இந்த கழுதை போல வாழுங்கள்

Image

தோல்வியிலும் வெற்றி நிச்சயம்

’எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே…’  என்ற பிரபலமான பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

இது உண்மையா..?

ஏனென்றால் அன்னைக்கு மூன்று குழந்தைகள் என்றால், மூவரிடமும் சமமாகவே அன்பு செலுத்துவாள். எந்த பாகுபாடும் பார்க்கமாட்டாள். அந்த மூன்று பிள்ளைகளும் உருவத்தில்கூட ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால், குணத்தில் நிச்சயம் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவர் சாந்தமானவராக, ஒருவர் கோபக்காரராக, ஒருவர் பக்திமானாக என்று ஆளுக்கு ஒரு பண்புகளுடனே இருக்கிறார்கள். மூவருக்கும் ஒரே மாதிரி உணவு பிடிப்பதில்லை, மூவருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

ஒவ்வொருவரும் அவருடைய மனதுக்கு என்ன பிடிக்கிறதோ, அதையே தன்னுடைய குணமாக, பண்புகளாக அமைத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், எந்த ஒரு விஷயத்தையும் ஒவ்வொருவரும் தனிக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். நடைபெறும் ஒரே விஷயத்தை நேர்மறையாகப் பார்ப்பவர்களும் உண்டு, எதிர்மறையாக பார்ப்பவர்களும் உண்டு. மழை பெய்வதைக் கண்டு சந்தோஷப்படுபவர்களும் உண்டு, இந்த நேரத்தில் ஏன் இப்படி கொட்டுது என்று சலிப்பவர்களும் உண்டு.

அதேபோல், அப்பா குடிகாரராக இருந்தால் பிள்ளையும் குடிகாரனாக வளர்வது சகஜம். அப்பா குடிப்பதை மகன் சாதகமாக எடுத்துக்கொண்டு, அவனும் சிறு வயதிலேயே குடிகாரனாக மாறிவிடுகிறான். ஆனால், அப்பாவின் குடிப்பழக்கத்தால் வீட்டில் நிகழும் அன்றாட பிரச்னைகள், அவமானங்கள், உடல்நலக் கோளாறுகள் போன்றவைகளைப் பார்த்து வெறுப்படைந்து, அதனை பாடமாக எடுப்பவரும் உண்டு. அதன்படி, ‘நான் என் வாழ்க்கையில் குடிக்கவே மாட்டேன், என் அப்பாவைப் போல் தவறு செய்ய மாட்டேன்’ என்று முடிவு செய்து, நல்லவராக வளரும் பிள்ளைகளும் உண்டு. ஆம், ஆழ் மனதுக்கு ஒருவர் என்ன செய்தி அனுப்புகிறாரோ, அதுவே பழக்கமாகவும், குணமாகவும் மாறிவிடுகிறது.

சுற்றுப்புறம், உறவுகள், பள்ளி, பொருளாதாரம், பெற்றோர் கவனிப்பு, அக்கம்பக்க நிகழ்வுகள், தொலைக்காட்சி, சினிமா போன்ற எல்லாமே மூன்று சகோதரர்களுக்கும் ஒரே மாதிரி கிடைத்தாலும், கிடைக்கும் அனுபவங்களை அவரவர் எண்ணங்களுக்கு ஏற்பவே புரிந்துகொள்கிறார்கள், அவரவர் மனதுக்கு எது விருப்பமோ, அந்த வகையில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரே சூழலில் இருக்கிறார்கள் என்றாலும், ஒவ்வொருவரும் அவரவருக்கான வாழ்க்கையை வெவ்வேறு விதமாக எடுத்துக்கொண்டு வளர்கிறார்கள், வாழ்கிறார்கள்.

வடிவேலுவின் நகைச்சுவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரத்தில், எவரேனும் ஒருவர் வாய் விட்டு சிரிப்பார். ஒருசிலர் புன்னகைப்பார். இன்னும் ஒரு சிலர், ‘இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது’ என்ற ரீதியில் நகர்வார். எல்லாவற்றையும் ரசித்து வாழ வேண்டும் என்று மனதில் நினைப்பவர் சிரிக்கிறார். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தேவையின்றி பிறர் முன்பு சிரிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவர் சிரிக்காமல் நகர்கிறார்.

