பொசுக்கு உண்மையைப் பேசிட்டாரே
பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துவருகிறது என்று பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினத்திற்கு நடிகர் விஜய் அறிக்கை விட்டிருந்தார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அத்தனை பேரும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்திருப்பதாக குறை கூறியிருந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய குற்றச்சாட்டையே கனிமொழியும் வழி மொழிந்திருக்கிறார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது என்பதை அவரது அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரது அறிக்கையில், ‘’பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழக நிலவரம் மோசமாக இருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும், இப்படி ஒப்புக்கொள்ளலாமா என்பதே கேள்வி.