என்ன செய்தார் சைதை துரைசாமி – 364
எந்த ஒரு பணி செய்வது என்றாலும் ஆட்சியில் இருக்கும் காலத்திலேயே செய்து முடித்து நல்ல பேரை தட்டிச்செல்ல வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கும். அதனாலே குறுகிய காலத் திட்டங்களையே பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மேயர் சைதை துரைசாமி மற்றும் அன்றைய முதலவர் செல்வி ஜெயலலிதாவின் பார்வையும் வித்தியாசமாக இருந்தது.
அவசரகதியில் திட்டங்களைக் கொண்டுவருவதால் யாருக்கும் முழுமையான பயன் கிடைக்காது என்பது தெரிந்தே கூவம் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கினார். இது குறித்து தொடர்ந்து பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சரியான ஆரம்பம் பாதி வெற்றி என்று சொல்வார்களே, அதற்கேற்ப கூவம் நதியின் சீரமைப்புப் பணிக்காக, மூன்று ஆண்டுகளில் குறுகிய காலத் திட்டமான 60 துணைத் திட்டங்களைச் செயல்படுத்திட அறுநூற்று 4 கோடியே 77 இலட்சம் ரூபாய்க்கான நிர்வாக அனுமதியை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள், சரியான முறையில், சரியான திசையில் சிந்தித்து, கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்து, அத்திட்டத்தை செயல்படுத்த, ’சென்னை நதியின் சீரமைப்பு அறக்கட்டளை’ என்னும் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கி, முன்னுரிமை அடிப்படையில் பணிகளை வரிசைப்படுத்தி மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த செயல் திட்டம் வகுத்து, வெறும் சொல்லளவில் நில்லாமல் தேவையான நிதி ஒதுக்கீடு வழங்கி, எட்டாண்டு கால அவகாசத்தில் பணிகளை முடித்திடும் வகையில், மாண்புமிகு அம்மா அவர்கள் தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்படுத்தும் வெற்றித் திட்டம் இது!
இந்த மாபெரும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளான, பருத்திப்பட்டு அணையிலிருந்து கூவம் முகத்துவாரம் வரையிலான 27.3 கி.மீட்டர் நீளமுள்ள கூவம் நதிப் பகுதியை சீரமைத்திட 604 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவிலான ஓருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டத்திற்கு புரட்சித்தலைவி அம்மா நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்து அத்தனை பேர் பாராட்டையும் பெற்றார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.