ஈஸி லைஃப் டெக்னிக்
பிரபல சினிமா நடிகரும், கராத்தே வீரருமான புரூஸ்லியிடம் பத்திரிகையாளர்கள், ‘நீங்கள் எத்தனையோ முறை படப்பிடிப்புகளில் அடிபட்டு படுகாயம் அடைந்திருக்கிறீர்கள். எலும்புகள் உடைந்திருக்கின்றன. கடுமையாக பயிற்சிகளை எல்லாம் செய்கிறீர்கள், நிஜமாகவே அடி வாங்குகிறீர்கள், அடி கொடுக்கிறீர்கள். இவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு இரும்பு போன்ற உடலை எப்படி உருவாக்கினீர்கள்?’ என கேள்வி கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘என் உடலை இரும்பாக நான் வைத்திருக்கவில்லை. தண்ணீராக மாற்றியிருக்கிறேன். ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டு புதுப்புது வடிவம் எடுக்கும் தண்ணீராக என் உடல் இருப்பதாலே, எதையும் தாங்கிக்கொள்ள முடிகிறது’ என்றார்.
ஆம், தண்ணீர் அத்தகைய மகத்துவமானது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தண்ணீரை பார்த்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லா இடங்களிலும் நுழைந்துவிடும் தண்ணீரை தொட்டுப் பார்க்கும்போது சாதாரணமாக, பலவீனமாக, மென்மையாகத் தெரியும். ஆனால் அதுவே பாறைக்குள் கசிந்து, நுழைந்து, பனியாகஉறைந்து பின்னர் விரிவடையும்போது, அந்த பாறையை இரண்டாகப் பிளந்துவிடுகிறது.
வெப்பம் வந்தால் ஆவியாகி, குளிர் வந்தால் பனியாகி தண்ணீர் தன்னை மாற்றிக்கொள்ளும். தண்ணீர் ஆவியாகி காணாமல் போய்விட்டது என்று நினைத்தால், அதுவே பெரு மழையாகி மீண்டும் வந்து சேர்ந்துவிடும். சூழலுக்கு ஏற்ப எப்படியெல்லாம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை தண்ணீர் அறிந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அதனாலே காலத்தையும் சூழலையும் கடந்து பெருவாழ்வு வாழ்கிறது.
தண்ணீர் பாய்ந்துவரும்போது ஒரு மாபெரும் மலை குறுக்கே நின்றால், அதனை தண்ணீர் எதிர்த்து நின்று உடைப்பதில்லை. மாறாக, அதனை தழுவிக்கொண்டு பாய்ந்து ஓடி, அந்த மலையை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துவிடுகிறது. அதனாலே, தண்ணீருக்கு முன்பு எந்த மலையும் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.
பாய்ந்துவரும் வெள்ளத்தை யாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஒரு பக்கம் அடைத்துவைத்தால், மறுபக்கம் தனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொள்ளும். எத்தனை அழுக்குகளை சுமந்தாலும், நதி தூய்மையாகவே பாய்கிறது.
அத்தகைய தண்ணீரால் உருவானது இந்த உலகம். தண்ணீரால் உருவானது உயிர், தண்ணீரால் உருவானது உடல். தண்ணீரில் இருந்தே உணவும் உருவாகிறது.
எனவே தண்ணீரை பார்த்து பாடம் கற்றுக்கொள்வோம். சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்வோம். எதிர்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு, புதிய பாதையில் நடை போடுவோம்.
வாழ்க்கையில் துன்பம், துயரம் வரும் நேரங்களில் தண்ணீரை நினைத்துப் பார்ப்போம். தண்ணீர் எத்தனை அழுக்குகளை சுமக்கிறது, எத்தனை தடைகளைத் தாண்டுகிறது, எத்தனை பேர் தாகத்தைத் தீர்க்கிறது..?
நாமும் தண்ணீராய் மாறுவோம்… அதுவே மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்