சர்க்கரை நோய்க்கு விடை கொடுக்கலாம்..!

Image

எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்.

சர்க்கரை நோய். உலக அளவில் இந்தியா சர்க்கரை நோயில் முதலிடம் பிடித்திருக்கிறது. வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் முதலிடம் பிடிக்க வேண்டிய இந்தியா, சர்க்கை நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்திருப்பது வருத்தமான தகவல்தான். ஆனாலும் பரவாயில்லை… சர்க்கரை நோயை வென்றெடுக்க நமது முன்னோர் பின்பற்றி வந்த பாரம்பரிய இயற்கை மருத்துவத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன.

உமிழ்நீர் மருந்து

சர்க்கரை நோயாளிகள் முதலில் நாம் உண்ணும் உணவு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். `வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம்’ என்ற கதையாக இருக்கக்கூடாது. அதேபோல் விரும்பிய எல்லாவற்றையும் நேரம் காலம் பார்க்காமல் சாப்பிடக்கூடாது. வெந்தது, வேகாதது என இரண்டையும் ஒருசேர சாப்பிடக்கூடாது. காலை தொடங்கி இரவு வரை உணவு விஷயத்தில் சில ஒழுக்கங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும். பசித்த பின் புசி… என்பார்களே, அது சர்க்கரை நோயாளிகளுக்கு சரியாக இருக்கும். அதற்காக காலம் கடந்தும் சாப்பிடக்கூடாது. நாம் உண்ணக்கூடிய உணவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக திட உணவுகளை நன்றாக மென்று கூழாக அரைத்துச் சாப்பிட பழக வேண்டும். இதை இன்றைய சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல… நாளைய சர்க்கரை நோயாளிகளுக்கும் பயனுள்ளது.

இயற்கை வழி

காலையில் கண் விழிப்பதிலிருந்து சில ஒழுக்கங்களை பின்பற்ற பழகிக்கொண்டால் சர்க்கரை நோயிலிருந்து மட்டுமல்ல வேறு பல நோய்களிலிருந்தும் விடுதலை பெற்றுவிடலாம். பற்பசைகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஆலங்குச்சி, வேலங்குச்சி அல்லது நாயுருவி வேர், புங்கை மரக்குச்சி போன்றவற்றைக் கொண்டு பல் துலக்குவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இவை எதுவும் கிடைக்கவில்லையென்றால் கிராம்பு, பட்டை, கடுக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகச் சேர்த்தோ அரைத்து பல் துலக்கலாம். புதினாவை காயவைத்து அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு பல் துலக்கலாம்.

காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக கொய்யா இலை, சீத்தா மர இலை போன்றவற்றை நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதை வெறும் பானமாகக் குடிக்கலாம். வெறுமனே அருந்துவது சாலச் சிறந்தது. கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் நெல்லிக்காய், பாகற்காய் சேர்த்து அரைத்த ஜூஸ் குடிக்கலாம். ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொண்டு அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக பாகற்காய் சேர்த்து அரைத்து வடிகட்டிக் குடிக்கலாம். அதன்பிறகு காலை உணவாக பழங்கள் சாப்பிடுவது நல்லது.

விதவிதமான பழங்கள்

பழம் என்றதும் நம்மில் பலர் வாழைப்பழத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். பொதுவாகவே ஒரே பழமாக இல்லாமல் கொய்யா, பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்வது தவறு. ஏனென்றால், பழங்களில் உள்ள இயற்கையான இனிப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு கேடு விளைவிப்பதில்லை.

தினமும் வாய்க்கு ருசியாக விதம்விதமாக இட்லி, இடியாப்பம், புட்டு, சப்பாத்தி, பூரி கிழங்கு என சாப்பிட்டவர்களுக்கு பழம் சாப்பிட்டால் பசி தாங்காதே என்று தயக்கம் வரலாம். இவர்களுக்கு பசி எடுத்தால் இரண்டு மணி நேரம் கழித்து வழக்கமான காலை உணவை கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். சிலர் 11 மணியளவில் டீ குடிப்பது வழக்கம். அவர்கள் டீக்குப் பதிலாக மோர் அருந்துவது நல்லது. வெறும் மோராக இல்லாமல் அதனுடன் அரை ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, அரை ஸ்பூன் நாவல்கொட்டை பொடி போன்றவற்றை சேர்த்துச் சாப்பிடலாம்.

மதிய உணவு

டுத்தது மதிய உணவு. வறுத்தது, பொரித்தது என்று இல்லாமல் கசப்பு, துவர்ப்பு அதிகம் உள்ள காய்கறிகளை அவித்துச் சாப்பிடுவது நல்லது. பாகற்காயில் தொடங்கி கோவைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், பிஞ்சு கத்தரிக்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது. கிழங்குகளைத் தவிர்த்து மற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

இறைச்சி உணவுகளை செரிமானமாகும் அளவுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இறைச்சி சாப்பிடுபவர்கள் வெற்றிலை போடுவது நல்லது. வெற்றிலை என்றதும் நம்மில் பலர் வெறும் வெற்றிலைதானே? என்று கேட்பார்கள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையைச் சாப்பிட்டால்தான் அதன் முழு பலன் கிடைக்கும்.

ஆவாரம் தேநீர்

மாலையில் டீ குடிப்பது நம்மில் பலருக்கும் உள்ள வழக்கம். டீக்குப் பதில் ஆவாரம்பூ தேநீர் அல்லது சுக்கு மல்லி காபி குடிக்கலாம். வடை, போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு பழகியவர்கள் என்றைக்காவது சாப்பிடலாம். ஒன்றுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. இதையடுத்து இரவு உணவாக கறுப்பு கவுனி அரிசியில் செய்த கஞ்சி அல்லது வழக்கமான அரிசிகளில் செய்த இட்லி, இடியாப்பம் மற்றும் சோறு சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் செரிமானத்தில் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய எந்த உணவையும் சேர்த்துக்கொள்ள வேண்டாம். இரவு உணவு முடித்து இரண்டு மணி நேரம் கழித்து தூங்குவதை வழக்கமாக வைத்துக்கொள்ளலாம். அதற்கு முன்னதாக திரிபலா சூரணம் அரை ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்லது. இது மலச்சிக்கல் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும். இந்த உணவுப் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுபவர்களால் நிச்சயமாக சர்க்கரை நோயிலிருந்து விடுபட முடியும்.

தொடர்புக்கு : 9551486617

Leave a Comment