என்ன செய்தார் சைதை துரைசாமி – 190
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் குழல் விளக்குகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பிரசாரம் செய்த நேரத்தில், தாமாகவே முன்வந்து தெருவிளக்குகளில் மாற்றம் கொண்டுவந்து சுற்றுச்சுழலுக்கு ஆதரவு காட்டினார் மேயர் சைதை துரைசாமி.
மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த நேரத்தில் பெரும்பாலும் பாதரச ஆவி விளக்குகளே பயன்பாட்டில் இருந்தன. வெள்ளை நிறத்தில் வெளிச்சம் தரும் இந்த விளக்குகள் குறிப்பிட்ட மின் அழுத்தம் இருந்தால் மட்டுமே இயங்கும். மேலும் இந்த விளக்குகளில் பாதரசம் உபயோகப்படுத்தப்படுவதால் அதிக வெப்பம் உருவாகி சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சோடியம் ஆவி விளக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விளக்குகள் மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் தரும், குறைந்த மின் அழுத்தம் இருக்கும்போதும் இயங்கும் என்றாலும் வெளிச்சம் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு இல்லை என்றாலும் மின் கட்டணம் அதிகம். அதனால் குறைந்த மின் திறனில் அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி. விளக்குகளை அறிமுகம் செய்ய மேயர் சைதை துரைசாமி முடிவெடுத்தார். இந்த வகை விளக்குகள் மின் சேமிப்புடன் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஆபத்து இல்லாதது.
சைதை துரைசாமி பதவிக்கு வரும்போது சென்னை மாநகராட்சியில் இருந்த 1,32,714 தெரு விளக்குகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். தெரு விளக்குகளின் எண்ணிக்கையை 2,77,902 ஆக உயர்த்தி சென்னை மாநகருக்குப் பொலிவூட்டினார். இவற்றில் 1,74,784 எல்.இ.டி விளக்குகளை அதாவது அவர் பதவிக்கு வரும்போது இருந்த எண்ணிக்கையைவிட, அதிக எண்ணிக்கையில் புதிய எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன. மீதமுள்ளவற்றையும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவதற்குத் திட்டமிட்டார். இந்த புதிய மாற்றத்தால் சென்னை மாநகராட்சிக்கு மாதத்திற்கு ரூ.1.5 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்துவது குறைந்ததுடன் நல்ல வெளிச்சமும் கிடைத்தது.
முதன்முறையாக அனைத்து மாநகராட்சி கட்டிடங்களிலும் சோலார் மேற்கூரை அமைப்பதற்கும் திட்டமிட்டார். அதன்படி முதல்கட்டமாக 60 மாநகராட்சி கட்டிடங்களில் சோலார் எனப்படும் சூரிய ஒளிசக்தி மேற்கூரை தகடுகள் மூலம் 180 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூரிய ஒளி மூலம் 1,32,670 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் மிச்சப்படுத்தப்பட்டது. சுற்றுசூழலுக்குப் பாதுகாப்பு கொடுத்த அதே நேரத்தில் மாநகராட்சியின் செலவையும் கட்டுப்படுத்தி சாதனை படைத்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.