அடிமைக்கு எதற்கு பாராட்டுவிழா?
’தைரியம் என்றால் ஜெயலலிதா என்றே கொண்டாடப்படுகிறார். மிகப்பெரிய ஆளுமை, புத்திசாலி, இரும்புப் பெண்மணி என்றெல்லாம் அவரது பிறந்த நாளில் பாராட்டித் தள்ளுகிறார்களே…’’ என்றபடி ஞானகுருவின் அருகில் அமர்ந்தார் மகேந்திரன்.
‘’இரும்புப் பெண்மணி என்று ஜெயலலிதா கொண்டாடப்பட வேண்டியவரா என்ற கேள்வியை ஒவ்வொரு நபரும் கேட்டுக்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு மாபெரும் அரசியல் போராட்டம் நடத்தி அந்த கட்சியை தன் கைக்குள் கொண்டுவந்து ஆட்சியையும் கைப்பற்றினார். அந்த வகையில் அவர் சுயம்புவாக உருமாறிய தலைவி. ஆனால், அவர் கடைசி வரை சசிகலாவுக்கு அடிமையாக இருந்தார் என்பதே மிகப்பெரிய முரண்.
கூடா நட்பு ஒருவரை எந்த அளவுக்கு கேடு என்பதற்கு மிகச்சரியான உதாரணம் ஜெயலலிதா. கேசட் கொடுத்து வளர்ந்த நட்பில் எந்த தவறும் இல்லை. அவரை தோழியாக தன் அருகே வைத்திருந்ததும் தவறு இல்லை. ஆனால், அந்த தோழிக்காக வளர்ப்பு மகன் என்று நாடகம் போட்டதும் தங்க, ஒட்டியாணம் போட்டுக்கொண்டு நடை போட்டதும் தமிழக மக்களுக்கு ரொம்பவே எரிச்சலூட்டியது. அதனாலே தோற்கடித்தார்கள்.
அதன் பிறகும் தோழியை அவர் கைவிடவில்லை. ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன் என்று பிரபலங்களின் வீடுகளை அடித்துப் பிடுங்கிக்கொண்டதும், கொடநாடு எஸ்டேட்டை வளைத்துப் போட்டு நிழல் ராஜ்ஜியம் நடத்தியதும் மிகப்பெரும் அவமானம். சசிகலா என்ற ஒரே ஒரு பெண்ணால் தினகரன், திவாகரன், இளவரசி என்று ஏகப்பட்ட திடீர் கோடீஸ்வரர்களும் மன்னார்குடி மாஃபியாக்களும் உருவானார்கள். அத்தனை பேரும் சேர்ந்து அடித்த கொள்ளைக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தது
பணமும், அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆதிக்க மனப்பான்மை ஏற்கத்தக்கது அல்ல. சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசியது யார், எதற்காக என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதா கைது செய்யப்பட்ட நேரத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் தராதவர்.
அவரது கட்சியினர் இன்றும் என்றும் பாராட்டுவார்கள். ஆனால், ஜெயலலிதா ஒரு வேலைக்காரியின் கட்டுப்பாட்டில் இருந்த அடிமை என்பது தான் உண்மை. எனவே, அதிகாரம், பணத்தால் எதுவும் சாதிக்க முடியாது என்ற உண்மையைப் புரியவைப்பதற்கு மட்டுமே ஜெயலலிதா பயன்படுவார்’’ என்றார் ஞானகுரு.