லக்கி பாஸ்கர் படம் அல்ல, விஷம்

Image

பிள்ளைகளிடம் இருந்து தள்ளி வையுங்கள்

கையில் செல்போன் வைத்திருக்கும் நேரத்தில் சாப்பிடச் சொன்னால் கூட பெற்றோர் மீது பாய்ந்து குதறும் ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது. இப்படிப்பட்ட தலைமுறையினர் லக்கி பாஸ்கரை கொண்டாடுகிறார்கள். மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். ஏனென்றால், இது மது தரும் போதையைத் தருகிறது. இன்னும் சொல்லப்போனால் மெல்லக் கொல்லும் விஷம்..

சாதாரண மனிதனுக்கும் புத்திசாலித்தனம் + தைரியம் இருந்தால் கோடி கோடியாகப் பணம் அள்ளலாம் என்பது தான் லக்கி பாஸ்கர் சொல்லும் கருத்து. குடும்ப நலனுக்காக எந்த எல்லைக்கும் ஆண் போகலாம் என்பதை அழுத்திச் சொல்லும் லக்கி பாஸ்கர் கேரக்டர் இன்றைய இளசுகளின் ஃபேவரைட் ஹீரோவாக மாறியிருக்கிறது. குறிப்பாகப் பெண்கள் இன்ஸ்டாவில் ஸோ ஸ்வீட் மாய்ந்து மாய்ந்துப் புகழ்கிறார்கள்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கிட்டத்தட்ட இதே கான்செப்ட் என்றாலும் திருட்டுத்தனம் செய்வதால் பயந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், பாஸ்கர் சாதாரண மனிதனாக இருந்தாலும் இன்றைய அரசியல்வாதிகள், கல்வித்தந்தைகள், தொழிலதிபர்கள் போன்று தைரியமாக எதிர்த்து நின்று தவறு செய்யவில்லை என்கிறான்.

குறுக்குவழியில் அதுவும் ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிப்பதால் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று திசை திருப்புகிறான். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு லட்சம் லட்சமாய் பணம் கட்டி வெளிநாட்டில் படிக்க வைப்பதற்காக தவறு செய்வது நியாயம் என்கிறான். அவமானப்படுத்தும் உறவுகள் முன்பு ஆடம்பரமாய் வாழ்ந்து காட்டுவதே வெற்றி என்கிறான்.

இவை எல்லாமே சினிமா என்ற வகையில் தவறு இல்லை. ஏனென்றால் பாஸ்கர் போன்று எத்தனையோ பேர் உலகம் முழுக்க சுதந்திரமாகச் சுற்றுகிறார்கள் என்பது உண்மையே.

ஆனால், பார்வையாளனைப் பார்த்து பாஸ்கர் பேசும் உத்தி அபாயகரமானது. நேர்மையாக வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறீர்கள். அறம் என்பதற்கு மதிப்பு இல்லை என்று படம் பார்க்கும் சாதாரண ஆண்களை குற்றவுணர்வுக்கு ஆளாக்கக்கூடியது.

அப்பாவுக்கு இப்படி செய்யத்தெரியவில்லையே என்று பிள்ளைகளையும், இப்படி ஒரு புத்திசாலிக் கணவன் இல்லையே என்று பெண்களையும் ஏங்க வைக்கும் லக்கி பாஸ்கர் ரொம்பவே அபாயகரமானவன். மாட்டிக் கொள்ளாமல் குற்றம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதையே இந்த தலைமுறையினர் புரிந்துகொள்கிறார்கள்.

லட்சத்தில் ஒருவரால் இப்படி தப்பி வாழ முடியும், மற்றவர்கள் எல்லோரும் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவார்கள். அந்த குடும்பமும் சிதறிப் போகும். இந்த உண்மையை எப்படி இன்றைய இளசுகளுக்குப் புரிய வைப்பது..?

Leave a Comment