ஜென் முத்துக்கள்
வாழ்வின் அருமையை எளிமையாகவும் தெளிவாகவும் புரிய வைப்பவை ஜென் கதைகள். படித்துப் பாருங்கள். பிடித்துப் போகும்.
அற்புதம்
ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான்.
ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். ’எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். ‘சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம்…’ என்றான்.
’அப்படி உன்னுடய குரு என்னென்ன அற்புதம் நிகழ்த்துவார்?’ என்று கேட்டான்.
’எங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால்… யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்’ என்றான்.
மனம்
இரண்டு ஜென் துறவிகள் காற்றில் கொடி அசைவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“கொடி அசைகிறது,” என்றார் ஒரு துறவி.
“இல்லை, காற்றுதான் அசை கிறது,” என்றார் மற்றொரு துறவி.
அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த மற்றொரு ஜென் குரு அவர்களிடம், “காற்றும் அசையவில்லை, கொடியும் அசையவில்லை; உங்கள் மனம்தான் அசைந்துகொண்டிருக்கிறது,” என்றார்.
வளர்ச்சி
“குருவே, நான் வளர்ந்து வருகிறேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார் ஒரு மாணவர்.
“ஒரு காலத்தில், எது உன்னை அதிகமாக வருத்திப் பைத்தியமாக்கியதோ, அதுவே உன்னை இப்போது சிரிக்க வைக்கும். அப்போது நீ வளர்ந்ததைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் குரு.
எதுவும் இல்லை
“குருவே, இன்று என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டார் மாணவர்.
“எதுவும் இல்லை” என்றார் ஜென் குரு.
“ஆனால், நேற்றும் நீங்கள் அதைத்தான் செய்தீர்கள்” என்றார் மாணவர்.
“ஆமாம், அதை நான் முழுமையாகச் செய்து முடிக்கவில்லை” என்றார் குரு.
கடவுள்
ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தன்னுடைய மூன்று சீடர்களில் ஒருவருக்கு கொடுக்க முடிவு செய்தார் ஜென் குரு. எனவே அவர்களிடம், ‘மூன்று பேரும் வெளி உலகை சுற்றிப் பார்த்துவிட்டு, ஓர் ஆண்டு கழித்து திரும்பி வாருங்கள். அப்போது, கடவுள் பற்றி தெளிவான கருத்து சொல்பவர் ஆசிரமத் தலைவராகலாம்’ என்று அனுப்பி வைத்தார்.
அப்படி மூன்று பேரும் ஓர் ஆண்டு கழித்து திரும்பிவந்தனர்.
முதல் மாணவன், ‘குருவே, நான் கடவுளைக் கண்டேன். அவருக்கு உருவம் இல்லை. அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றான்.
இரண்டாம் மாணவன், ‘இறைவன் ஒளி வடிவமாக இருக்கிறார். ஆனால் அவரை கண்களால் காண இயலாது. மனதால் மட்டுமே தரிசிக்கலாம்” என்றான்.
மூன்றாவது மாணவன், ’குருவே எனக்குக் குழப்பமாக உள்ளது. கடவுளை ஆறறிவால் அறியவோ, மனத்தால் உணரவோ என்னால் முடியவில்லை’ என்றான்.
குரு புன்னகையுடன் மூன்றாவது சீடனை தேர்வு செய்தார்.