தனிமை என்பது சுதந்திரமல்ல, சிறை

Image

பிள்ளை வளர்ப்பு வழிகாட்டி

’நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை, என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். நான் உண்டு, என் செல்போன் உண்டு. அது போதும் எனக்கு’ என்று வீட்டுக்குள்ளும் தனிமை தேடும் ஒரு புதிய தலைமுறை உருவாகியிருக்கிறது.

பெற்றோர், ஆசிரியர், முதியவர், உறவினர் என யாரையும் எதற்காகவும் இவர்கள் மதிப்பதில்லை. நான் எதற்கு மதிக்க வேண்டும் என்ற கேள்வியை சுலபமாகக் கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்வதற்குப் பெற்றோருக்குத் தெரிவதில்லை. பதில் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இந்த தலைமுறை இல்லை.

ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள் உள்ள வீடுகள் என்பதால், ‘நான் பட்ட கஷ்டத்தை என் பிள்ளை படக்கூடாது’ என்ற எண்ணம் பெற்றோர்களிடம் இருக்கிறது. அதனால் பிள்ளைகளுக்கு கேட்பதெல்லாம் கிடைத்துவிடுகிறது. யாருக்கும் எதையும் பகிர்ந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுயநலத்துடன் வளர்கிறார்கள்.

சுலப வேலைக்கு அதிக சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். வித்தியாசமான உணவுகள், விலை உயர்ந்த வாகனம் அதிக விருப்பமாக இருக்கிறது. குடிப்பதும், அதிவேகத்தில் வண்டியோட்டுவதும் தவறு இல்லை என்றே நினைக்கிறார்கள். ரத்தம் தெறிக்கும் பப்ஜி விளையாட்டுகளும், மாஸ் சண்டை படங்களும் விருப்பமாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய அச்சம் இல்லை.

இவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்..?

இது தலைமுறைக்கான இடைவெளி என்று அசட்டையாக இருக்காதீர்கள். குழப்பமான புதிய ஒரு சமூகத்திற்கான அறிகுறி. இதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். தனிமனித சுதந்திரம், திறமை முக்கியம் என்றாலும் சக மனிதர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒருவரையொருவர் சார்ந்தே வாழ வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்.

தேவையான நேரத்தில் கண்டிப்பு காட்டுங்கள். எச்சரிக்கை செய்யுங்கள். தோல்வி, ஏமாற்றத்திற்குப் பழக்குங்கள். சட்டத்தை மதிப்பதற்கு சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகள் மாறினால் மகிழ்ச்சி. மாறாவிட்டாலும் நீங்கள் கடமையை செய்த மகிழ்ச்சியில் இருங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment