தனிமை என்பது பயமல்ல, பலம்..!

Image

சினிமா எனும் வாழ்க்கை – ஃபால்

தனிமையை பலவீனம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், தனிமை என்பது மிகப்பெரும் பலம்.

எதிர்பாராத இடத்தில் திடீரென தனியே மாட்டிக் கொள்பவர்கள் ஆரம்ப கட்டத்தில் நடுங்குவார்கள். அக்கம்பக்கத்தில் உதவி கிடைக்குமா என்று பல்வேறு வகையினில் முயற்சி எடுப்பார்கள். எந்த உதவிக்கும் வாய்ப்பு இல்லை என்ற உண்மை முகத்தில் அறையும்போது, கடவுளிடம் வேண்டுகோள் வைப்பார்கள். அந்த கடவுளும் கை கொடுக்கப்போவதில்லை என்ற தெளிவு ஒரு கட்டத்தில் புரியவந்ததும், மனிதன் தனக்குத் தேவையான பலத்தை தானே உருவாக்கிக் கொள்கிறான்.

தனிமையில் இருந்து தப்பிக்க நினைக்கும் மனிதனுக்குக் கிடைக்கும் பலம், அவனே எதிர்பாராத அளவுக்கு அசுர சக்தி வாய்ந்ததாக இருக்கும். அவனே, இன்னொரு மனிதனாக உருமாறி உதவி செய்வான். இதை தேர்டு மேன் சிண்ட்ரோம் என்று மருத்துவத்தில் சொல்வார்கள்.

தனிமையில் இருப்பவரை காப்பாற்றுவதற்கு அவரது மனமே பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும். ‘என்ன செய்றதுன்னே தெரியாம நின்னேன். திடீருன்னு ஒருத்தர் கடவுள் மாதிரி வந்து உதவி செஞ்சிட்டுப் போனார்… திரும்பிப் பார்த்தா ஆளைக் காணோம்…’, ‘யாரோ ஒரு குழந்தை வந்து வழி காட்டிச்சு… அப்புறம் அது எங்கே போச்சுன்னே தெரியலை’ என்றெல்லாம் சிலர் பிரமித்து சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அந்த யாரோ ஒருவர்… வேறு யாருமல்ல… நீங்கள் தான் என்பதை சொல்கிறது ’ஃபால்’ திரைப்படம்.

ஒரு நல்ல திரைப்படம் என்பது ரசிகனை சில மணி நேரமாவது தொந்தரவு செய்ய வேண்டும். யாரேனும் சில மனிதர்களின் வாழ்க்கையை படித்துமுடித்த திருப்தி கிடைக்க வேண்டும். அப்படியொரு அட்வெஞ்சர் படமாக வந்திருக்கிறது 2022ம் ஆண்டு வெளியான ஃபால்.

இனி, படத்தைப் பார்ப்போம்.

மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்களால் சந்தோஷமாக வாழ முடியாது. வாழ்க்கை மிகவும் குறுகியது. கொஞ்ச கால வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க வேண்டும். உயிர்ப்புடன் வாழ்வதற்கான செயலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது இந்த படத்தின் மையக் கருத்து. இதனை சொல்வதற்கு மலை ஏற்றத்தை ஒரு பாத்திரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்..

மலை ஏறுவதில் கிடைக்கும் த்ரில்லான அனுபவங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழும் தம்பதியான டான் – பெக்கி இருவரும் ஜாலியாக ஒரு மலையில் ஏறுகிறார்கள். அவர்களுடன் தோழி ஷில்லா ஹண்டரும் மலை ஏறுகிறாள். அந்த நேரத்தில் ஏற்படும் எதிர்பாராத விபத்தில் சிக்கி டான் இறந்து போகிறான். கண் முன்னே கணவன் மரணத்தைப் பார்த்துவிட்ட பெக்கி அதிர்ந்துபோகிறாள். தன்னுடைய வாழ்க்கை அழிந்துவிட்டதாக நினைத்து… மதுவின் போதையில் மயங்கிக் கிடக்கிறாள்.

