ஆயிரம் உணவகத்துக்கு ஆசைப்பட்ட ஜெயலலிதா

Image
  • என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 29

குறைந்த செலவில் மலிவு விலை உணவகத்தை நடத்தி ஏழைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கிவிட முடியும் என்று சைதை துரைசாமி சொன்னதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா, ‘உண்மையில் இத்தனை குறைந்த செலவில் நல்ல உணவு தயாரிக்க முடியும் என்றால் ஏன் ஹோட்டல்களில் அதிக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள், நிறைய ஹோட்டல்கள் நஷ்டம் என்று மூடுவது ஏன்?’ என்று ஒரு குறுக்குக் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கும் சரியான விடை வைத்திருந்தார் சைதை துரைசாமி. ‘’ஹோட்டல்கள் அமைந்திருக்கும் இடம் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த இடத்தின் வாடகை, பார்க்கிங், அலங்காரம், மின்சாரம் போன்றவை அதிக செலவு வைக்கின்றன. மழை, வெயில் போன்ற பல்வேறு காரணங்களால் விற்பனைக்கு பாதிப்பு ஏற்படும். ஆனாலும், அதிக லாபத்துக்கு ஆசைப்படாமல் முறைப்படி ஹோட்டல் தொழில் நடத்துபவர்கள் ஒருபோதும் நஷ்டம் அடைவதில்லை.

நாம் மாநகராட்சி இடத்தில் உணவகம் தொடங்கப் போகிறோம். மலிவு விலை உணவகம் என்பதும் நல்ல சுவையும் கொடுப்பது தெரிய வந்தால் எங்கிருந்தாலும் மக்கள் தேடி வந்துவிடுவார்கள். ஆகவே, விற்பனை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நாம் நிச்சயம் மலிவு விலை உணவகத்தை லாபகரமாகவும் நடத்த முடியும். அதற்கும் சில திட்டங்கள் இருக்கின்றன’’ என்றார் சைதை துரைசாமி.

அத்தனையும் தெளிவாகக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, கொஞ்ச நேரம் கண்களை மூடி யோசித்தார். அதன் பிறகு மலர்ந்த முகத்துடன், ‘’சரி, நீங்கள் சொல்வது போன்று செய்துவிடலாம். தமிழகம் முழுக்க 1,000 இடங்களில் மலிவு விலை உணவகம் நடத்துவோம். முதல் கட்டமாக சென்னையில் மட்டும் பரிசோதனை முயற்சியாக 200 வார்டுகளில் தொடங்கிவிடுவோம். இதுகுறித்து மாநகர பட்ஜெட்டில் அறிவித்து விடுங்கள்..’’ என்று அனுமதி கொடுத்தார்.

தன்னுடைய மலிவு விலை உணவகத் திட்டம் பிரமாண்டமாக செயல்படப் போகிறது என்றதும் சைதை துரைசாமிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இது குறித்து மாநகராட்சியின் முதல் நிதிநிலை அறிக்கையில் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என்று அறிவிப்பையும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டார் சைதை துரைசாமி.

இந்த அறிவிப்பு சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால்..?

  • நாளை பார்க்கலாம்.