இதுவே பில்லியர்ட்ஸ், ஸ்னோ பவுலிங்!

Image

பாரம்பரிய விளையாட்டு கோலிக்குண்டு!

நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று, கோலிக்குண்டு. கட்டை விரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரலை வரிசையாக வளைத்து, அதன் முனையில் மற்றொரு கையால் கோலிக் குண்டைப் பிடிக்க வேண்டும். அதைவைத்து தரையில் கிடக்கும் குண்டின் மேல் அடித்து ஆடும் விளையாட்டுக்கு கோலி அல்லது குண்டு விளையாடுதல் என்று பெயர். இதை, கோலிக்கா என்றும் சொல்வர்.  

இந்த விளையாட்டில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நிலத்தில் குறிவைத்து அடித்து குழியில் விழச் செய்யும் விளையாட்டு. இதைத்தான் குச்சி வைத்து அடித்து பில்லியர்ட்ஸ் என்று பணக்காரர்கள் விளையாடிக் கொண்டு இருகிறார்கள்.
‘அரங்கின்றி வட்டு ஆடியற்றே’ என  திருக்குறளிலும், குண்டு உருட்டுதல் எனப் பரிமேலழகர் எழுதியுள்ள உரையிலும் கோலிக்குண்டு பற்றிய செய்திகள்  காணப்படுகின்றன. அதனால், இந்த விளையாட்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கிறது. இந்த விளையாட்டு, சிந்து நதிக்கரையில் உருவாகிய ஹரப்பா நாகரிக காலத்தில் தோன்றியிருக்கக் கூடும் என்று தொல்பொருள் ஆய்வுகள் கூறுகின்றன. மொகஞ்சதாரா பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பலவகை கல்குண்டுகள் கிடைத்துள்ளன.
ரோம நாட்டு இலக்கியங்களிலும் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்டைய எகிப்திலும், களிமண், கல், கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட குண்டுகள் காணப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. எகிப்தின் கல்லறைகளிலும், அமெரிக்காவின் பழங்கால குடிகளின் கல்லறைகளிலும்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டில் குண்டு விளையாடப்பட்டதைக் காட்டும் புடைப்போவியங்கள் அந்நாட்டில் காணப்படுகின்றன. மேலும், நாகார்ஜுனா – கொண்டா பழங்குடியினர் இந்த விளையாட்டை விளையாடியதை இக்குவாஸ் காலத்துச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. இத்தகைய விளையாட்டை, பழங்கால ரோமானியர்கள் தீவிரமான விளையாட்டாக விளையாடியிருக்கின்றனர்.

பெரியவர்களும் குழந்தைகளும் பூமியில் வரையப்பட்ட வட்டத்தினுள் உருண்டையான கூழாங்கற்களைக் கொண்டு அந்த ஆட்டத்தை ஆடினார்கள். பின்னால் சலவைக் கல்லினால் கோலிக்குண்டுகளைச் செய்தார்கள். இன்று கண்ணாடிக் கோலிகள் வந்துவிட்டன. இதை விளையாட இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் வேண்டும். ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்துபோன்ற அமைப்பே, கோலிக்குண்டு ஆகும். இதை பளிங்கி (பளிங்கு  கல்) என்றும் சொல்வர். பொதுவாக, இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும்.
நமது முன்னோர்கள் இந்த கோலிக் குண்டு விளையாட்டினை குழி போட்டும், கோடு போட்டும் இருவேறு வகைகளில் விளையாண்டனர். இதற்கு கூழாங்கற்களையும், சுண்ணாம்புக் குண்டுக் கற்களையும் பயன்படுத்தினர். 1970-ம் ஆண்டுக்குப் பிறகு அவைகள் கலர், கலரான கண்ணாடிக் குண்டுகளாக பரிணமித்தது. இந்த விளையாட்டில் சிறிய வகை இரும்புக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த கோலிக் குண்டு விளையாட்டுகளில் ஒற்றைக் குழி, மூன்று குழி, பேந்தா, ஆறுகுழி, லாக், தலைக்காய்  எனப் பல வகைகள் அடக்கம்.
ஒரு சுவரில் இருந்து அரை அடி தள்ளி குண்டு உள்ளே விழும் வகையில் சிறிய ஆழத்தில் ஒரு குழி தோண்டப்படும். சுமார் 8 அல்லது 10 அடி தூரத்தில் இருந்து குண்டுகளை அந்த குழிக்குள் உருட்டி விளையாடுவார்கள். இதுவே, ஒரு குழி ஆட்டம் என்பர். மூன்று அடி இடைவெளியில் நேர்க்கோட்டில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் குண்டுகளைப்போட்டும், அடித்தும், விளையாடுவார்கள்.  இது, மூன்று குழி ஆட்டம் எனப்படும்.