தன்னுடைய மகளுக்கு டான் சரியான துணை இல்லை என்று எதிர்ப்பு காட்டிய பெக்கியின் தந்தை, மகளின் வாழ்க்கையை மாற்றுவதற்காக போராடுகிறார். புதிய வாழ்க்கைக்கு அழைக்கும் தந்தையை மதிக்காமல் போகிறாள் பெக்கி.

டான் மரணத்துக்குப் பிறகு ஊரை விட்டு போய்விட்ட தோழி ஷில்லா ஹண்டர், கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நிறைவேறும் தருணத்தில் திரும்பிவருகிறாள். இன்னமும் துன்பத்தில் தவிக்கும் தோழியைத் தேற்ற முயற்சிக்கிறாள். அவள் வாழ்க்கையை மாற்றுவதற்காக புதிய அட்வெஞ்சரில் இறங்குவோம் என்று அழைக்கிறாள். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு சம்மதிக்கிறாள் பெக்கி.

யாருமற்ற பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள 2,000 அடி உயரமுள்ள டவரில் ஏறி டானின் அஸ்தியை தூவ திட்டமிடுகிறார்கள். அதுதான் டானுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று சொல்கிறாள் ஷெல்லி.

நீண்ட நாட்களாக மலையேறும் பயிற்சி இல்லை என்றாலும், தோழியின்  அழைப்பை ஏற்றுக்கொண்டு உடன் செல்கிறாள் பெக்கி. பெரிய பெரிய மலையை ஏறியவர்களுக்கு… 2000 அடி டவர் என்பது ஒரு சாதாரண டாஸ்க். எனவே, இந்த டவர் ஏறும் முயற்சியை 60 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு சந்தோஷமாகத் தெரிவித்தபடி ஏறுகிறாள் ஹண்டர்.

மிகவும் கஷ்டப்பட்டு அந்த டவர் மீது ஏறி, உச்சிக்கு மிக அருகில் இருக்கும் இடத்தை அடைகிறார்கள். அந்த நேரத்தில் திடீர் பிரச்னையாக அவர்கள் ஏறிவந்த ஏணி, உடைந்து கீழே விழுகிறது. எனவே, அவர்களால் கீழே இறங்குவதற்கு இயலாமல் போகிறது. அத்தனை உயரத்தில் இருப்பதால், தாங்கள் மாட்டிக்கொண்டதை யாருக்கும் தெரிவிக்கவும் இயலவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு செல்போன் சிக்னலும் கிடைக்கவில்லை. எனவே, கீழே இறங்கமுடியாமல், அந்தரத்தில் இரவுப் பொழுதைக் கழிக்கிறார்கள்.

யாருமற்ற வனாந்திர பிரதேசத்தில் மாட்டியிருந்தாலும், அவளது சமூகவலைதள ஃபாலோயர்கள் யாராவது உதவிக்கு வருவார்கள் என்று ஹண்டர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். ஆனால், இரவு வரை காத்திருந்தும் யாரும் அவர்களை காப்பாற்ற வரவே இல்லை.

இந்த நேரத்தில் தற்செயலாக தோழி ஷெல்லி ஹண்டரின் பாதத்தில் 1 4 3 என்று டாட்டூ குத்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறாள் பெக்கி. ஏனென்றால், அதுதான் அவளுக்கு டான் காதலை சொல்லும் வழிமுறை. எனவே தன்னுடைய காதல் கணவனுக்கும் தோழிக்கும் இடையில் காதல் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

உயிருக்குப் போராடும் சூழல் என்பதால், மறைக்காமல் உண்மையைச் சொல்கிறாள் ஹண்டர். பெக்கியின் கணவன் டானுடன் காதல் இருந்தது என்றாலும், அதில் தன்னுடைய தவறு எதுவுமில்லை என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். ஆனால், தோழியை மன்னிக்க முடியாமல் தவிக்கிறாள் பெக்கி. 

நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. யாரும் உதவ முன்வருவதாகத் தெரியவில்லை. ஆகவே, பாதி உயரத்தில் இவர்கள் விட்டுவைத்திருக்கும் பையை எடுத்துவந்தால்… அதில் இருக்கும் டிரோன் மூலமாக செல்போனை கீழே அனுப்பி சிக்னல் பெறலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஏனிப்படி இல்லை என்பதால், கயிறு மூலம் ஆபத்தான முயற்சியில் இறங்குகிறாள் ஹண்டர்.

