அசத்தலான ஐந்து தகவல்கள்
இடதுகைப் பழக்கம்
மைக்கேல் ஏஞ்சலோ, அலெக்ஸாண்டர், நெப்போலியன், பிடல் காஸ்ட்ரோ, சார்லி சாப்ளின், மர்லின் மன்றோ, ஒபாமா போன்றவர்களுக்கு உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
இவர்கள் அனைவருமே இடதுகை பழக்கம் உள்ளவர்கள்.
பொதுவாக மனிதர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேருக்கு இடப்பக்க மூளைதான் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலோர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 7 முதல் 10 சதவிகித மனிதர்கள்தான் இடது கை பழக்கம் உள்ளவர்களாகப் பிறக்கிறார்கள்.
நமது வீட்டின் கதவுப் பிடிகள், பூட்டுகள், திருகாணிகள், கார்கள், இசைக்கருவிகள் போன்ற பலவும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வசதியாகத்தான் தயாரிக்கப்படுகிற்து. அதனால் இவற்றைக் கையாள்வதில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும்.
இடது கை பழக்கம் தவறானது என்று பெற்றோர்கள் கவலைப்படுவதும், குழந்தைகளைத் திருத்த முற்படுவதும் அவசியம் இல்லாதது. இடதுகைப் பழக்கம் என்பது ஒரு குறையே கிடையாது. அதனால் அதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வலிந்து பழக்கத்தை மாற்ற முற்பட்டால் பேச்சுத் திறனும் பார்வைத் திறனும் பாதிக்கப்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் இடது கை பழக்கமும் ஆரோக்கியமானதுதான்.
ஒரு சிலரை மட்டும் கடிப்பதுஏன்?
முன்பு மாலை நேரங்களில் மக்கள் என்ன செய்வார்கள்?
வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவீட்டு வாசலில் உட்கார்ந்து ஜாலியாக அரட்டை அடிப்பார்கள். சிறுவர்கள் விளையாடுவார்கள். ஆனால் இப்போது, மாலை நேரம் வந்தாலே ஜன்னல், கதவுகளை எல்லாம் சாத்துகிறார்கள். இல்லையென்றால் வீட்டுக்குள் கொசுக்கள் படையெடுத்து வந்துவிடும்.
கொசுக்களிடம் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் தண்ணீருக்கு அடுத்தபடியாக நிறைய நோய்களைப் பரப்பும் தன்மை கொசுக்களுக்குத்தான் இருக்கிறது. நான்கு பேர் பேசிக்கொண்டு இருந்தால், அவர்களில் ஒருவர் அல்லது இருவரை மட்டும் கொசுக்கள் விடாமல் கடிக்கும். மற்றவர்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதற்குக் காரணம் தெரியுமா?
பொதுவாக மனிதர்களைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான். மோப்ப சக்தி மூலம் மனிதனைத் தேடி வருகின்றன. கொசுக்களால், அதன் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். யாருடைய வியர்வையில் கொசுக்களுக்குப் பிடித்தமான மணங்கள் தென்படுகிறதோ, அவர்களைத்தான் கொசுக்கள் தேடிப்பிடித்துக் கடிக்கின்றன.. எனவே, இனிமேல் கொசு உங்களை மட்டும் அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் உங்கள் வியர்வையில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வியர்வை வாசனையைக் குறைக்கும்படி குளியல் போடுவது, கொசுவை விரட்டும் களிம்புகளை தடவுவதன் மூலம் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.
களவும் கற்று மற
ரொம்பநாளாவே எனக்கு ஒரு சந்தேகம்…
சந்தேகம்னா கேட்டுற வேண்டியதுதானே…
களவும் கற்று மறன்னு சொல்றாங்களே.. அப்படின்னா திருடுறது எப்படின்னு கத்துக்கிட்டு, அதுக்குப் பிறகு அதை மறந்துடச் சொல்றாங்களா?
