இது தாங்க சாதனை
துன்பத்தை தனியே அழுது தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், வெற்றியை, பரிசு கிடைத்ததை, படைத்த சாதனையை, கிடைத்த பாராட்டுகளை நிறைய பேரிடம் பகிர்ந்துகொள்வதே மகிழ்ச்சி. அதற்காகவே குடும்பம் என்ற அமைப்பு தேவைப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகள் யாரும் வாழப்போவது இல்லை. யாரும் எதையும் கொண்டு போகப் போவதும் இல்லை. யாருக்கு என்ன நடக்கும், எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்பதும் தெரியாது. எனவே, வாழும் கொஞ்ச காலத்தை குடும்பத்தோடு கொண்டாடுவதே நல்வாழ்வு.
மனிதர்கள் தனித்தனி தீவுகள் என்றாலும், கூடிச்சேர்ந்து வாழும் வகையிலே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, மனிதரின் உடல் அவருக்கே உரித்தான சொத்து என்பது போன்று குடும்பமும் அவரது சொத்து தான். ஏனென்றால் குடும்பம் என்ற அமைப்பு தானே அமைந்தவை. ஒவ்வொரு நபரும் அந்த குடும்பத்தின் தவிர்க்கமுடியாத அங்கம்.
குடும்பத்தின் அருமை தெரிவதாலே சிலர் கண் காணாத தேசத்துக்குச் சென்று கடுமையாக உழைக்கிறார்கள். பிள்ளைகளுக்கு உணவு வைத்துவிட்டு தாய் பட்டினி கிடக்கிறாள். தம்பியை படிக்க வைப்பதற்கு அண்ணன் வேலைக்குப் போகிறான். சொந்தத்தில் திருமணம் செய்கிறார்கள், உறவினருக்கு ஒரு பிரச்னை என்றால் ஒன்று கூடுகிறார்கள். சண்டை போடுகிறார்கள், பின்னர் அவர்களே சேர்ந்தும் கொள்கிறார்கள்.
பொதுவாக குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு வறுமை தடையே இல்லை. அதனால் தான் பணக்காரர்களை விட ஏழைகள் அதிகம் சிரிக்கிறார்கள், கூட்டமாக சேர்ந்து வாழ்கிறார்கள்.
பணம் சம்பாதிக்கும் நபர் எத்தனை தூரம் பொறுப்புடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்கிறாரோ, அந்த அளவுக்கு அந்த குடும்பம் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறது. பணத்தின் அடிப்படையில் குடும்ப உறவு நிலைப்பதில்லை. அன்பு மற்றும் அரவணைப்பு ஆகிய கண்ணுக்குத் தெரியாத நூலில் தான் குடும்பம் என்ற அமைப்பு கட்டப்பட்டுள்ளது.
சம்பாதிக்கும் நபர் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும் என்று எண்ணுவதாலே சண்டை, தகராறு, பிரிவுகள் ஏற்படுகின்றன. பணம், அதிகாரத்தைக் காட்டி குடும்பத்தை அடிமைப்படுத்த நினைத்தால், அந்த குடும்பம் சிதறிப்போகிறது. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களும் விலகிப் போகிறார்கள்.
சரி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு என்ன செய்யவேண்டும்..?
முதல் முக்கியமான விஷயம் நேரம் ஒதுக்குதல். எத்தனை பிஸியான நபராக இருந்தாலும், எத்தனை முக்கியமான வேலைகள் காத்திருந்தாலும் குடும்பத்திற்குப் போதிய நேரம் ஒதுக்கியே தீர வேண்டும். கடுமையான வேலை நெருக்கடிகளுக்கு இடையிலும் சாப்பிடவும் குளிக்கவும் நேரம் ஒதுக்குவது போன்று குடும்பத்தினருடன் பேசுவதற்கு தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் நேரத்தில் அனைவரும் குடும்ப அங்கத்தினராக இருக்க வேண்டுமே தவிர, குடும்பத் தலைவனாக, அதிகாரியாக, மாணவனாக, மருத்துவராக, வழக்கறிஞராக நடந்துகொள்ளக் கூடாது. ஒரு கணவனாக, அப்பாவாக, அம்மாவாக, பிள்ளைகளாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் கண்டிப்பானவர் என்றாலும், வீட்டில் அந்த முகத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அலுவலகத்தில் ஐம்பது பேர் நான் சொல்வதைக் கேட்கிறாங்க, பிள்ளைங்க கேட்பதே இல்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. அப்படி இயல்பாக இருப்பதே பிள்ளைகளின் இயல்பு.