ஒருவழியாக கீழே இறங்கி பையை எடுத்துவிடுகிறாள். அதன் பிறகு இருவரும் தப்ப முடிந்ததா… என்ன திருப்பம் நிகழ்ந்தது என்பதை திரையில் அல்லது ஓடிடி மூலம் கண்டு ரசியுங்கள்.

படம் முழுக்கவே இரண்டு பெண்கள் மட்டுமே வருகிறார்கள் என்றாலும், சின்னச்சின்ன உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளதால், படம் வேகமாகவே நகர்கிறது.

ஆரம்ப கட்டத்தில் ஒரு விலங்கை கழுகுகள் கொத்தித் தின்பதை பார்க்கும் பெக்கி, கோபமாகி அந்த கழுகுகளை விரட்டியடிப்பாள். அப்போது, ‘இது ஒரு உணவுச் சங்கிலி, இதைக் கண்டு கோபப்படுவதில் அர்த்தமில்லை’ என்று ஹண்டர் விளக்கம் சொல்வதை பெக்கி ஏற்க மாட்டாள். ஆனால், பெக்கி பசியால் தவிக்கும் சூழல் ஏற்படும்போது, அவளுடைய காயத்தை கொத்தவரும் கழுகைப் பிடித்துக் கொடூரமாகத் கொன்று, அதன் உடலைக் கிழித்து மாமிசத்தை தின்பாள். உணவுச் சங்கிலியின் முன்பு எல்லாமே சரி என்பதை உணர்வாள்.

சமூகவலைதள நட்பு வட்டாரம் எத்தனை பெரிதாக இருந்தாலும் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவாது என்பதை ஹண்டரின் வாழ்க்கை சொல்லிவிடும். அவள் டவரில் ஏறப்போகும் சாகசத்தைப் பார்க்கும் ஃபாலோயர்ஸ் யாருமே, அதன்பிறகு அவளுக்கு என்ன ஆனது என்பது குறித்து கவலைப்படவோ, தேடவோ மாட்டார்கள். ஏதேனும் போஸ்ட் போட்டால், அதை பார்ப்பதும் பாராட்டுவதும், விமர்சனம் செய்வதும் மட்டுமே ஃபாலோயர்ஸ் வேலை என்பதை நெத்தியில் அடித்து புரியவைக்கிறது. .

உயிர் வாழ்வதலே வாழ்க்கையின் ஒரே லட்சியம். கண்ணுக்கு முன்னே பிடித்தமான ஒருவரின் மரணம் நிகழ்ந்தாலும், அதை பார்த்து அழுது புரண்டாலும், அவருடன் யாரும் மரணம் அடையப் போவதில்லை. எத்தனை துயரம் இருந்தாலும், நெருக்கடி ஏற்பட்டாலும், கடைசி நொடி வரையில் வாழ்வதற்குப் போராடுவதே உயிரின் குணம். தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக எத்தனை கொடூரமான காரியத்தையும் மனிதன் செய்வான். அதற்கு சூழ்நிலையை காரணம் காட்டுவான் என்பதை இயக்குனர் ஸ்காட் மன் அற்புதமாக காட்டியிருக்கிறார்.

ஒரு ட்விஸ்ட், ஒட்டுமொத்த படத்தையும் உறைய வைக்கிறது. அந்த ஒரு ட்விஸ்ட்டை அனுபவிக்க வேண்டுமென்றால் படத்தைப் பாருங்கள். .

மலையேறும் அனுபவம் உள்ளவர்கள் எப்படி சிறிய கயிறு மட்டும் எடுத்துக்கொண்டு போவார்கள், தொலைதொடர்புக்கு ஏன் மாடர்ன் சாதனம் கொண்டுபோகவில்லை என்பது போல் நிறையவே லாஜிக் மீறல்கள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ரசிக்க வேண்டிய திரைப்படம்.   

Leave a Comment