• Home
  • யாக்கை
  • கிட்னி நல்ல நண்பன்… மோசமான எதிரி

கிட்னி நல்ல நண்பன்… மோசமான எதிரி

Image

கொடுமையிலும் கொடுமையான வேதனை

சிறுநீர்ப் பாதையில் கற்கள் அடைத்துக்கொள்வதால் உண்டாகும் வேதனை இருக்கிறதே, அது எதிரிக்கும் வரக்கூடாது என்று நினைக்கும் அளவுக்குக் கொடுமையானது. ஆகவே, சிறுநீரகம் பற்றியும் அதனை பராமரிப்பது குறித்தும் அறிந்துகொள்வோம்.

தொந்தரவு கொடுக்காத வரையிலும் மனிதர்கள் எந்த ஓர் உள் உறுப்பு பற்றியும் கண்டுகொள்வதே இல்லை. சிறுநீரகம் எங்கு அமைந்திருக்கிறது என்பதைக் கூட பலரும் அறிந்திருப்பதில்லை.

முதுகுக்குக் கீழ் தண்டுவடத்தின் இருபுறமும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். வளர்ச்சியடைந்த சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது. பெண்களுக்கு 115 முதல் 155 கிராம் எடை இருக்கும். இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில் 20 முதல் 25 சதவிகிதத்தை சிறுநீரகம் பெறுகிறது.

உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. இவையே ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்றன.

சிறுநீரகத்தில் எந்தவொரு தடை, சிக்கல் என்றாலும் அது ஆரம்பத்தில் தெரிவதில்லை. ஒரு சிறுநீரகம் பழுதடைந்தாலும் மற்றொரு சிறுநீரகம் சிறப்பாக வேலை செய்வதால் பெரும்பாலும் பிரச்சனை முற்றிய நிலையில்தான் தெரியவருகிறது. எனவே, சிறுநீரக நோய்களை சைலன்ட் கில்லர் என்று எச்சரிக்கிறார்கள்.

அதேநேரம், முறையாக சிறுநீரகத்தைப் பராமரிப்பு செய்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அது தொந்தரவு கொடுக்காமல் அதனுடைய வேலையை செய்துகொண்டே இருக்கிறது. எனவே, இந்த ஆறு கட்டளைகளை  கடைப்பிடித்தாலே சிறுநீரகத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

ரத்த அழுத்தத்தை கவனிச்சுக்கோங்க…

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி என்று இருக்க வேண்டும்.

ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் இருப்பதாக அர்த்தம். வாழ்க்கை முறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். எனவே ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

  • இனிப்பை குறைச்சுக்கோங்க

சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகத்தையும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

  • உப்பு வேண்டாங்க…

வயிறு நிரம்புவதற்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, அத்தனை சத்துக்களும் நிரம்பிய உணவு சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டும். கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுபவர்களே உடல் எடை அதிகரிப்புக்கு ஆளாகிறார்கள். உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகும். இதன் அடுத்த கட்டமாக ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது.

எனவே, உணவில் இனிப்பையும் உப்பையும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே உப்பு போதும். இதைவிட குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பொதுவாக பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் அளவுக்கு அதிக உப்பு உள்ளது. ஆகவே, செயற்கை உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • தண்ணீர் குடிச்சிக்கிட்டே இருங்க

நம் இந்திய நாட்டைப் பொறுத்த வரையிலும் வளர்ந்த ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவது தவறு. சீரான இடைவெளியில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.

இப்போது ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு எளிதில்  தாகம் எடுப்பது இல்லை. அதனால் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகிறார்கள். எந்த சூழலில் இருந்தாலும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

அதேநேரம், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்பவே தண்ணீர் அருந்த வேண்டும். ஒருசிலர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தைப் பாதித்துவிடலாம்.

  • புகையை நிறுத்துங்க

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் புகைத்தல் அதிகரித்துவிடும். எனவே, புகைக்கும் பழக்கத்தை தடுத்து நிறுத்திவிடுங்கள்.

  • வலி நிவாரணிகளை குறைச்சுக்கோங்க

தலைவலி, கால் வலி என்றதும் தாங்களாகவே வலி நிவாரண மாத்திரைகள் போட்டுக்கொள்வது இப்போது சகஜமாகிவிட்டது. இப்படிமூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கிறது. எனவே, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த வலி நிவாரணிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தற்கால வலியை பொறுத்துக்கொள்வதற்குப் பயந்தால், எதிர்காலத்தில் அதைவிட மோசமான வலியை அனுபவிக்க நேரிடும்.

இந்த ஆறு கட்டளைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்களுக்கு சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். அதேநேரம், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதும் ஒரு கடமை.

குறிப்பாக 40 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வப்போது சிறுநீரகத் தொற்றுக்கு ஆளாகும் நபர்களும் சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

இந்த பரிசோதனை செய்துகொள்ளத் தவறினால் சிறுநீரகச் செயலிழப்பை லேட்டாகவே கண்டறிய முடியும். சிறுநீரகம் செயல் இழந்தால் வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். மிகவும் பிரச்னை முற்றிவிடது என்றால் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டியதும் ஏற்படலாம். இவை எல்லாம் மிகவும் செலவு வைக்கக்கூடியது மட்டுமின்றி அதிக வேதனையும் தரக்கூடியவை. எனவே, இந்த பிரச்னைகள் வராமல் பாதுகாத்துக்கொள்வதே முக்கியம்.

சிறுநீரகத்துக்கு ஏற்ற உணவுகள்

வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் காரணமாக சிறுநீர் கழித்தல் அதிகமாகி சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.

எலுமிச்சையில் நிரம்பியிருக்கும் வைட்டமின் சி உடலின் நச்சுத்தன்மையை அகற்ற உதவும் என்பதால் எலுமிச்சை சாறு குடிக்கலாம். அதேபோல், இஞ்சியிலிருக்கும் கால்சியம், அயோடின், இரும்பு போன்ற தாதுக்கள் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. பூண்டில் உள்ள மாங்கனீசு, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் பண்புகள் சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும்.

வேகவைத்த முட்டைகளில் இருக்கும் புரதம் சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கிறது. அதேபோல் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஃபோலேட் நிரம்பியிருப்பதால் சிறுநீரகத்தைப் பாதுகாக்கிறது.

கொத்தமல்லியில் இருக்கும் மாங்கனீசு, இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தை சுத்திகரிக்கின்றன. ஆகவே, இந்த உணவுப் பொருட்களை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

கிட்னியை நண்பராக வைத்துக்கொள்ளுங்கள். அது எதிரியாக மாறிவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.