என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 102
மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபத்தை 2006ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி திறந்து வைத்த புரட்சித்தலைவி ஜெயலலிதா, அன்றைய ஆட்சியாளர்கள் சைதை துரைசாமிக்கு ஏற்படுத்தியிருக்கும் இடையூறு குறித்து வெளிப்படையாக அந்த திறப்பு விழாவில் பேசினார்.
அப்போது அவர், ‘’தனது சொந்த செலவில் சைதை துரைசாமி கட்டியிருக்கும் இந்த திருமண மண்டபத்தை திறந்து வைக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். நானும் அதற்கு சம்மதித்தேன். இது சம்பந்தமாக விளம்பரங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்தன. அவ்வளவுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்குப் பொறுக்கவில்லை. உடனே இந்த திருமண மண்டபத்தையே இடிப்பதற்கு சென்னை கார்ப்பரேசனிடமிருந்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்’’
இந்த டெமோலிசன் நோட்டீஸ் அனுப்பியதால் இன்றைய விழா நின்று விட்டதா? நான் வராமல் போனேனா? இந்த திருமண மண்டபத்தை திறக்காமல் விட்டுவிட்டேனா? இன்று கழக உடன்பிறப்புகள் ஐந்து ஜோடிகளின் திருமணம் இனிதே நடைபெறவில்லையா? எதனை சாதித்தார்கள்?
நிச்சயமாக எனக்கு அருமை சகோதரர் சைதை துரைசாமி மீது முழு நம்பிக்கை உண்டு. அப்படி கார்ப்பரேசன் வழக்கு போட்டால் போடட்டும். டெமோலிசன் நோட்டீஸ் அனுப்பினால் அனுப்பட்டும். சைதை துரைசாமி இதை நீதிமன்றத்தில் சந்தித்து நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன். அவருக்கு தேவையான உதவியை கழக சட்ட ஆலோசகரும், கழக உடன்பிறப்புகளும் வழங்குவார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்…’’ என்று மனப்பூர்வமாகப் பேசினார்.
இந்த விழா முடித்து காரில் ஏறிய சமயத்தில் சைதை துரைசாமியிடம் ஜெயலலிதா என்ன கூறினார் தெரியுமா?
- நாளை பார்க்கலாம்.