கலாச்சாரத்தில் ஹெல்த்
பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளின் நோக்கம் கேளிக்கையோ, உடல் பயிற்சியோ மட்டுமல்லாது, உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கத்தில் அமைந்திருந்தது என்பதுதான் நம் கலாசார பெருமை ஆகும்.
அன்றைய சிறுவர்கள் மாலை நேரம் முழுவதும் குழுவாகச் சேர்ந்து விளையாடி மகிழ்வார்கள். பெரியவர்களும் தங்கள் குழந்தைகளை வெளியில், வியர்வையில் விளையாடுவதைக் கண்டு அகம் மகிழ்வார்கள். ஆனால், இன்று நடப்பதே வேறு. வீட்டின் அறைகளுக்குள், செல்போன், தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்களுக்குள் இன்றைய குழந்தைகளை அடைத்துவிட்டனர்; அலைந்து விளையாட வேண்டிய அவசியமில்லாத சொகுசான விளையாட்டையே குழந்தைகளும் விரும்புகின்றனர். இன்றைய சிறுவர்களின் கனவிலும் நினையாத அளவுக்கு சுவாரஸ்யமும் சுவையும் நிறைந்த விளையாட்டுத்தான் நொண்டி.
பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளில் நொண்டி விளையாட்டும் ஒன்று. ஒற்றைக்காலில் தவ்வி தவ்வி விளையாடுவதே நொண்டி. இதில், சில்லு விளையாட்டு என இன்னொரு நொண்டி வகையும் இருக்கிறது. அதில், மண் தரையில் சிறுசிறு கட்டங்களாகப் போட்டு பானை ஓட்டுச் சில்லுகளைக் கொண்டு ஒற்றைக்காலால் தள்ளித்தள்ளி ஆடுவர். இதுகுறித்து பிறகு பார்க்கலாம். ஆனால், பொதுவாக, இந்த நொண்டி விளையாட்டு என்பது இரண்டு கால்களால் ஓடுபவர்களை, ஒற்றைக் காலில் நொண்டி அடித்துத் தொடுவது ஆகும். பெரும்பாலும், இதைக் குழந்தைகளே விளையாடுவர். அதிலும் பெண் குழந்தைகளே அதிகம் விளையாடுவர். சில இடங்களில் பருவம் எய்திய பெண்களையும் இதில் பார்க்க முடியும்.
இந்த நொண்டி விளையாட்டை இரு அணிகளைக் கொண்டும் விளையாடலாம். அவ்வாறு விளையாடும்போது ஓர் அணி கைகளைக் கோத்துக்கொண்டு ஆள்வட்டம் செய்து நிற்கும். மற்றோர் அணி, அந்த ஆள்வட்டத்திற்குள் நிற்கும். ஆள்வட்டம் செய்து நிற்கும் அணியில் ஒருவர் நொண்டி அடித்துச் சென்று உள்ளே ஓடும் மற்றோர் அணியினரைத் தொடுவார். கால் வலிக்கும்போது வட்டத்தில் வந்து கை கோத்துக்கொண்டு அருகில் இருப்பவரை நொண்டி அடித்துச் சென்று தொடச் சொல்லலாம். நொண்டி விளையாட்டிற்கு இத்தனை பேர் விளையாட வேண்டும் என வரைமுறை எதுவும் இல்லை.
இதற்காக வட்டத்தையோ அல்லது சதுரத்தையோ போட்டுக்கொள்ள வேண்டும். விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் ஓடவேண்டும். அவர்களை ஒருவர் நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். நொண்டி அடித்து செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் (காலை வைத்து) போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுல் நின்றுகொள்ளலாம். வட்டத்தைத் தவிர மற்ற பகுதியில் காலை ஊன்றக்கூடாது. நொண்டி அடித்துச் செல்பவர் ஒருவரைத் தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் காலை ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டும் வந்து ஓடும் வாய்ப்பைப் பெறுவார். இவ்வாறு நொண்டி விளையாட்டு தொடரும்.
தினமும் நொண்டி விளையாடும் குழந்தைகள் நன்றாக சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இந்த விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தைக் குறைக்கிறது. இது, கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. கால்களை மாற்றி மாற்றி ஒற்றைக் காலில் ஓடுவதால், கால்களின் வலிமை அதிகரிக்கிறது. இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு, தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. மேலும், இப்படி சக குழந்தைகளோடு அவர்கள் விளையாடுவதால், சமுதாயத்தில் அடுத்தவர்களோடு எப்படி பழக வேண்டும், எதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற தெளிவும் அவர்களுக்கு கிடைக்கிறது.
தினமும் இரண்டு நிமிடம் நொண்டி விளையாடினால் வயதானவர்களின் இடுப்பு எலும்பும், கால் எலும்பும் பலமாகும் என ஆய்வு ஒன்று சொல்கின்றது. இதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் 60 – 80 வயதுக்கு இடைப்பட்ட முதியவர்களை தினமும் இரண்டு நிமிடம் நொண்டி விளையாடச் செய்து சுமார் ஒரு வருட காலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் அவர்களின் உணவு மாறுபாடு மற்றும் வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளில் இருந்து விலகி இருக்குமாறு செய்தனர். ஆய்வின் முடிவில் தினமும் இரண்டு நிமிடம் தத்தி தத்தி நொண்டி விளையாடிய அவர்களின் தொடை, இடுப்பு மற்றும் கால் எலும்புகளில் ஏழு சதவிகித வளர்ச்சி காணப்பட்டது. இந்த வளர்ச்சி சாதாரணமாகக் கீழே விழுபவர்களின் எலும்பு முறியாமல் பாதுகாக்கப் போதுமானதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நொண்டி விளையாடுவோம்… நூறு வயது வரை வாழ்வோம்.