என்ன செய்தார் சைதை துரைசாமி – 205
நெசப்பாக்கம் சாலைக்குத் தீர்வாக இணைப்பு சாலை அமைக்கலாம் என்று மேயர் சைதை துரைசாமி சொன்னதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அதேநேரம், இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு ஏகப்பட்ட தடைகள், சிக்கல்கள் இருப்பதால் கை விடலாம் என்றே சொன்னார்கள்.
ஆனால், மேயர் சைதை துரைசாமி மட்டும் அந்தத் தீர்வை எட்டியே தீர்வது என்பதில் தீவிரமாக இருந்தார். ஆணையர் விக்ரம் கபூருடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினார். இருவரும் குடிநீர் வாரிய இடத்தை கள ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை செய்தார்கள்.
இணைப்பு சாலை அமைக்க வேண்டுமென்றால், அதற்கு பொதுப்பணித்துறைக்குக் கீழ் வரும் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் கட்டுமானத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி இரண்டு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்று தெரியவந்தது. அத்தனை பெரிய தொகையைக் கட்டுவதற்கு அதிகாரிகள் தரப்பிலும் சில அரசியல்வாதிகளும் ஆட்சேபனை எழுப்பினார்கள்.
எதிர்ப்பு தெரிவித்தவர்களின் ஆட்சேபத்தை புறம்தள்ளி, மக்கள் நலனுக்காக குறிப்பிட்ட தொகையைக் கட்டி பிரச்னையைத் தீர்ப்பதற்கு சைதை துரைசாமி முன்வந்தார். இந்த திட்டத்தில் மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் நின்ற காரணத்தால், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ் பெற்று, உரிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும், மேயர் தன்னுடைய பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினார். சைதை துரைசாமியைத் தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது என பொதுமக்களும், மாநகராட்சி அதிகாரிகளும் பாராட்டினார்கள். இந்த இணைப்பு சாலை உருவாக்கப்பட்டதும் ராமாவரம், நெசப்பாக்கம் பகுதி மக்களுக்கு நெரிசல் குறைந்து மிகுந்த மன நிறைவு ஏற்பட்டது. இப்படி ஒவ்வொரு திட்டத்திலும் தன்னுடைய முத்திரை பதித்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.