நம் மனதில் நிரம்பியிருக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இன்று அல்லது என்றோ தோன்றிய எண்ணங்கள்தான் நம் ஆழ்மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றில் நிறைவேறாத அல்லது நிறைவேறவே இயலாத எண்ணங்கள்தான் கனவுகளாகத் தோன்றுகின்றன.

குறிப்பாக, ஒவ்வொரு விதமான கனவும் நம் வாழ்க்கையில் எதிர்நோக்கும் அல்லது தற்போது செயலாற்றிக் கொண்டிருக்கும் செயலின் அடிப்படையிலேயே வருகின்றன. பொதுவாகக் கனவு என்பது இல்லாதவற்றுக்காக ஏங்குவது என்கிற நோக்கத்திலேயே காணப்படுகிறது. வீடில்லாதவன் மாளிகை வாழ்க்கையையும், பாயில்லாதவன் பஞ்சு மெத்தையையும் கண்களை மூடிக்கொண்டு அனுபவித்து மகிழ்வதுதான் கனவு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையான கனவு அதுவன்று. வீடில்லாதவன் தன் போல் வீடில்லாத அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்பி அதற்காக உழைப்பதும், உணவில்லாதவன் உலகத்திலேயே பசியே இல்லாது இருக்க வேண்டும் என்று போராடுவதும்தான் மெய்யான கனவு.

இன்றைய இளைஞர்களுக்குத் தன் வளர்ச்சியைப் பற்றிய கனவு மட்டும் போதாது. தன்னுடைய மொழி, தேசம் பிரபஞ்ச மேன்மை வரையில் குறிக்கோள்களுடனான கனவுகள் வேண்டியிருக்கின்றன. அத்தகைய மேன்மையான கனவையே மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காணச் சொன்னார். ‘உறங்கும்போது வருவது கனவல்ல, உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு’ என்றார். ஆம், கனவு என்பது அப்படியானதாகவே இருக்க வேண்டும்.

தேசத் தந்தை காந்திஜி, நாட்டின் விடுதலை குறித்து கனவு கண்டார். மகாகவி பாரதியார்,  ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ, ‘ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே வாழ்க்கையின் மயமாக்கு. அதையே கனவு காண்’ என்றார். இப்படித்தான் உலகை ஆண்ட பல மாமனிதர்களும் கனவுகளுடன் வாழ்ந்ததுடன், அதற்காக வித்திடவும் செய்தார்கள். காதலிப்பவர்களும் கனவு காண்பார்கள். பிரபஞ்சத்தையே காதலித்தவர்கள் கண்ட கனவினால்தான் பல அற்புதங்கள் நனவாகியிருக்கின்றன. தையல் ஊசியிலிருந்து ராக்கெட் வரையிலும்  கனவின் மூலமாகவே பல அதிசயங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

யாரையும் விரோதமாக அல்லது போட்டியாகக் காணாதீர்கள். அவர்கள் கனவிலும் வந்து தொந்தரவு செய்வார்கள். எல்லோருடைய தவறுகளையும் மன்னித்து மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு எல்லோருக்கும் நல்லவராக வாழுங்கள்.

இப்படிப்பட்ட நிலையில், கனவுகள் நன்மை தருபவையாக இருக்கும். நம்பிக்கையுடன் கனவு காணுங்கள். அந்த கனவு நனவாகும் வகையில் உழையுங்கள். அதுவே மகிழ்ச்சி

Leave a Comment