• Home
  • ஞானகுரு
  • ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கை மாறிவிடும்.

ஒரே ஒரு வார்த்தை, வாழ்க்கை மாறிவிடும்.

Image

மகிழ்ச்சிக்கு வழிகாட்டி

ஐ லவ் யூ என்று தைரியமாகச் சொன்னதன் மூலம் எத்தனையோ பேர் வார்த்தை மாறியிருக்கிறது. முடியும் என்று சொல்லி முன்வந்தவர் எத்தனையோ பேர் ஜெயித்திருக்கிறார்கள். இதை செய்ய என்னால் முடியாது என்று தைரியமாகச் சொன்ன பலர் நிம்மதியாக இருக்கிறார்கள். வார்த்தைகளே வாழ்க்கையை சீர்படுத்துகின்றன.

அதேநேரம், இந்த உலகிலேயே மோசமான ஆயுதம் எது என்று கேட்டால், தயங்காமல் சட்டென்று சொல்ல முடியும்.

நாக்கு. ஆம், நாக்கை விட வலிமையான ஆயுதம் வேறு எதுவும் இல்லை. ஒரே ஒரு வார்த்தையில் உயிரை விட்டவர்கள் எத்தனையோ பேர் உண்டு. ஒரே ஒரு வார்த்தைக்காக ஏங்கியவர்கள் எத்தனையோ பேர் உண்டு. வார்த்தை கொல்லவும் செய்யும், வெல்லவும் செய்யும்.

எனவே, பேசும் வார்த்தையில் கவனம் வைப்பது மிகவும் முக்கியம். வள்ளுவன் சொன்னது போன்று, நாக்கினால் சூடு போடக்கூடாது. நாம் பேசும் வார்த்தைகள், பிறருக்கு அன்பு தருவதாக, ஆறுதல் தருவதாக, துயரம் போக்குவதாக, நம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும்.

பேசும் வார்த்தைக்கு உயிர் இருக்க வேண்டும். அதாவது, உண்மையான உணர்ச்சியுடன் பேச வேண்டும். அப்போதுதான், பேச்சின் மூலம் ஒருவரை தொட முடியும். கனிவான வார்த்தைகள் உயிரைக் காக்கும். கருணையான வார்த்தைகள் காலம் அறிந்து சொன்ன வார்த்தைகள் துன்பத்தை தவிர்க்கும்.

தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும். நகைச்சுவை வார்த்தைகள் மன இறுக்கத்தைத் தளர்த்தும். பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடும்.

பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும். பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும். வாழ்த்துகின்ற வார்த்தைகள் வசந்தத்தைக் கொடுக்கும்.

ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். முடித்து வைக்கவும் முடியும். சில வார்த்தைகள் கசக்கும். சில வார்த்தைகள் இனிக்கும். சில வார்த்தைகள் இருட்டைப் போக்கும். சில வார்த்தைகள் மயில் இறகு போல் இதமாக இருக்கும்.

ஒரு ஆட்டோ முதுகில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’ – இந்த வாசகத்தைப் படித்தவர்களால், பேரம் பேச மனம் வராது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு..?

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’

இதை பார்த்தவுடன் புன்னகை வருகிறதல்லவா..? அதுதான் முக்கியம். வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.

எனவே, நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்…

‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’

எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால்  வாழ்க்கையே அழகாகும்.

இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவருக்கு எதிரே வந்த ஒரு பிச்சைக்காரர், ‘’எஜமானே,,, எனக்கு எதாவது உதவி செய்யுங்கள்,உணவு சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது” என்று உண்மையான பசியுடன் கேட்டான். ஆனால் அப்போது டால்ஸ்டாய் நிலைமையும் அப்படித்தான். அவரிடமும் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. எனவே  அந்த பிச்சைக்காரரிடம் மிகவும் கனிவான குரலில், ‘அன்பு சகோதரனே… என்னை மன்னித்துவிடு. என்னிடம் நீ கேட்கும் உதவியை செய்வதற்கு பணம் எதுவும்  இல்லை’ என்றார் உண்மையான வருத்தத்துடன். .

அவரது வார்த்தையை கேட்ட பிச்சைக்காரர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ‘’மிகவும் நன்றி எஜமானே… நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று சொன்னான்.

டால்ஸ்டாய்க்கு குழப்பம் வந்துவிட்டது. நாம் எதுவுமே தரவில்லை. ஆனால், அவரோ ஏதோ வாங்கியவர் போன்று மகிழ்ச்சி அடைகிறாரே என்று யோசித்து, அதை அவரிடமே கேட்டார்.

‘எஜமானே, என்னை எல்லோரும் ஒரு சாதாரண மனிதனாகக்கூட கருதுவதில்லை. நீங்களோ சகோதரனே என்று அழைத்தீர்கள். பரிவுடன் உங்கள் நிலவரத்தைச் சொன்னீர்கள்… நீங்கள் என்னிடம் எதுவும் பேசாமலே போயிருக்க முடியும். என்னை மதித்து என் கோரிக்கையை ஏற்க முடியவில்லை என்று வருத்தப்பட்டீர்கள். அது நீங்கள் எனக்கு கொடுத்த விலை மதிக்க முடியாத வெகுமதி’ என்று சிரித்தார்.

எனவே, வார்த்தைகளை கச்சிதமாக பயன்படுத்துங்கள். எல்லா வார்த்தைகளும் பிறருக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சியைத் தரட்டும்.

Leave a Comment