என்ன செய்தார் சைதை துரைசாமி – 358
கூவம் நதி சீரமைப்பு என்பது காலம் காலமாக சென்னை மக்களுக்குத் தீராத தலைவலியாக இருந்துவருகிறது. சிங்கப்பூர் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இதனை சீரமைப்பு செய்ய முடியும் என்று நம்பிக்கை மேயர் சைதை துரைசாமிக்கு ஏற்பட்டது.
சிங்கப்பூர் மாடலில் சென்னையில் ஓடும் ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி கொடுத்த அறிக்கையை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அப்படியே ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் திட்டம் என்பதால், இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்கூட்டியே சில நடவடிக்கைகள் எடுக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். இதற்கு 150 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார்.
முதல்வர் உத்தரவுப்படி முதல்கட்டமாக சென்னையில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதி நிதியின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 75 பணிகள் உடனடியாக திட்டமிடப்பட்டன. அதன்படி கழிவுநீர்க் குழாய்களை பெரிதாக்கும் பணி 78,573 மீட்டர் நீளத்திற்கும், கழிவுநீர் விசை குழாய்களை பெரிதாக்கும் பணி 27,480 மீட்டர் நீளத்திற்கும், சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணி 2 இடங்களிலும் மற்றும் கழிவுநீர் நிலையம் மேம்பாட்டுப்பணிகள் 28 இடங்களிலும் நடைபெற்றன.
இந்தப் பணிகள் மூலம் ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், எழும்பூர், சேப்பாக்கம், தியாகராயநகர், மைலாப்பூர், விருகம்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கழிவுநீர் வழித்தடங்களில் கலப்பது தடுக்கும் பணிகள் நடைபெற்றன.
முதல் திட்டப் பணிகள் நடைபெற்றபோது, இரண்டாம் கட்டமாக ரு.163 கோடி மதிப்பீட்டில் 158 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி பக்கிங்காம் கால்வாயில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர்க் குழாய்களை பெரிதாக்கும் பணி, கழிவுநீர் விசை குழாய்களை பெரிதாக்கும் பணி மற்றும் சாலையோர கழிவு நீர் உந்துநிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதே போன்ற பணிகள் கூவம் நதியில் ரூ.57 கோடி மதிப்பீட்டிலும், அடையாறு நதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த காலகட்டத்தில் மேயர் சைதை துரைசாமியின் கனவு நனவாகத் தொடங்கியது.
- நாளை பார்க்கலாம்.