கபில்தேவ் செய்த மேஜிக்

Image

தனி மனிதரால் சாதிக்க முடியும், நம்புங்க

ஒரே ஒரு மனிதனின் ஆழ்மன சக்தி, ஒட்டுமொத்த உலகிற்கும் நன்மை செய்யும் அப்படித்தான் மின்விளக்கு கண்டுபிடித்த எடிசன் நம்பிக்கை, இந்த உலகிற்கே ஒளியூட்டுகிறது. அப்படித்தான் கபில்தேவ் மனதில் இருந்த நம்பிக்கை, இந்தியாவை உலகக் கோப்பையில் வெற்றி அடைய வைத்தது. 

183 ரன்கள் மட்டுமே எடுத்து திரும்பிய இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் மயான அமைதி நிலவியது இந்த ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தூசு என்பதால், தோல்வியை ஒப்புக்கொள்வது போல் அத்தனை வீரர்களும் அமைதியாக இருந்தனர்.

ஆனால், கபில் கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் அறைக்குள் நுழைந்தார். ‘’நம்மை அவர்களால் 183 ரன்களுக்குள் சுருட்ட முடிகிறது என்றால், நிச்சயம் நம்மாலும் அவர்களை அதற்குள் சுருட்டிவிடலாம். ஆடுகளம் இன்று பவுலர்களுக்கு கைகொடுக்கிறது. வாருங்கள் அடித்து துவம்சம் செய்வோம்’’ என்றார்.

திடீரென மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போன்று துள்ளியெழுந்தது இந்திய அணி. அந்த உற்சாகம், அந்த நம்பிக்கை.. அது கொடுத்த சக்தி இந்திய வீரர்களுக்கு வெற்றியை பக்கத்தில் காட்டியது. ஆடுகளத்தில் இறங்கிய இந்திய அணி.

குறைவான அணிகளே தேவை என்பதால் மே.இ. தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹெய்ன்ஸ், கிரீனிட்ஜ் இருவரும் கொஞ்சமும் பதட்டமில்லாமல் விளையாடத் தொடங்கினார்கள். ரன்களை கட்டுப்படுத்துவது முக்கியம் அல்ல, விக்கெட்களை எடுப்பதே தேவை என்பதால் டெஸ்ட் போட்டியைப் போலத் தாக்குதல் வியூகம் அமைத்தார் கபில்.

ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பல்வீந்தர் சிங் சந்து வீசிய ஒரு ஒரு பந்தை ஆட விரும்பாமல் கிரீனிட்ஜ் மட்டையை உயர்த்தினார். அது இன்ஸ்விங்கர் என்பதை அவர் கணிக்கவில்லை. கிரீனிட்ஜின் கை உயர்த்தியிருக்க, பந்து உள்ளே புகுந்து ஆஃப் ஸ்டெம்பைச் சாய்த்தது. 5 ரன்களிலேயே முதல் விக்கெட் விழுந்ததால் இந்தியாவுக்கு நம்பிக்கை துளிர்த்தது.

அடுத்து வந்த ரிச்சர்ட்ஸ் இழந்துவிட்ட விக்கெட் பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் அலட்டிக்கொள்ளாமல் வழக்கமான அதிரடியை மேற்கொண்டார். ஸ்கோர் 50ஆக இருக்கும்போது ஹெயின்ஸ் ஆட்டமிழந்தாலும் ரிச்சர்ட்ஸின் தாண்டவத்தைப் பார்க்கும்போது, இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை என்றே வர்ணனையாளர்கள் கணித்தார்கள்.

ஆனால், கபில் நம்பிக்கையுடன் காத்திருந்த தருணத்தில் அந்த அதிசயம் நடந்தது. மதன்லாலின் பந்து ஒன்றை ரிச்சர்ட்ஸ் புல் ஷாட் அடித்தார். பந்தின் தையல் பகுதி தரையில் பட்டதில் பந்து எழும்பியதும் சற்றுத் திசை மாறியது. மட்டையின் மத்தியில் படாமல் சற்றே மேலே பட்டு உயர எழும்பியது. மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த கபில் தலையை அண்ணாந்து பந்தைப் பார்த்தபடி பின்னால் ஓடினார். பந்து பறந்த திசையைக் கணித்தபடி ஓடினார். பந்து விழும் இடத்தைச் சரியாகக் கணித்து கேட்ச் பிடித்தார். கபில் பிடித்த அந்த கேட்ச், ஆட்டத்தையே புரட்டிப் போட்டது. அந்த தருணத்திலேயே ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகிவிட்டது.

ஸ்கோர் 66 ஆக இருக்கும்போது கோம்ஸும் லாயிடும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து பேச்சஸ் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ஜெஃப் துஜோனும் மார்ஷலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொறுமை காட்டினார்கள். ஆனாலும், அமர்நாத்தின் புதிரான பந்து வீச்சு துஜோனின் ஸ்டெம்பைத் தட்டிச் சென்றது. துஜோன் நொந்துபோனார். அதன்பிறகு மளமளவென விக்கெட்கள் சாய, மேற்கிந்தியத் தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்.

கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று நினைத்த வெற்றிக்கோப்பை இந்தியாவின் கைக்கு வந்தது. இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அந்த வெற்றி எதிரொலித்தது. அத்தனை இந்தியர்கள் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம். கிரிக்கெட் கூட்டு விளையாட்டு என்றாலும், இந்த வெற்றிக்கு சொந்தமான ஒரே ஒரு நபர் கபில் மட்டுமே. அவரது ஆழ்மன நம்பிக்கையே இந்தியாவை கிரிக்கெட் தேசமாக மாற்றியது.

ஒரு தனி நபரால் ஒரு அணியைக் கட்டுப்படுத்தி, உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்றால், அது எல்லோருக்கும் சாத்தியம்தான்.

இந்த வகையில், ஆழ்மனதை பயன்படுத்தி வாழ்க்கையை வெற்றி அடைய நினைப்பவர்களுக்கு முதல் தேவை நேர்மறை பார்வை. நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதையே இந்த உலகம் உங்களுக்குக் காட்டும். கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு, இந்த உலகை  பார்த்தால், கருப்பு நிறமாகவே தென்படும். மஞ்சள் கண்ணாடி என்றால் மஞ்சளாக மாறிவிடும். அவ்வளவுதான்.

Leave a Comment