இதேபோன்று, அதே இடைவெளியில்  6 குழிகள் அமைத்து விளையாடுவது ஆறு குழிகள் ஆட்டம் எனப்படும். நீளவாக்கில் இரண்டாக பகுக்கப்பட்ட செவ்வகம் நிலத்தில் வரையப்பட்டு இருக்கும். இந்த செவ்வக வடிவம் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் நீளத்தில் காணப்படும். கோலிக்குண்டு, செவ்வகத்தைப் பிரித்து வரையப்பட்ட கோட்டில் நிற்காமல் செவ்வக கட்டத்தினுள் விழ வேண்டும். அதற்காக கோலி உருட்டுபவர் லாவகமாக அதனை கையாளும் விதம், சிறந்த கூர்நோக்குத் திறமையாகும். இவ்வாறு கோலிக் குண்டுகளை உருட்டி 10 புள்ளிகள் எடுக்கும்போது அதற்கு பழம் எடுத்தல் என்று சொல்வர். அவ்வாறு பழம் எடுத்தவர் வெற்றியாளராவார்.

இத்தகைய விளையாட்டு வகையை, பேந்தா என்று அழைத்தனர்.  தலைக்காய் என்று சொல்லப்படும் இந்த விளையாட்டு வகையானது, இன்று மால்களில் விளையாடப்படும் ‘ஸ்னோ பவுலிங்’ ஆட்டத்துக்கு ஒப்பானது. வரிசையாக கோலிகளை அடுக்கிவைத்து அதன் தலைவனாக ஒரு கோலிக்குண்டைத் தேர்வுசெய்ய வேண்டும். அந்த தலைவனை குறிபார்த்து அடித்தால், அத்தனை கோலிக்குண்டுகளும் நமக்குச் சொந்தம். அது அல்லாது மற்ற குண்டுகளை அடித்தால், அதற்கு வலதுபுறம் இருக்கும் கோலிக்குண்டுகளை எதிரணியினர் அள்ளிக்கொள்ளலாம்.
இந்த விளையாட்டில் தோற்றவர்கள் அடுத்தமுறை வெற்றி பெறுவதற்கான முனைப்போடு காணப்படுவார்கள். அவர்கள் வெற்றிபெற்றவர்களின் கோலிக் குண்டை, கை முட்டியால் தள்ளிக்கொண்டு அந்தச் செவ்வக கட்டத்துக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இவ்வாறு தள்ளிதள்ளி வரும்போது அவர்களின் கை முட்டுப் பகுதியில் ரத்தம் வருவதுண்டு. இந்த விளையாட்டில் தோல்வியடைந்தவர் சிறியவராக இருந்தால் குறிப்பிட்ட தூரத்துக்கு நொண்டி அடித்து வரவேண்டும்  அல்லது தோப்புக் கரணம் போட வேண்டும். இந்தப் பயிற்சிகள் இரண்டிலும் நோய்களை விரட்டும் உடற்பயிற்சி மட்டும் அல்ல, சிகிச்சையும் அடங்கி இருந்தது.
 ‘கோலிக்குண்டு விளையாடுவதன் மூலம் தொழில் ரகசியம், சேமிப்பு, வெற்றி பெறும் விதம் எனப் பல நுட்பங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதேநேரத்தில், சூதாட்டம்போல தோற்கிற இடத்தில் இருக்கக்கூடாது என்ற எச்சரிக்கையையும் கோலி விளையாட்டு நமக்குப் புரியவைக்கிறது. இதன்மூலம் கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகின்றன. விரல் நரம்புகள்  நன்கு செயல்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், ஒரு பொருளைக் கூர்ந்து கவனிப்பதால் கண் பார்வைக்கும் சிறந்த பயிற்சியாக இருக்கிறது’ என்கின்றனர் விளையாட்டு ஆசிரியர்கள்..

Leave a Comment