அப்படித்தான், தொழில், உறவு, ஜாதி, மதம், மொழி, இனம் போன்றவைகளில், ஒவ்வொரு நபரும் வெவ்வேறு வகையில் அபிப்பிராயம் வைக்கிறார்கள். வாழ்க்கையில் அவர்கள் பார்த்த, கேட்ட, படித்த அனுபவங்களின் அடிப்படையில் ஜாதி, மதம், இனம், மொழி, உறவு, நேசம் போன்றவற்றை அணுகுகிறார்கள்.

வாழ்க்கையில் கிடைத்த தோல்விகளை, ஏமாற்றங்களை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு, முன்னேறுபவர்கள் வெற்றியை நோக்கி நகர்கிறார்கள். தோல்வி கிடைக்கும் என்று அஞ்சுபவர்கள் பயணிக்காமலே இருப்பதுண்டு. எனவே, எல்லா நேரமும் நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் நினைக்க வேண்டும். நம்மைச் சுற்றி எத்தனை தீயவை நடந்தாலும், கெட்டவை நிகழ்ந்தாலும், அவற்றையும் நன்மையாக மாற்றிக்கொள்ள வேண்டும். .

இதற்கு ஒரு கழுதை கதையை உதாரணமாகச் சொல்லலாம்.

தன்னுடைய தோட்டத்தில் பக்கத்து வீட்டு கழுதை நுழைவதைக் கண்ட மகேந்திரன், அதனை விரட்டுவதற்கு முயற்சி செய்தார். அவர் கம்பை எடுத்து விரட்டியதும் மிரண்டு  ஓடிய கழுதை, அவருடைய வீட்டிலிருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

’கழுதையை வேண்டுமென்றே கிணற்றுக்குள் தள்ளிவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வருவான், கழுதைக்கு கால் உடைந்திருந்தால் நஷ்ட ஈடு கேட்பான்’ என்று மகேந்திரன் பயந்து போனார். அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதாவது, நீண்ட நாட்களாகவே அந்த கிணற்றை மூட வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு லோடு மண் அடித்துப் போட்டிருந்தார். அதனை உள்ளே அள்ளிப்போட நேரமில்லாமல் இத்தனை நாட்களாக தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார்

அந்த எண்ணத்தை இப்போது நிறைவேற்றலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதாவது, மண்ணை போட்டு கிணற்றை மூடுவதன் மூலம் கழுதையும் உள்ளேயே புதைந்துவிடும். கிணறும் மூடிவிடும். இந்த பிரச்னையில் இருந்து நாம் தப்பிவிடலாம் என்று நினைத்தார்.

உடனே மண் வெட்டியை எடுத்துக்கொண்டு வந்து மளமளவென மண்ணையும் கல்லையும் பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளினார். மண்ணை தள்ளிக்கொண்டே இருந்தவர், ஒரு கட்டத்தில் கிணற்றை எட்டிப் பார்த்து ஆச்சர்யமானார்.

ஆம், இவர் போட்ட மண் மீது ஏறி, ஏறி கழுதை ஜம்மென்று கிணற்றிலிருந்து வெளியே வருவதற்குத் தயாராக வெகு பக்கத்தில் இருந்தது. இந்த கழுதை போன்ற நம்பிக்கையே மனிதருக்கு அவசியம்.

தன்னை உயிருடன் புதைப்பதற்காக மண் கொட்டப்படுகிறது என்று கழுதை நினைத்திருந்தால், நின்ற இடத்திலேயே நின்று, கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் மூழ்கி செத்துப் போயிருக்கும். ஆனால், இந்த மண் தன்னை காப்பாற்றுவதற்காக போடப்படுகிறது என்று நம்பியது. அதனால், அதன் மீது ஏறி, ஏறி நின்று உயிர் தப்பியது.

இப்படித்தான், குறை சொல்பவர்கள், வசையாளர்கள், புறம் சொல்பவர்கள், அவநம்பிக்கையாளர்கள், ஏமாற்றுபவர்கள் சுற்றி நிற்கத்தான் செய்வார்கள்.  அவர்களுடன் இணைந்தே நாம் வாழத்தான் வேண்டும். அவர்களை சகித்துக்கொள்வதும் வாழ்க்கையின் ஒரு பகுதியே. அதேநேரம், அவர்களுடைய கெட்ட எண்ணமும் கருத்தும் நம் ஆழ்மனதை அசைத்துவிடக் கூடாது. யாரேனும் ஒருவர் அவநம்பிக்கை விதைப்பதாக தெரிந்தால், அவருடன் பேச்சுவார்த்தையை வளர்க்காமல் நறுக்கென சுருக்கிக்கொண்டு நகர்ந்துவிட வேண்டும்

Leave a Comment