நம்ம பெரியவங்க அப்படியெல்லாம் சொல்லவே இல்லை… சொல்லவும் மாட்டாங்க. அவங்க சொன்னது, ’களவும் கத்து மற’ என்பதைத்தான்.. அதுதான் இப்போ களவும் கற்று மறன்னு ஆகிப்போச்சு.
களவும் கத்து மறன்னா என்ன அர்த்தம்…
கத்துன்னா பொய், கயமை என்பதுதான் அர்த்தம்.
ஓ… அப்படின்னா களவு செய்வதையும் பொய் சொல்வதையும் மறந்துவிட வேண்டும் என்றுதான் சொன்னார்களா நம் முன்னோர்கள்?
இனியாவது சரியாகச் சொல்ல கற்றுக்கொள்ளூங்கள். இதை கற்றவுடன் மறந்துவிட வேண்டாம்.
வெயிலுக்கு நன்னாரி
நன்னாரி சர்பத் குடிச்சிருக்கீங்களா..?
அடேங்கப்பா என்னா சுவை. நன்னாரி வேர் சுவை மட்டும் தருவது இல்லை, அதில் பல்வேறு மருத்துவக் குணங்களும் உள்ளன. கோடை காலத்தில் எல்லோரும் பயன்படுத்த வேண்டிய மூலிகை என்றே இதைச் சொல்லலாம். இனிப்பும் சிறு கசப்பும் சேர்ந்திருக்கும் நன்னாரி வேருக்கு குளிர்ச்சித் தன்மை நிரம்பவே உண்டு.
அதனால் வெயில் பாதிப்பினால் உருவாகும் நீர்க்கடுப்பு, மூலச்சூடு போன்றவை குணமாவதற்கு நன்னாரி வேரை குடிநீருக்குள் போட்டுக் குடித்துவந்தாலே போதும். நன்னாரி வேரை தண்ணீரில் போட்டு சுடவைத்து, அந்த நீரைக் குடித்தாலும் நோயினால் ஏற்படும் பிரச்னைகள் தீருவதுடன் இளநரை, பித்த நரை போன்றவையும் நீங்கிவிடும்.
பித்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நன்னாரி வேரை அரைத்து பசும்பாலில் போட்டு குடித்து வரலாம். நன்னாரி போட்டு காய்ச்சி எடுத்த நீரை வடிகட்டி ஆறவைத்து குடித்துவந்தால் உடலுக்கு மினுமினுப்பு வருவதுடன் கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, வேனல்கட்டி போன்ற தொந்தரவுகளும் இருக்காது.
மணலும் முத்தாகும்
காத்திருந்தால் மண்ணும் பொன்னாகும் தெரியுமா?
மண் எப்படி பொன்னாகும்?
குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் சாதாரண மணல்கூட மாபெரும் மதிப்புள்ள பொருளாக உருமாறும் என்பது உண்மைதான். முத்துக்கள் எப்படி உருவாகிறது என்று தெரியுமா?
ம். தெரியும் சிப்பிகள் வாய் திறக்கும் நேரத்தில், மணல் அல்லது ஏதாவது ஒரு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிடுவதுண்டு. அந்நியப் பொருள் காரணமாக சிப்பியின் உட்பாகத்தில் இடையறாத உறுத்தல் ஏற்படுகிறது. அதனால் சிப்பி, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழிகிறது. அந்தப் பொருள் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளாகப் படிந்துவிட, அது குறிப்பிட்ட காலம் கடந்ததும் விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.
சீனர்கள் இப்போது செயற்கை முறையில் முத்துக்களை தயாரிக்கிறார்கள். அதாவது சிப்பியின் வாய் வழியே சிறு தானியங்கள், சின்னஞ்சிறு புத்தர் சிலைகளை உள்ளே தள்ளிவிடுகிறார்கள். இவையும் முத்துக்களாக மாற்றம் அடைகின்றன. ஆனால் இப்படி பெறப்படும் முத்துக்களைவிட, இயற்கை முறையில் கிடைக்கும் முத்துக்களின் மதிப்புதான் இன்னமும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.