• Home
  • சர்ச்சை
  • சமையலறை உடைப்பு, ஹவுஸ் ஒய்ஃப் குற்றவாளிகள்

சமையலறை உடைப்பு, ஹவுஸ் ஒய்ஃப் குற்றவாளிகள்

Image

களம் இறங்கும் திராவிடர் தளம்

பெண்களை வீட்டுக்குள் முடக்கிவைப்பதற்காகவே சமையலறை, தாலி, கற்பு போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து பெண்கள் மீண்டு வெளியே வர வேண்டும் என்பதற்காக பெரியார் தொடங்கிய போராட்டத்தை இப்போது திராவிடர் தளம் முன்னெடுத்துச் செல்கிறது.

அவர்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கை புரட்சிகரமானது என்றே சொல்ல வேண்டும். ‘’தமிழ் நாட்டின் எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் “கலைஞர் பொதுச் சமையலறை எனப்படும் பொது உணவகங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். குறிப்பாக அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளிலும் Cloud kitchen ஐ ஏற்படுத்தி, உணவு விநியோகத்திற்கென ஒன்றிய அரசின் ONDC (Open Network for Digital Commerce) போல, தனி நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.

‘திருமணம், ‘குடும்ப’முறைகள் வேண்டாம்’ என்று முடிவெடுத்துத் தனித்து வாழத் துணிந்த பெண்களுக்கு மாவட்டந் தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்க வேண்டும். அதேபோல், மனைவி – கணவன் இருவரும் வேலைக்குச் செல்வதற்கு வசதியாக அரசே குழந்தை வளர்ப்பு மய்யங்களை (Creche) உருவாக்க வேண்டும்.

வயதானவர்களைப் பராமரிக்க, எளிய மக்களுக்கும் பயன்படும் வகையில் அரசே முதியோர் இல்லங்களை (Retirement Homes) உருவாக்குதல் வேண்டும். பள்ளிகளில் இருந்தே பாலின சமத்துவம், பாலியல், குடும்ப வன்முறைத் தடுப்புச்சட்டங்கள் பற்றிய பாடங்களைத் தொடங்க வேண்டும். பாலின வேறுபாடு இன்றி மாணவர்களை அகர வரிசையில் அமர வைத்தல் வேண்டும்.

திருமணத்திற்கு முன்பே” கருத்தடைச் சிகிச்சை செய்பவர்களுக்கும் – பிள்ளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்குதல் வேண்டும். சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் சம உழைப்புக் கொடுக்காத ஆண்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்க வேண்டும்.

‘ஹவுஸ் ஒயிஃப்’களாக வாழ விரும்பும் பெண்களைக் குற்றவாளிகளாக அறிவித்துச் சட்டமியற்ற வேண்டும். குலத்தொழில் இழிவுகளை ஒழிக்க, “குலத் தொழில் ஒழிப்புத் துறை”யை உருவாக்குதல் வேண்டும். ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்தோருக்கு “ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு” Inter Caste Quota வழங்குதல் வேண்டும்.

’ஜாதியற்றோர் நலத்துறை” என்ற தனி அமைச்சகத்தை உருவாக்கி ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்தோரும், அவர்களது வாரிசுகளும் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப் படுத்த “ஜாதியற்றோர் உற்பத்திகள்” “Casteless Prodocts” என்ற புதிய Brand உருவாக வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஜாதி, மத மறுப்புமணம் செய்தவர்கள் தொழில் முனைவோர்களாக உயர DICCI, BICCI, FICCI போல InterCaste Chamber of Commerce and Industry (ICCI) யை உருவாக்க வேண்டும்.

ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சித் துறைகளின் எல்லாவகை ஏலங்கள், காண்ட்ராக்ட்டுகள், கடைகளில் ஜாதிவாரி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாதித் திமிரையும், ஜாதி அடிமைத்தனத்தையும் பயிற்றுவிக்கும் கிராம தெய்வம், நாட்டார் தெய்வம், குலதெய்வக் கோவில் வழிபாடுகளையும், பொங்கல் விழாக்கள், ஜல்லிக்கட்டுகளையும் தடைசெய்! ஜாதி,. திருமணம், குடும்ப முறைகள் அழிய வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இது சாத்தியாவது அத்தனை எளிது என்றாலும் ஒரு நல்ல ஆரம்பம்.

Leave a Comment