வீட்டில் ஒவ்வொரு நபர் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்பது முக்கியம், அன்றைய தினம் என்னவெல்லாம் நடந்தது என்று கலந்துரையாடல் நடக்க வேண்டும். அலுவலகத்தில் நடந்த ஜாலியான, வித்தியாசமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டால், மற்றவர்களும் பேசுவார்கள். இது ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு உதவும்.
பிள்ளைகள் தவறு செய்தால் கண்டிப்பது எத்தனை முக்கியமோ அது போல் பாராட்ட வேண்டியதும் அவசியம். குறிப்பாக சின்னச்சின்ன விஷயங்களுக்கும் மனதாரப் பாராட்டுங்கள். அவ்வப்போது சின்னச்சின்னதாக பரிசு கொடுங்கள். உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சோகம் இருந்தால் சொல்லி ஆறுதல் பெறுங்கள். இவை எல்லாமே பிள்ளைகளையும் உறவுகளையும் உங்களிடம் நெருங்க வைக்கும்.
பிள்ளைகள் வளர்ப்பு, சமையல் போன்றவற்றில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து போதிய பங்களிப்பு செய்ய வேண்டும். இதுவே பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது மதிப்பு உண்டாக்கும்.
குடும்பம் என்றால் கண்டிப்பாக சண்டை இருக்கத்தான் செய்யும். சண்டை போடுங்கள். அந்த சண்டைக்கு யார் காரணமாக இருந்தாலும் பரவாயில்லை, ஒற்றுமைக்காக விட்டுக்கொடுங்கள்.
குறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது மிகவும் முக்கியமானது. கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுகள் எல்லோரும் சாதாரண மனிதர்கள் தான். மனிதர்கள் என்றாலே எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கவே செய்யும். தவறுகள், குறைகளுடன் அனைவரையும் ஏற்றுக்கொள்வதே முக்கியம்.
கண் பார்வை குறை இருக்கிறது என்பதற்காக தங்கள் குழந்தையை யாரும் தள்ளி வைப்பதில்லை. கண்ணாடி வாங்கிக்கொடுத்து, அந்த குறையை சரி செய்துவிடுகிறோம். அதேபோல் குடும்பத்தில் யாரிடமாவது குறை இருந்தால், அதனை சரி செய்தல் வேண்டும். தீர்க்க முடியாத குறை என்றால் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான்கு பேர் கொண்டது மட்டுமே குடும்பம் அல்ல. ஆகவே, ஏதேனும் குடும்ப விழா, ஊர் விசேஷம் என்றால் குடும்பத்துடன் செல்லுங்கள். அந்த தருணங்களில் பிறருக்குத் தொந்தரவு தராமல் பழகுதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு, குடும்பத்தினரின் தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ளவதும் முக்கியம். வருடம் ஒரு முறை சுற்றுலா செல்லுங்கள்.
குடும்பத்தில் யாருக்கேனும் ஒரு பிரச்னை என்றால் அதனை காது கொடுத்துக் கேளுங்கள். ஆலோசனை கூறுங்கள். ஆனால், அதன்படி அவர் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன் விளைவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை.
எங்கு போய் சுற்றினாலும் வீட்டுக்குத் தான் திரும்ப வேண்டும். எத்தனை வெற்றி பெற்றாலும் குடும்பத்தினரிடம் தான் உண்மையான மகிழ்ச்சியைக் காண முடியும். எத்தனை பெரிய தோல்வி என்றாலும் அவர்கள் மட்டுமே கடைசி வரையிலும் உடன் நிற்பார்கள்.
எனவே, குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரையும், உங்கள் உடலின் ஒரு அங்கமாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள்.